Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 26



இது என் மனதை இளக்கியது; ஏனெனில் எங்களை மதிய தூக்கத்தில் இருந்து எழுப்பிய கற்களின் வசைமாரி போன்ற அந்த ஒற்றை இடிமுழக்கம் இப்போதும் நினைவில் உள்ளது; ஆனால் அது மூன்று மணிக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்க இல்லை.
பொதுவறை வழிப்பாதைக்குப் பிறகு முக்கிய தருவாய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வரவெற்பறை இருந்தது; சாதாரண வருகையாளர்கள் அவர்கள் ஆண்களாயிருக்கும் பட்சத்தில் அலுவலகத்திலும், பெண்கள் என்றால் பெகோன்னியேக்கள் கொண்ட பொதுவறை வழிப்பாதையிலும் குளிர்பீருடன் வரவேற்கப்படுவர். பிறகு படுக்கை அறைகளின் புராணிக உலகம் ஆரம்பமாகியது. முதலில் என் தாத்தா பாட்டியின் அறை, தோட்டத்தை எதிர்நோக்கிய ஒரு பெருங்கதவு மற்றும் கட்டுமானத் தேதி (1925) கொண்ட மரச்செதுக்கு ஓவியமுடையது. அங்கு என்னை தூக்குவாரிப் போடும்படியான அதிர்ச்சியை அம்மா வெற்றிகரமான அழுத்தத்துடன் அளித்தாள்: “இங்கே தான் நீ பிறந்தது!”. இது எனக்கு முன்பு தெரிந்திருக்க இல்லை; அல்லது நான் மறந்திருக்கக் கூடும்; ஆனால் அடுத்த அறையில் நான் நான்கு வயது வரை தூங்கின, என் பாட்டி எப்போதும் வைத்திருந்த, மரத்தொட்டிலை கண்டெடுத்தோம். நானதை மறந்து விட்டிருந்தேன்; ஆனால் அதைப் பார்த்த உடனே முதன்முதலாய் அணிந்த சிறு நீலப்பூக்கள் அச்சிட்ட தளராடையில் யாரேனும் வந்து பீயால் ரொம்பின என் டயப்பரை கழற்றி விடும்படி நான் கதறி அழுதது நினைவு வந்தது. மோசசின் கூடையை போன்று சிறிதாயும் பலவீனமாகவும் இருந்த அந்த மரத்தொட்டிலின் கம்பிகளை பற்றிக் கொண்டு தடுமாறியபடியே என்னால் நிற்க முடிந்தது. இது என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஒரு வழக்கமான விவாத மற்றும் வேடிக்கை நிமித்தமாக விளங்கியது. இவர்களுக்கு எனது அந்நாளைய வெப்புறாளம் வயதுக்கு மீறின தர்க்க சிந்தனையாக படுகிறது; இதற்கெல்லாம் மேலாய், எனது துயரத்துக்கு காரணம் எனது மலம் மீதான அருவருப்பு அல்ல, எனது தளர் மேலாடையை எங்கே அழுக்காக்கி விடுவேனோ என்ற அச்சமே என்று நான் வற்புறுத்தி சொன்ன பின்னரும் கூட. அதாவது அது ஒரு சுகாதார முன்முடிவு பற்றிய கேள்வியல்ல, மாறாய் அழகியல் அக்கறையே; மேலும் அது என் ஞாபகத்தில் நீடித்துள்ள முறையைக் கொண்டு அதுவே எனது முதல் எழுத்தாள அனுபவம் என்று நம்புகிறேன். அந்த படுக்கை அறையில் நிஜவாழ்க்கை அளவிலான, தேவாலயங்களில் உள்ளவற்றை விட அதிக எதார்த்தமாகவும், துயர வாட்டத்துடனும் தோன்றிய புனிதர்களின் சிலைகள் கொண்ட வழிபாட்டுத்தலம் ஒன்று இருந்தது; அத்தை பிரான்ஸிஸ்கா சிமோபோசியா மெழியா எப்போதும் அங்குதான் தூங்கினாள்; நாங்கள் ஆன்ட் மாமா என்றழைத்த இவர் தாத்தாவின் முதல் அத்தை மகள்; அந்த வீட்டின் தலைமகளாகவும், சீமாட்டியாகவும் தன் பெற்றோரின் மரணத்துக்கு பின் வாழ்ந்திருந்தாள். அனைவரது மரணம் வரையில், அணைக்கப்படாத சாஸ்வத விளக்கின் ஒளியில் கண்சிமிட்டும் புனிதர்களிடத்து கிலி கொண்டு ஒருபக்கம் நான் தொங்கு படுக்கையில் தூங்கினேன்; என் அம்மா கூட திருமணத்துக்கு முன், புனிதர்கள் மீதான பெரும்பீதியால் வதைக்கப்பட்டு, அங்குதான் தூங்கினாள்.
