Skip to main content

இருவகை ஊழல்கள் - சாக்ரடீஸும் காந்தியும்

 Gandhi and the Socratic art of dying - The Hindu



என் நண்பர் ஒருவர். பெயர் சண்முகம். வயது 62. தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார். அவர் எதாவது ஒரு விசயத்தை சொல்லி அடிக்கடி என்னை ஆச்சர்யப்படுத்துவார். ஒருநாள் அவர் என்னிடம் தனியாருக்கு வந்தபிறகே தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. தனியார் ஒரு எதேச்சதிகார நடைமுறை கொண்டது, அங்கு சுதந்திரமே கிடையாது அல்லவா என்றேன். அவர் அதற்கு அரசுத் துறைகள், குறிப்பாக பொதுப்பணி துறை, ஊழல் மலிந்தவை, அங்கு நிலைப்பதற்கு ஒன்று ஊழல் செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி நிற்க வேண்டும். ஒதுங்கி நிற்பவர்களை ஊழலில் பருத்த உயரதிகாரிகளும் அவர்களுடைய ஊதுகுழல்களும் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள் என்றார். சரி, ஊழல் செய்வோரும் நிம்மதியாக இருக்க முடியாது, அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியுடன் உடன்படிக்கை இருக்கும், அவருக்காக இவர் ஊழல் செய்து தொகையையும் குறிப்பிட்ட சதவீதம் பகிர்வார், அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்புவார், ஒருநாள் அவர் அதிகாரம் இழந்ததும் இவர் மாட்டிக் கொள்வார், எப்போதும் விசாரணை வருமெனும் திகிலேயே வாழ்வார்கள் என்றார். எனக்கு இது ஆபத்தை விட அறம் சார்ந்த பிரச்சினை எனத் தோன்றியது.


ஒழுங்காக, தவறின்றி வாழ்வது ஒரு கொடுப்பினை, அதிலொரு நிம்மதியுண்டு, அது அகத்தே இருந்து வருகிறது, நாம் யாரையும் துன்புறுத்தவோ ஏமாற்றவோ இல்லை எனும்போது அகத்தே ஒருவித நிமிர்வை உணர்கிறோம். இதை நான் சொல்லவில்லை - பிளேட்டோவின் "ரிபப்ளிக்" நூலின் இரண்டாவது பகுப்பில் மனிதர்கள் தண்டனையை பயந்து தவறு செய்யாமல் இருக்கிறார்களா அல்லது தன்னியல்பாகவே ஒழுங்காக இருக்க நினைக்கிறார்களா எனும் கேள்வியை விவாதிக்கிறார்கள். அப்போது சாக்ரடீஸ் இதைச் சொல்கிறார் - "மனிதர்கள் தவறு செய்யாதபோதே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனென்றால் தவறு அறியாமையை அதிகப்படுத்துகிறது, அறியாமையில் இருந்தே தவறுகளும் பிறக்கின்றன, அறியாமையில் உள்ளவர்கள் துன்பப்படுவர், அதனால் அதை அறிவுள்ளோர் விரும்ப மாட்டார்கள், அவர்கள் மகிழ்சிக்காக தவறுகளை, குற்றங்களைத் தவிர்ப்பார்கள்". எனக்கு என் இளமையில் இதைப் படித்தபோது இது ஒரு மிகப்பழமையான போலியான சிந்தனை எனத் தோன்றியது. பின்னர் அனுபவம் கூடக்கூட சாக்ரடீஸ் சொன்னதே சரியெனப் பட்டது. அறியாமையே தேவையில்லாதவற்றை நம் மீது சுமத்துகிறது, அவை அடிப்படையில் நம் நிம்மதியை, மகிழ்ச்சியைக் கொன்றுவிடுகின்றன. உ.தா., தவறு என்பது ஒரு மொழிக்கட்டமைப்பு எனப் புரிந்ததென்றால் தன் மீது மற்றொருவர் தவறு இழைத்ததை ஒருவர் மன்னிப்பாரா, புறக்கணிப்பாரா அல்லது அதை வைத்து உள்ளுக்குள் வருந்துவாரா? இப்படித்தான் நமது பல்வேறு விழுமியங்கள் நம்மைத் துன்புறுத்தும்போதும் ஆழமாகச் சிந்தித்து நம்மால் உதறிவிட முடியுமா? இதுவே சாக்ரடீஸைப் பொறுத்தமட்டில் அறிவு. இச்சிந்தனைப் பாணியை தத்துவத்தில் கருத்துமுதல்வாதம் என்பார்கள்.

