Skip to main content

திலீப் குமாரின் “கடவு” – நிலையாமையின் அபத்தம்



கடவு தொகுப்பில் திலீப் குமார் 77இல் இருந்து 87வரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் உள்ளன. திலீப்குமார் ஒரு குறுப்பிட்ட பிரதேசம் அல்லது சாதியின் அல்லது காலகட்டத்தின் மொழி வழக்கை பயன்படுத்தாமல் அல்லது அதன் பாதிப்பில்லாமல் ஒரு வித வடிகட்டப்பட்ட மொழியை பயன்படுத்துகிறார். அதனால் சு.ரா அல்லது க.நா.சுவை போல் அல்லாமல், அவரது உரைநடை இன்றும் ஓரளவு புதுமையை தக்க வைத்துள்ளது. தேர்ந்தெடுத்து உருவாக்கின தனதான தமிழை கொண்ட சுகுமாரனோடு இவ்விசயத்தில் திலீப் குமாரை ஒப்பிடலாம்.
திலீப் குமார் ஒரு குஜராத்தி என்று நமக்குத் தெரியும். அதற்காக அவர் நீலபத்மநாபன், அல்லது ஜே.டிகுரூஸ் போன்று தன் சமுதாயத்தின் கலாச்சார செய்திகளையோ வரலாற்றையோ ஒரு சின்ன சுவாரஸ்யத்துடன் சொல்ல முனைந்தவர் அல்ல. சுயசாதி கிண்டலும் விமர்சனமும் தான் அவரது பிரதான நோக்கம். அங்கதம் தான் அவரது வலிமை. ஆனால் கொஞ்சம் அடிபிசகி வேறுபிரதேசத்தில் நுழைந்தால் திணறுகிறார். எப்படி மகாபாரதபோரில் துரியோதனனை அர்ஜுனன் சந்திக்கக் கூடாதோ அதே போல் சீரியஸான கதைகளை திலீப்குமார நேரிடும் போது பல குழப்பமான கணங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக எல்லாவற்றையும் சொல்லி விடும் அவசரம் காரணமாக ஒரு கதாபாத்திரம் தன் போக்கில் குறியீடாக மாற அவர் அனுமதிப்பதில்லை. தனது சீரியஸ் கதைகளில் கடைசி வரை கருத்தாக சுமந்து வந்த மூட்டையை திடீரென்று திறந்து பூனையை கொஞ்சம் தாவிப் போக விடுகிறார். அவரது கங்குப்பாட்டி, பப்லி பாட்டி போன்றோர் கொஞ்சம் அதிக நீளமாக, அதைவிட இன்னும் அதி சாமர்த்தியமாக பேசுவதனால் செயற்கையாக தோன்றுகிறார்கள். அதே நேரம் திலீப்குமாரின் சாமர்த்தியமான பாத்திரங்களின் வக்கணையான வம்பளப்பு தான் அவற்றின் முக்கிய சுவாரஸ்யம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
துரதிஷ்டவசமாக இந்த பாத்திரங்கள் குழந்தையின் கையில் மாட்டின பேசும் பொம்மை போல் படாத பாடு படுகின்றன. அதே போல் அவரது அநேகமான தீவிர கதைகளில் கடைசி பத்தி ஒன்று தோன்றி அநாவசிய அழுத்தம் தருகிறது. துலாபாரத்தில் யானை அமர்ந்தது போல் ஆகிறது. மேலும் விபரீதமாக அவரது பாத்திரங்கள் “தான் இப்பிரபஞ்சத்தின் கண் ஒரு துகள் என்றெல்லாம் மிகையாக தத்துவம் உதிர்க்கிறார்கள். நகுலன் இதை செய்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் நகுலன் கதைகளில் பாத்திரங்கள் அவரது ஆளுமையின் துண்டுபட்ட வடிவங்கள். படிப்படியாக தன்னையே அவர் ஒரு குறியீடாக மாற்றிக் கொள்கிறார். நகுலன் ஒரு கலாச்சார மனநிலை. அவரது பாத்திரம் ஒன்று தான் பேசுவதில் பயனில்லை என்று நினைத்து நாள்பூரா பிராந்தி குடித்து அர்த்தமற்ற ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கலாம் (வாக்குமூலம்). ஆனால் ஒரு மரபான சிறுகதை வடிவில் ஒரு சௌகார்பேட்டை கங்குப்பாட்டி அதை செய்ய முடியாது. இப்படியான சொற்றொடர்கள் திலீப்குமாரின் கதையை மேற்கொண்டு நகர விடாமல் அடைத்து விடுகின்றன. ஆனால் இந்த இடறுகின்ற தத்துவ ரத்தினங்கள் போக, பகடி எழுத்தில் திலீப் செய்யும் சாதனை அபாரமானது.