எனக்கு விலக்கப்பட்டிருந்த இரு அறைகள் பொதுவறை வழிப்பாதையின் முடிவில் இருந்தன. முதல் அறையில் என் அத்தைப் பெண் சாரா எமிலியா மார்க்வெஸ் வாழ்ந்தாள்; என் மாமாவுக்கு திருமணத்துக்கு முன் பிறந்த இவள் என் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டாள். சிறுவயதில் இருந்தே அவளிடம் இருந்த இயல்பான வேறுபாட்டு பண்போடு, ஒரு அற்புதமான கதைகளின் தொகுப்பு என்னிடம் இருந்து உருவாக காரணமாய் என் முதல் இலக்கிய பசியை தூண்டிய ஒரு வலிமையான ஆளுமையையும் அவள் கொண்டிருந்தாள்; சல்லேஜாவால் முழுவண்ண ஓவியங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அவற்றை நான் அலங்கோலப்படுத்தி விடுவேன் என்று பயந்து அவள் எனக்கு தரவில்லை. இதுவே எழுத்தாளனாய் என் முதல் ஏமாற்ற எரிச்சல். பழைய மரசாமான்கள் மற்றும் காலங்காலமாய் என் குறுகுறுப்பை தூண்டிய ஆனால் என்றுமே எனக்கு திறந்து பார்க்க அனுமதி கிடைக்காத பெரிய பயணப்பெட்டிகளுக்குமான சேமிப்பறையே கடைசி அறையாக இருந்தது. என் அம்மா தன் வகுப்புத் தோழிகளை தன்னுடன் விடுமுறை நாட்களை கழிக்க வீட்டுக்கு அழைத்தபோது, என் தாத்தா பாட்டி வாங்கின எழுபது சிறு நீர்க் கலங்களும் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தன என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
எதிர்நோக்கியபடி அதே பொதுவறை பாதையில் பழங்கால, நகர்த்த ஏதுவான, சுட்ட கல்லாலான மூடு-உலை அடுப்புகள் கொண்ட ஒரு பெரிய அடுக்களை இருந்தது; என் பாட்டியின் பணிக்கான பெரிய மூடு-உலை அடுப்பும் அங்கிருந்தது; அவள் அப்பம் சுடுவதை வாழ்வுப் பணியாய் கொண்ட தலைமை சமையற்காரர்; அவளது சிறு மிட்டாய் மிருகங்களின் சாறு நிரம்பின வாசத்தில் அந்திப் பொழுது தோயும். வீட்டில் வாழ்ந்த அல்லது பணி செய்த பெண்களின் ஆட்சிப் பகுதி அது; என் பாட்டிக்கு பல பணிகளில் உதவி செய்யும் போது அவர்கள் ஒரே குரலில் பாடுவர். மற்றொரு குரல் எங்கள் பாட்டாபாட்டியிடம் இருந்து சொத்தாய் வந்த நூறுவயது கிளி லோரன்சோ மேக்னிபிக்கோவின் உடையது; அது ஸ்பானிய எதிர்ப்பு கோஷங்களை கத்தும், சுதந்திரத்திற்கான போரின் போதான பாடல்களை பாடும். அதற்கு எந்த அளவுக்கு கிட்டப்பார்வை என்றால் ஒரு நாள் ஸ்டியூ தயாராகும் பானையில் விழுந்து, பிறகு நீர் அப்போதுதான் சூடாக ஆரம்பித்திருந்ததால் அற்புதம் எனக்கருதும் படியாக காப்பாற்றப்பட்டது. ஜூலை 20-அன்று மதியம் மூன்று மணிக்கு தனது பீதியிலான கீச்சிடல்கள் கொண்டு வீட்டில் இருப்போரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது: “காளை, காளை, காளை வருது!” தேசிய விடுமுறையான அன்று ஆண்கள் உள்ளூர் காளைச்சண்டை காண போயிருந்ததால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்; கிளியின் கத்தல்களை முதுமை தளர்ச்சி காரணமான நினைவிழப்பின் வெறிப்பிதற்றல்களாகவே அவர்கள் கருதினர். சதுக்கத்தில் உள்ள கொட்டகையை உடைத்துக் கொண்டு தப்பித்த ஒரு வெறி பிடித்த காளை அடுக்களைக்குள் படுவேகத்தில் நுழைந்த போது தான் கிளியிடம் பேசத் தெரிந்த வீட்டில் உள்ள பெண்கள் அது எதைப் பற்றி கத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டனர்; காளை ஒரு நீராவிக் கப்பல் போல் உக்காரமிட்டு தன்னிலை இழந்த கோபவெறியில் அப்பஞ்சுடும் அறையின் சாமான்களை, அடுப்புகள் மேலிருந்த பானைகளை நோக்கி பாய்ந்தது. எதிர்திசையில் போய்க் கொண்டிருந்த நான் அச்சமுற்ற பெண்களின் புயலால் காற்றில் எறியப்பட்டு சேமிப்பறையை அடைந்தேன். ஓடி வந்த காளையின் சமையலறை முழக்கம் மற்றும் சிமிண்டு தரையில் அதன் குளம்புகள் தாவி ஓடின ஒலியும் வீட்டை அதிர வைத்தது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி காற்று வசதிக்கான கூரை ஜன்னலில் அது தோன்றியது; அதன் அனல் தெறிக்கும் குறுமூச்சுகள் மற்றும் பெரும் சிவப்பேறிய கண்கள் என் ரத்தத்தை உறைய வைத்தன.

அதைக் கையாள்பவர்கள் அதனை காளைப் பட்டிக்குள் திரும்பக் கொண்டு சென்ற போது அந்த அதிரடி நிகழ்வுகளின் வெறியாட்டம் வீட்டில் ஆரம்பித்து விட்டிருந்தது; எண்ணற்ற காப்பிக் கலயங்கள் மற்றும் ஸ்பாஞ்சு கேக்குகளின் துணையுடன் கலவரப்பட்டு பிழைத்தவர்களால் பல்லாயிரம் தடவை திரும்பத் திரும்ப, ஒவ்வொரு தடவையும் முன்னதை விட அதிக சாகசமிக்கதாய், அது கதைக்கப்படும்.

சுற்றுக்கட்டு அத்தனைப் பெரிதாக தெரியவில்லை; ஆனால் பல்வெறுபட்ட மரங்கள், மழை நீர் சேகரிக்கும் சிமிண்டு தொட்டியுடன் கூடிய மூடப்படாத குளியல் தொட்டி மற்றும் மூன்று மீட்டர் உயரத்தை ஒரு பலவீனமான ஏணியில் ஏறி அடைய வேண்டிய உயர்த்தப்பட்ட தளமேடையும் இருந்தன. கைப்பம்பால் என் தாத்தா விடிகாலையில் நிரப்பக் கூடிய இரண்டு பெரும் பீப்பாய்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்பால் கரடுமுரடான பலகைகளினால் எழுப்பப்பட்ட தொழுவம் மற்றும் வேலையாட்கள் குடியிருப்பு இருந்தன; வெகு முடிவில் பழமரங்கள் கொண்ட பிரம்மாண்ட புழக்கடை மற்றும் இரவுபகலாய் செவ்விந்திய வேலைக்காரிகள் வீட்டின் கழிவறைக் கலன்களை காலி செய்யும் ஒரே கழிவறை இருந்தன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...