புறவயமான ஊழலுக்கு ஆட்படவில்லை, அதனுடன் போராட வேண்டியிராத போதும் நாம் அகவயமான ஊழலுக்கு ஆட்படுவோம். அது இன்னும் சிரமமானது. நம்மையே துன்புறுத்திக் கொண்டு அடுத்தவர்களையும் படுத்திக் கொண்டு வாழ்வோம். நமக்குத் தகுதியில்லாத ஒன்றைப் பெறுவதற்கான தவறான முனைப்பு எனும் பொருளிலேயே இதையும் 'ஊழல்' என்கிறேன். எனக்கு காந்தியைப் படிக்கும்போதெல்லாம் அவர் இத்தகைய அகவய ஊழலை ஒழிப்பதற்காக முயன்று கொண்டே அதைத் தனக்குள் நிகழ்த்திக் கொண்டும் இருந்தார் என்று தோன்றும். அவரது "சத்திய சோதனையின்" ஒரு அத்தியாயத்தை மாணவர்களுக்காக விளக்கும்போது உண்மையாக, நேர்மையாக இருப்பதற்கும், பொய் சொல்வதற்குமான தொடர்பைப் பற்றி அவர் பேசுவதைச் சுட்டிக் காட்டினேன் (அவர் மாணவராக இருக்கும்போது ஆசிரியர் அவரைக் காப்பி அடிக்கத் தூண்டும் இடம்). காந்தி ஒரு பக்கம் தன் நேர்மையைக் கட்டமைத்துக் கொண்டே உலகில் மக்கள் பொய்யை எப்படி உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றும் அதில் காட்டுகிறார். ஏன் காந்தி தன்னை நேர்மையாளராக, களங்கமற்றவராகக் காட்டிக் கொள்ள அவ்வளவு தவிக்கிறார்? அவரைச் செலுத்துவது எது? எனக்கு காந்தியை விட நேர்மையான சுயபரிசீலனை சாக்ரடீஸிடம் உள்ளதாகத் தோன்றுகிறது - சாக்ரடீஸ் எப்போதுமே ஒரு நகைமுரணுடனே பேசுகிறார். அவர் காந்தியைப் போல தான் இப்படியானவர், தன்னிடம் இவ்விவ் தகுதிகள் உள்ளன எனப் பேசுவதற்கு ஒழுக்கவாதத்தைப் பயன்படுத்துவதில்லை. நகைமுரணனானது தொடர்ந்து தன் சாராம்சத்தைக் கேள்விக்குள்ளாக்கி தனக்குள் தேடுவதற்கு அவருக்கு உதவுகிறது. காந்தியோ மாறாக தன் மீது எதாவது ஒரு விழுமியம் சார்ந்த ஒளியைச் சுமத்திக் கொண்டே இருக்கிறார். தன் கடைசிக் காலம் வரை அவர் அதைக் கொண்டு துன்பப்பட்டுக் கொண்டே வந்தார். காந்தி ஒரு புனிதராக மாறினார். அவரைக் குறித்து இன்றும் சிறு குற்றச்சாட்டு வந்தாலும் அதைப் பெரிதுபடுத்தி சர்ச்சைக்குள்ளாக்க ஒரு பக்கமும் அவரை நியாயபடுத்தி புனிதராக்க இன்னொரு பக்கமும் மக்கள் முயல்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ் இதில் இருந்து விடுபட்டு எல்லா கட்டமைப்புகள் இருந்தும் வெளியேறுகிறார் (கருத்து முதல்வாத சாராம்சவாதத்தைத் தவிர). அவரைப் படிக்கையில் அவரத் கலகத்தன்மை என்னை ஈர்க்கிறது. அவரைக் கடைசி வரைக்கும் அவரது சமூகம் ஏற்கவில்லை. மரண தண்டனை விதித்தது. அக-ஊழலையும் சடங்காச்சாரமான கடவுளையும் அவர் அம்பலப்படுத்தியதை அவரது காலத்து கிரேக்க சமூகம் பயந்தது. காந்தி மதம் சார்ந்து ஊழல்களை அனுமதித்தார். அவற்றை அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். அதனால் சமூகம் அவரை ஏற்றுக் கொண்டு அவரைப் புனிதராக்கி விட்டது. மக்கல் எப்போதும் பொய்யின் போதைக்கு ஆட்பட்டு அதையே வழிபடுகிறார்கள்.

இதுவும் இல்லாமல் வாழ முடிவது ஒரு கொடுப்பினை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...