முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி

Virat Kohli couldn't hold his tears back after the win, Royal Challengers Bengaluru vs Punjab Kings, IPL, final, Ahmedabad, June 3, 2025


இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி. இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே. ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள்.

இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும்.

பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன.

சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது. ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை.

ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.