நேற்று எங்கள் பல்கலையின் இன்குபேஷன் செல்லின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து மருத்துவரும் மக்கள் பிரதிநிதியுமான எழிலன் ஆற்றிய உரை ஒரு பெரிய தாக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியதை என்னால் நேற்று காண முடிந்தது. உரை முடிந்த பின்னரும் மாணவர்கள் அவர் பேசிய கருத்துக்களைப் பற்றி தம்மிடையே விவாதித்தபடி சென்றனர். அவரிடம் கேள்வி எழுப்பி விவாதிப்பதில் மாணவர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். நேரம் அனுமதித்திருந்தால் ஒரு மணிநேரம் கூட கேள்வி-பதில் நீண்டிருக்கும். எழிலன் நகரமயமாக்கல் கட்டமைப்பு சார்ந்த சமூக நீதித்திட்டங்கள் பற்றி பேசினார். குறிப்பாக தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்துள்ள முக்கியமான நகரமயமாக்கல் திட்டங்களை விளக்கினார். முடிவில் ஜி.எஸ்.டி, இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் புரிதல் அற்று மத்திய அரசு செயல்படுவதாக கூறி, மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதியைப் பிரித்தளிப்பதன் அநீதியைப் பற்றி குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதை கரகோஷத்தில் இருந்து பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிடாத ஒரு முக்கிய பிரச்சினை மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மக்களை இடங்களைத் தீர்மானிக்கும் நடைமுறை. இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாக முடிவதன் ஒரு பிரதான காரணம் இதுவாகும்.
அதிக மக்கள் தொகை கொண்ட குறைவாக பொருளாதார பங்களிப்பு செய்யும் மாநிலங்களுக்கு அதிக மக்களை இடங்கள் தரப்படும் போது அவர்களிடம் செல்வாக்கு மிக்க கட்சிகள் மட்டுமே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெறும். அப்போது மற்ற மாநிலங்கள் கைவிடப்படுகிறன. இந்தி பெல்ட்டே இந்தியாவின் மையமாகிறது. சமமான பிரதிநுத்துவம் இல்லாமல் போகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநுத்துவம் அளித்தால் தென்னகம் புறக்கணிக்கப்படுவது துவங்கி காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கலவரங்களும், பிரிவினைவாதமும் காணாமல் போகும். இப்போதுள்ள நடைமுறையானது ஒரு சில மாநிலங்களுக்காக மட்டுமே அவர்களுடைய பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆள்கிறேன் பேர்வழி எனும் பெயரில் மற்ற மாநிலங்களை ஒன்றும் தம்முடன் ஒத்துப்போகும் படி வற்புறுத்துவது அல்லது அவர்களை புறக்கணிப்பது என இருக்கிறது.
பார்வையாளர்கள் எல்லாரும் எழிலனுடன் ஒத்துப் போகவில்லை. மாணவர்களில் ஒரு பகுதியினர் (வலதுசாரிகள் / கார்ப்பரேட் வளர்ச்சி கருத்தாளர்கள்) அவரைத் தொடர்ந்து விமர்சித்தபடியும் கலாய்த்தபடியும் தான் இருந்தனர். ஆனால் அதுவும் சேர்ந்ததுதானே விவாதம். நான் இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு சமூக அரசியல் விவாத நிகழ்வை இதுவரைக் கண்டதில்லை என்பதாலே சற்று திகைத்துப் போனேன்.
எழிலன் மற்ற திமுக பேச்சாளர்களைப் போல திராவிட மாடல், பகுத்தறிவாதம், பெரியாரியம் பற்றி பேசி அப்படியே கலைஞரின் சாதனைகளை விளக்கி அவரைத் திருவுருவாக்கினார். இதுவும் முக்கியம் தான் என நினைக்கிறேன் - இத்தனைக் காலமும் காங்கிரஸ் ஒரு பக்கம் நேரு, இந்திரா என திருவுருக்களைத் தோற்றுவித்து எல்லா ஊர்களிலும் தமது சித்தாந்தத்தைப் பரப்பியது; பின்னர் அவர்களுடைய இடத்தில் பாஜக வந்து இந்துத்துவாவை பரப்பி, மோடியை திருவுருவாக்கினார்கள். இவர்கள் பேசுவதற்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே என்றே தென்னகத்து மாநிலங்களுக்கு அப்போது தோன்றியது. இப்போது முதன்முறையாக திமுக பிற மாநிலங்களுக்கு சென்றும் தேசிய அளவிலும் திராவிட மாடல், சித்தாந்தம், கலைஞர் எனும் ஒரு எதிர்-கதையாடலை பரப்புவது ஒரு சிறந்த அரசியலாக உள்ளது. இப்போது இதைக் கேட்கும் பிற மாநிலத்தவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இது இருக்கும். ஆனால் இது கூடுதலாக அவர்களுடைய மாநில அரசியலிலும் தாக்கம் செலுத்தும் என நான் நம்புகிறேன். எல்லா மாநிலங்களிலும் சாதித் திரட்சியின் வலிமையைக் கொண்டு நிதியைக் கூடுதலாகப் பெற்று தமக்கு சார்பான திட்டங்களை நிறைவேற்றுவது தான் நடக்கிறது என்றாலும் ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து நலத்திட்டங்களைப் பார்ப்பதும், பகுத்தறிவுவாதத்தை முன்வைப்பதும் ஒரு நல்ல மாற்றத்தை இந்தியா முழுக்க கொண்டு வரும். அதனாலே திமுகவின் பேச்சாளர்கள் இந்தியா முழுக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஆங்கிலத்தில் இந்த கதையாடலைக் கொண்டு செல்ல வேண்டும், நூல்களை வெளியிட வேண்டும், தம் சித்தாந்தத்தின் அடிப்படையில் சினிமாக்களை எடுக்க வேண்டும், முடிந்தால் இந்தியிலும் இந்தி பெல்ட்டுக்கு சென்று உரையாற்ற வேண்டும். திராவிடம் இரு அகில இந்திய சித்தாந்தமாக வேண்டும்.
கருத்துகள்