மனுஷ் இப்படிச் சொல்வதால் குறைகள் கவனம் பெறும். அது முக்கியம் யாராவது இந்த நிகழ்வுகளை முறைப்படுத்த வேண்டும். இலக்கிய விசயங்களில் கடும் விமர்சனங்களே மிகவும் சரியான அணுகுமுறை என நினைக்கிறேன். எழுத்தாளர் எப்போதும் வெளியாளாகவே இருக்க வேண்டும். கவலை, பொறுப்பு, சொற்களில் கவனம் எல்லாம் இருக்கக் கூடாது. தார்மீகக் கோபமும் உண்மையும் மட்டும் போதும். அவ்விதத்தில் தமயந்தியின் விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது.
திமுக அரசின் முயற்சிகள் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை. ஆனால் அவர்களுடைய செயல்பாடுகளில் கோளாறுகள் தோன்றும்போது தட்டிக்கேட்க வேண்டும். அதில் மிகை இருந்தாலும் நல்லதே. மிகையை மட்டுமே நாம் பொருட்படுத்துவோம். மென்மையாக சொன்னால் யார் காதிலும் விழாது.
- அபிலாஷ்
%%%%
(...)
மாவட்ட தோறும் புத்தக கண்காட்சிகள் ஒரு பெரும் திருவிழா போல நடந்து வருகின்றன. பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளின் சங்கமமாக இந்த கண்காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் முன்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் நடந்ததில்லை. 38 மாவட்டங்களில் ஒரு வருடத்தில் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கின்றன, மொத்தமாக எத்தனை லட்சம் வாசகர்கள் வருகிறார்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட உரைகள் ஒரு வருடத்தில் புத்தக கண்காட்சிகள் மட்டும் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எல்லாம் பண்பாட்டு நிகழ்வாக பார்க்க வேண்டும்.
சில குறைகளும் வருத்தங்களும் இருக்கலாம். அவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த குறைகளுக்காக ஒட்டுமொத்த புத்தக கண்காட்சி இயக்கத்தை எதிர்மறையாகப் பார்த்து எழுதும் போக்கு அவ்வளவு நியாயமற்றதில்லை என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு நவீன எழுத்தாளர், ஒரு மேடைப் பேச்சாளர், ஒரு இலக்கிய விமர்சகர் என்ற அளவில் மேடைகளை அமைக்கலாம். அதில் நடைமுறையில் எந்தக் சிக்கலும் இல்லை. பிரபலமான பேச்சாளர் பேசினால்தான் கூட்டம் கூடும் என்பது கற்பனை. அத்தகைய பேச்சாளர்கள் பேசிய பல புத்தகக் கண்காட்சி அரங்குகளில் வெறும் ஐம்பது பேர் அமர்ந்திருக்கும் காட்சியை எல்லாம் கண்டிருக்கிறேன்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புத்தகக் கண்காட்சிகளிலும் உள்ள புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கும் யாரெல்லாம் தமிழிலில் நல்ல எழுத்தாளர்கள் என ஒரு கையேடு அச்சிட்டு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அரசாங்கம் பெரும் நிதிச் செலவில் நல்லெண்ணத்தோடு நடத்தும் புத்தகக் கண்காட்சிகளுக்கு சில பொறுப்பற்ற நபர்கள் கெட்ட பெயரைத் தேடித் தருகிறார்கள்.
ஒருவருடத்தில் நான்கைந்து புத்தகக் கண்காட்சிகளில் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதிகம். ஒரு கவிஞன், பிரபல முகம், மேடைகளில் சிறப்பாக பேசக்கூடியவன், பொது நூலகத்துறையை சேர்ந்தவன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் என இத்தனை தகுதிகள் இருந்தாலும் அந்த மாவட்ட கமிட்டியில் என்னை அறிந்த யாராவது இருந்தால்தான் அழைப்பார்கள். நான் எங்கும் எந்த முன்னுரிமையும் பெற்றதில்லை.
நான் புத்தகக் கண்காட்சிகளில் பேசுகிற இடங்களில் எல்லாம் அங்கு அழைக்கப்படாத படைப்பாளிகளின் படைப்புகள் குறித்தே பேசுகிறேன்.
அதே சமயம், இவ்வளவு பெரிய ஒரு அறிவுசார் பண்பாட்டு நிகழ்வினை பேச அழைக்கப்படுபவர்களை மட்டும் மையமாக வைத்து முற்றிலும் ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவது ஏற்புடையதல்ல.
எல்லாவற்றையும் தொடர் முயற்சியால் செழுமைப்படுத்தலாம். ஜனநாயகப் பண்பு நம் அனைவருக்குமே தேவை.
(...)
- மனுஷ்யபுத்திரன்
கருத்துகள்