தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது (https://youtu.be/z8Qv7zZBxq8?si=-Zr_5RZfCYFOoITX)
- பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்கிறது என்பார்கள். ஆனால் இன்று திட்டமிட்டு நம் ஆரோக்கியம் அழிக்கப்படுவதை விமர்சிக்க மாட்டார்கள். அதை விமர்சிக்கிறவர்களை இந்த மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் பழமைவாதிகள் என அழைப்பார்கள்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு பாரம்பரிய வாழ்க்கை முறைக்குத் திரும்புவதே என கார்டியன் சொல்கிறது.
அதாவது மேற்கத்திய உணவுகளை, உறையிலிட்ட உணவுகளைத் தவிர்ப்பது, விரதம் இருப்பது, குறைவான நேரம் உண்பது, மாலை ஆறு மணிக்கு மேல் சாப்பிடாதிருப்பது, கறிவகைகளை குறைவாக உண்பது, அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்வது.
முதலில், அரசு ஏழு மணிக்கு மேல் செயல்படும் உணவகங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். விலையை உயர்த்தி மக்கள் இரவில் வெளியே உண்பதைக் குறைக்க வேண்டும். ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் 7மணிக்கு மேல் செயல்பட தடைவிதிக்க வேண்டும். மதுக்கூடங்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே மக்களின் ஆயுளை 30 ஆண்டுகள் கூட்ட முடியும்.
அடுத்து உறையில் இடப்பட்ட துரித உணவுகளை சந்தையில் இருந்து குறைப்பதை அரசு தன் இலக்காக அறிவிக்க வேண்டும். இது ஏதோ சர்வாதிகாரம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் இதைப் போன்ற விதிமுறைகளை சிங்கப்பூரில் உள்ளன.
உணவுச் சந்தையை கட்டுப்படுத்தாத அரசு அரசல்ல தீவிரவாத அமைப்பு. காசுக்காக நம் மக்களை 20 வயதில் நீரிழிவும் 40 வயதில் மாரடைப்பும் வர வைக்கும் இந்த அரசு நம் உடலை சந்தைக்கு விற்கிறார்கள். இவர்களுக்கும் காலனியாதிக்கவாதிகளுக்கும் என்ன வித்தியாசம். சிறுகுழந்தைகள் சாக்லேட்டுகளையும் பாக்கெட் சிப்ஸையும் மட்டுமே கையில் கொண்டு திரிவதைக் காணும் போது ஏன் நம் குழந்தைகளை நாமே விஷமூட்டி அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பறிக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் நம் அரசே இதை ஆதரிக்கும் போது நம்மால் என்ன முடியும், சின்னச்சின்ன அளவில் எதிர்ப்பதைத் தவிர்த்து!
கருத்துகள்