முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சம் களைப்பான பிறந்தநாள்


 

பிறந்த நாட்களின் போது நான் தன்னியல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பேன். எனக்குள் இருந்து மகிழ்ச்சி மலர்வதை உணர்வேன். இவ்வருடம் மட்டுமே விதிவிலக்கு - நேற்று பல்லவி என்னை இரவில் அழைத்து வாழ்த்தியபோது மகிழ்ச்சி சில வினாடிகள் சுடர்ந்தது. அதன்பிறகு அது அணைந்தது. நான் ஏன் துயரமாக இருக்கிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். மனம் மீண்டும் பழைய மடிக்கணினித் திரையைப் போல அணைந்து அணைந்து சுடர்ந்தது. நான் சாருவின் பழைய நாவல் ஒன்றை எடுத்துப் படித்து ஏகத்துக்குச் சிரித்து உத்வேகம் ஏற்றிக்கொண்டேன். கடந்த ஓராண்டாகவே மனம் கனத்துப் போகும்போது சாரு தான் கைகொடுக்கிறார். காலையில் ஆடு மாடுகளைப் பட்டியில் இருந்து புல்வெளிக்குத் திறந்துவிடுவதைப் போல என் கவலைகளை அவிழ்த்துவிடுகிறார். சஞ்சலம் குறைந்த பின் யோசித்தேன் - நான் துயரமாக இல்லை, களைப்பாக இருக்கிறேன். களைப்பு மனதைக் கனக்கச் செய்யாது, லகுவாகவும் எடையற்றும் கசப்பாகவும் மாற்றும். அர்த்தமற்று மிதக்கும் பறவை இறகைப் போல.

