இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ரமேஷ் பிரேதனுக்கு அன்பும் வாழ்த்துகளும். தொண்ணூறுகளிலும்ரெண்டாயிரத்தின் முற்பகுதியிலும் இங்கு தீவிரமாகப் பேசப்பட்ட உடல்மொழியை தன் கவிதைகளில் அவர் மெய்யியலுடன் இணைத்துப் பேச முயல்வதை, சிலநேரங்களில் நேரடி அரசியல் விமர்சனங்களையும், கருத்தியலையும் அதற்குள் இணைக்க முயல்வதைக் கண்டிருக்கிறேன். அவரது மொழிநடை உருவகத்தன்மை கொண்டது. கூடை பின்னுவதைப் போன்றது. ஆரம்பித்த இழை எங்கெல்லாம் போய் என்ன உருவெடுக்கிறது என்று பார்க்க ஒருவித கவனம் வேண்டும். தொடர்ந்து எதையோ ஒன்றை உண்மையாகத் தேடுவதையும், முற்றுப்பெற்று நின்று விடாததையும் அவரது குறிப்புகளிலும் கவிதைகளிலும் இன்றும் பார்க்க முடியும். இதுவே குழப்பமான சொற்றொடர்களாக, படைப்புகளாக வெளிப்படும். ஆனால் இது எந்தப் படைப்பாளிக்கும் முக்கியமானது. தெளிவும் உறுதிப்பாடும் படைப்பாக்கத்தை அழித்து போதனையாகவோ பிரச்சாரமாகவோ அதை மாற்றிவிடக் கூடும். ரமேஷின் நெகிழ்வுத்தன்மை அதிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது.
பிரேதன் - பிரேதம் எனும் புனைப்பெயரின் பின்னுள்ள தத்துவத்தைக் குறித்து நான் பலமுறைச் சிந்தித்திருக்கிறேன். இந்த உடலென்பது ஒற்றை உயிராலானதா? அது பல்வேறு உயிர்களும் பிரக்ஞைகளும் நினைவுகளும் சஞ்சரிப்பதா? அது இயற்கையின் கண்ணியான ஒரு பௌதீக அமைப்பா? அது ஒரு வெற்றுக் குறிப்பானா? அது ஒரு கவித்துவக் குறியீடா? இந்த ஒரு உடல் ஒரு குறியீடு என்றால் நாம் யார்? ஒரு சவ ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப்படும் உடல் ஏன் ஒரு நபர் என நமக்குத் தோன்றுகிறது? எனக்கு பிரேதங்களைப் பார்க்கையில் அவை உயிருடன் உள்ளதாக உறுதியாகத் தோன்றும். இப்படி மிகமிக அழகான புனைப்பெயர் பிரேதன் என்பது.
ஒரு ஆளுமையாக, தனிமனிதராக அவர் வாழ்க்கையே சுவாரஸ்யமானது. நான் அவரைச் சந்தித்தது இல்லையென்றாலும் கேள்விப்பட்டதை வைத்துச் சொல்கிறேன். ஒரு நாவலின் நாயகனாக அவரை வடிவமைத்து யாரேனும் எழுதிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.
பிரேம்-ரமேஷ் கண்ணி உடையாமல் இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும், அது இலக்கியப் புலத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நான் யோசித்திருக்கிறேன். தனித்து எழுத ஆரம்பித்த பின்னர் ரமேஷ் தனக்கான பாதையை நிச்சயமாக உருவாக்கிக் கொண்டார் என்றாலும் இந்தக் கணத்தில் நாம் அந்த இரட்டையரையும் சேர்த்தே நினைக்கவும் பாராட்டவும் வேண்டும்.
கருத்துகள்