சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று சொல்வார்கள். ஓரளவிற்கு அது உண்மைதான். என்றாலும், எல்லா நேரங்களிலும் பொன்மொழி அடிப்படையிலேயே வாழ்வு நகர்கிறதா என்ன? காலத்துக்குக் காலம் ஒவ்வொன்றுமே மாற்றம் கண்டபடியேதானே இருக்கிறது?
அறைக்கு வெளியே வைத்தே, "டேய் செல்போன்ல பார்த்ததை எல்லாம் உள்ள பண்ண நினைக்காத அவங்க விருப்பமும் முக்கியம்" எனப் பையனிடமோ, "ஏம்மா இங்க பாரு. மொத நாள் கூடக் குறைய இருக்கும்தான். அதுக்காக நாளைக்கு காலையிலயே ஆண்மை இல்லாதவன்னு கோர்ட் வாசல்ல போயி நின்னிடாத" எனப் பெண்ணிடமோ சொல்கிற மாதிரிதான் காலம் இருக்கிறது.
இயற்கை உந்துதல் சார்ந்த இதிலேயே, நாசுக்குகளைச் சொல்லித்தர வகுப்புகள் இப்போது வந்து விட்டன. அதே போலத்தான் எழுத்து சார்ந்த வகுப்புகளும். கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.
முழுக்க முடியாதுதான். ஆனால் என்னளவில் ஒரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்ட முடியும். இதுமாதிரியான வகுப்புகளின் வழியாகத் தயக்கத்தை உடைக்க முடியும். அது உடைந்து விட்டால் அப்புறம் உன்பாடு. என்னையே எடுத்துக் கொண்டால், நான் முதலில் எழுதியது நாவல்தான். ஐந்து முதலைகளின் கதை நாவல் வெளியீட்டு விழாவில் வைத்து, "முதல்லயே நாவல்தானா? சிறுகதைலாம் எழுதி பார்க்கலையா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டார் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர். அவர் பல வருடங்களாகச் சிறுகதை எழுதுகிறார். ஆனால் நாவல் எழுதவில்லை இன்னும்.
காரணம், தயக்கம்தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். அந்தத் தயக்கத்தைச் சுற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டார், அவ்வளவுதான். ஏற்கனவே எழுத்து சார்ந்த துறையில் இருந்ததால் அந்தத் தயக்கத்தை என்னால் எளிதில் உடைக்க முடிந்தது. அப்புறம் என்னுடைய இயல்பான குணம். எதையும் நேருக்கு நேர் நின்று அச்சமின்றி உற்றுப் பார்ப்பது. அதனால் சாத்தியமாகி விட்டது. சரஸ்வதி கிருபையும் உண்டு.
எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தர் மிக நன்றாக எழுதுகிறார். அவ்வபோது எனக்கு அனுப்பி வைப்பார். அவரிடம் சொல்வதற்கு நாவலுக்குண்டான வாழ்க்கை ஒன்றும் இருக்கிறது. எழுதச் சொன்னால், "நாவலா? நானா? அது எப்படி முடியும்?" என்கிறார் படபடப்பாக. அந்த வடிவத்தைக் கண்டு அச்சப்படுகிறார். அந்த அச்சம் அவரிடம் இருந்து கழன்று கொள்கிற அன்று நிச்சயமாக நாவலை எழுதத் துவங்கி விடுவார்.
இதுமாதிரியான வகுப்புகளின் வழியாக அந்தத் தயக்கத்தையும் அச்சத்தையும் ஓரளவிற்குக் களைந்து விட முடியும் என்பதே என் கருத்து. பேயைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாலே பேயைப் பற்றிய பயம் நிச்சயம் போய்விடும். அதற்காக தயக்கமும் அச்சமும் போய்விட்டது எனச் சும்மா நினைத்துக் கொண்டு குண்டுச் சட்டியில் குதிரையையும் ஓட்டி விட முடியாது. எந்த ஒரு விஷயத்தைச் செய்வதற்குமே ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் மிக முக்கியம். வெறும் கயிற்றில் முழம்போட முடியாது. முழம்கை வேண்டும் அதற்கு.
இப்போது எழுத்தாளர் அபிலாஷ் நாவல் குறித்த வகுப்பு ஒன்றை இணையம் வழியாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். அபிலாஷை பொறுத்தவரை அவர் அடிப்படையில் ஆசிரியர் என்பதால் ஒரு விஷயத்தை எளிதாக விளக்கி விட முடியும். கூடவே எல்லா மொழி ஆக்கங்களையும் கூடுமான அளவிற்குப் படிக்கிறவர். தத்துவம் சார்ந்த படிப்பும் அவரிடம் இருக்கிறது.
அந்த வகுப்பில் நிச்சயம் பல்வேறு நாவல்கள் குறித்து பிரித்துத் தொகுத்துப் பேசுவார். இதன் வழியாக நாவல் என்கிற வடிவத்தின் மீது அச்சமற்ற ஒரு பிடிமானம் கிடைக்கக் கூடும். மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கையில், கம்பி வேலிப் பிடிமானம் இருக்கிற மாதிரி.
சந்தேகங்களைக் கேட்க முடியும். அதன் வழியாக உள்ளுக்குள் உருவாக்கி வைத்து இருக்கிற, ஒரு விஷயம் குறித்த தயக்கம் சார்ந்த கருத்துக்கள் உடைபடவும்கூடும். அந்தக் கருத்து உடைந்தால் போதும். முதலிலேயே சொன்ன மாதிரிதான். அதற்கப்புறம் உங்கள் பாடு. உள்ளுக்குள் திரண்டு வருகிற அந்த ஒன்றின் பாடு. எந்த விதை பொத்துக் கொண்டு மேலேறி வந்து விருட்சமாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் உரத்தை ஏந்திப் பெற்றுக் கொள்ளலாம், தப்பில்லை. தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன்.
கருத்துகள்