களைப்பு கடந்த ஓராண்டுக்கு மேலான தொடர்ந்த அலைச்சல், மனப்போராட்டங்கள், காயங்கள், காலக்கெடுக்களை நாய் போல விடாமல் துரத்திக்கொண்டு ஓடுவது, வேலையைத் தக்க வைப்பதற்கான போராடுவது, வேலைக்காகப் படிப்பது, நூற்றுக்கணக்கான இடங்களில் விண்ணப்பிப்பது என அலுத்துவிட்டேன். அந்த அலுப்பு உள்ளிருந்து புற்றுநோயாக அரிக்கிறது. உதைக்கப்பட்ட பந்தைப் போல உருண்டுகொண்டே இருக்கையில் அவ்வலி தெரியாது. கொஞ்சம் நின்று ஓய்வெடுத்தாலே மனம் வலிக்கத் தொடங்கும். எவ்வளவு ஓய்வெடுத்தாலும் தீராத களைப்பு மனதை வாட்டியெடுக்கும். அது களைப்பா அல்லது களைப்பின் நினைவா? களைப்பின் பழிவாங்கலா? இருள் விலகியதும் புலப்படும் நிழலின் திடுக்கிடலா?
சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் முதல் காட்சியில் உணவுப் பொருட்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வருவாரே அதைப் போல ஒரு வாழ்க்கை. இதற்கு இடையில் எழுதவும் படிக்கவும் வேண்டும். அதனால் என் தூக்கம் குறைந்துவிட்டது. பெரும்பாலும் வேலைக்கான ‘வேலைகள்’ தீர்ந்ததும் சாப்பிட்டுவிட்டு இரவு இரண்டு மணிவரை நாவல் எழுதுவேன். அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். இந்த தூக்கக் கடன் வேறு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சரி தூங்கலாம் என நினைத்தால் எழுத்தின் தடம் முறிந்து போகும்.
இதனால் இப்பிறந்த நாள் பிரதமர் மோடியின் “நமஷ்க்கார்” கேட்டதைப் போல இருக்கிறது. கடைசியாக நான் இப்படி உணர்ந்தது விவாகரத்தின்போது முட்டுசந்து முட்டுசந்தாக அடிபட்டு செட்டிமெண்ட் செய்து முடித்துவிட்டு அடுத்தடுத்த மாதங்களில் அதைக் குறித்து யோசிக்கையில் எப்படித்தான் இதையெல்லாம் தாங்கினோம் எனச் சோர்ந்து வீழ்ந்தபோதுதான். அந்த ஆண்டின் பிறந்தநாளும் இப்படித்தான் மகிழ்ச்சியற்றுப் போயிற்று.
ஆனாலும் பிடிவாதமாக மகிழ்ச்சியாக இருக்க முயன்று வருகிறேன். இரவு 12 மணியிலிருந்தே நண்பர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல்லவி எனக்காக எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் போஸ்டர்களைப் பரிசளித்தாள். அதை என் எழுதும் அறையில் ஒட்ட வேண்டும். காலையில் நான் தூங்கி எழுந்ததும் அம்மா அழைத்து வாழ்த்தினார்கள். நான் தற்போது வேலை செய்யுமிடத்தில் பரிசளித்தார்கள். கேக் வெட்டினார்கள்.
நான் ஊரைவிட்டு வந்ததில் இருந்தே அம்மா கையால் பிறந்தநாளின்போது உண்பதை மிஸ் பண்ணுகிறேன். ஒருநாள் பைக்கிலேயே ஊருக்குச் சென்று அம்மாவைப் பார்க்க வேண்டும். பிறந்த நாளாக இருந்தால் இன்னும் சிறப்பு. இன்று அதற்காக பல்லவியிடம் எனக்குப் பிடித்த சோறும், பருப்பும், அப்பளமும் செய்து தரக் கேட்டிருக்கிறேன். முடிந்தால் கொஞ்சம் பாயசம் (இன்று டயட் இல்லை).
சில விருப்பங்கள்…
வரும் ஆண்டு நிறைய எழுதும் ஆசை உளது. வேலை என்னை உள்ளிர்ந்து கொல்லாமல் இருத்தல் வேண்டும். வேலை என்னை மலைவெள்ளத்தைப் போல அடித்துச் செல்லாதிருத்தல் வேண்டும்.
கடந்த ஆண்டு பைக்கில் சுற்றுவது வரமாக அமைந்தது. என் கட்டுகளை உடைத்துக் கொண்டு பறக்கும் உணர்வு வந்தது. அறுத்துக் கொண்டு போகப்போக வெளியும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னாலே தொட்டு விளையாடுவதைப் போல வருவது அனுபூதியாக இருந்தது. இந்த ஆண்டு இன்னும் சில நூறு கிலோமீட்டர்கள் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். முடிந்தால் ஒரு 700-1000 கிலோமீட்டர் பயணத்தை முடிக்க வேண்டும்.
உள்ளுக்குள் சேகரமான அயற்சியால் நான் வீட்டில் ஒரு முசுடாக மாறிவிட்டேன். அதை மாற்றி முகத்தில் ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டும். என்ன நெருக்கடியிருந்தாலும் சிரித்துப் பேசப் பழக வேண்டும்.
நுண்நிர்வாகம், கடும் கண்காணிப்புக் குறித்தெல்லாம் புகார் சொல்ல முடியாதபடிக்கு கிட்டத்தட்ட எல்லா வேலையிடங்களும் அப்படித்தான் உள்ளன. ஆனால் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடியவில்லை. மாலையானால் அந்தத் தலைவலியை வாசிப்பது, எழுதுவது, வெட்டியாய் பொழுதைப் போக்குவது எனச் செலவழிக்க முயன்றேன். சில நாட்களில் வேலையைக் காப்பாற்ற மாலையிலும் உழைக்க வேண்டியிருக்கும். என் வேலை நேரம் முடிய இரவு 12 ஆகிவிடும். இதனால் என்னால் உடற்பயிற்சி நிலையத்துக்குப் போக முடியவில்லை. பெஞ்ச் பிரஸ்ஸில் 80 கிலோ வரைக்கும் தூக்கினேன். நூறு கிலோடை எட்ட வேண்டும் என நினைத்தபோது வேலைப் பூதம் வந்து என்னைப் பிடித்துக்கொண்டது. குத்துச்சண்டைப் பழக இயலவில்லை. வரும் ஆண்டில் விட்ட இடத்தில் இருந்து பிடிக்க வேண்டும்.
டேக் செய்து வாழ்த்திய நண்பர்களுக்கும் தொடர்ந்து வாழ்த்திக்கொண்டிருப்போருக்கும் அழைத்துப் பேசியோருக்கும் நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...