உதாரணமாக “மனம் எனும் தோணி பற்றி எனும் கதை. வாழ்க்கை நிலையற்றது என்பதால் அர்த்தமற்றது. அர்த்தமற்ற வாழ்வில் ஆர்வம் காட்டுவது ஒரு அபத்தம். இப்படி யோசிக்கிறான் இக்கதையில் வரும் ஒரு கவிஞன். அவன் ராஜகுமாரனின் மூலை என்ற பெயருள்ள துணிக்கடையில் வேலை செய்கிறான். அங்கு வேலை செய்யும் ராஜகுமாரி என்ற பெண் அவனை காதலிப்பதாக தெரிவிக்கிறாள். ராஜகுமாரி கவிஞனின் எதிர்தரப்பு. கவிஞனுக்கு வாழ்க்கை மாயை என்பதற்கு எந்த காரணமும் வேண்டாம். அதே போல் குள்ளமும் சராசரி அழகும் சுமாரான சம்பாத்தியமும் அக்குளில் சகிக்க முடியாத வியர்வை வீச்சம் கொண்ட ராஜகுமாரிக்கு வாழ்க்கை மீது மிகுந்த உற்சாகம் கொள்ளவும் காரணம் தேவை இல்லை. நடைமுறை வாழ்க்கையை நேர்மறையாய் ஏற்றுக் கொள்வது, அதில் மகிழ்ச்சி அடைவது அவள் இயல்பு. அபத்தத்தின் உச்சமாக இந்த ராஜகுமாரி கவிஞனை காதலிக்கிறாள். ஆனால் மாயையான வாழ்வில் காதலிப்பது சரியா தவறா என்று அவனுக்கு தெரியவில்லை. காதலிப்பதற்கு சாதகமான காரணம் கிடைக்காததால அவளை நிராகரிக்கிறான். ராஜகுமாரியிடம் அவளது அக்குள் நாற்றம் பிடிக்கவில்லை என்று சப்பைகட்டு கட்டுகிறான். பிறகு கோபத்தில் ராஜகுமாரி அவன் வேலைக்கு வேட்டு வைக்கிறாள். வேலை போன பின் அவன் தற்கொலை செய்ய கடற்கரைக்கு வருகிறான். அப்போதும் அவனுக்கு தற்கொலைக்கு ஒரு நல்ல காரணம் கிடைக்கவில்லை. சும்மா வேறொன்றும் செய்ய பிடிக்காமல் தறகொலை செய்ய முனைகிறான். முடிவில் அவனுக்கு புரியவருகிறது, ஆகப் பெரும் மாயை மாயையை மாயை என்று நம்புவது தான் என்று. மனித மனத்தின் அகம்பாவம் தான் இத்தகைய பாசாங்குகளை நோக்கி தள்ளுகிறது. இக்கதையில் வரும் கடையின் பெயரான “ராஜகுமாரனின் மூலை என்பதில் உள்ள நகைமுரணை கவனியுங்கள். இங்கு தான் மிக சலிப்பான ஜவுளி விறபனை வேலையை அற்பமான சம்பளத்துக்கு கதாபாத்திரங்கள் செய்கிறார்கள். இங்கு வேலை செய்யும் சராசரி பெண்ணுக்குத் தான் ராஜகுமாரி என்ற பெயரும் உள்ளது. இக்கதையில் ஒவ்வொரு சின்ன தகவலிலும் பிரமாதமான அங்கதம் உள்ளது. கவிஞன் வானிலும் ராஜகுமாரி மண்ணிலும் வசிக்கிறாள். நூற்றாண்டுகளின் தத்துவ வரலாற்றில் மண்ணிலும் விண்ணிலுமாக நின்று தத்துவவாதிகள் சண்டை போட்டிருக்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் ஒரு கோளாறு உள்ளது. நிலையாமை மண்ணுலகை அர்த்தமற்றது ஆக்குகிறது. ஆனால் எதிர்தரப்பு தத்துவவாதிகள் முழுக்க பிரக்ஞை வழி நாம் காணும் உலகம் செயற்கையானதாக உண்மையின் சாரம் குறைந்ததாக உள்ளது. பூமியில் நிலைத்து காலூன்றிய சிந்தனையாளன் தான் வாழ்வின் ரகசியங்கள் திறக்கிறான். மகிழ்ச்சியை அனுபவிக்க அதன் ஒரு பகுதியாக இருந்தால் போதும் அதை அறிய வேண்டியதில்லை என்று புரிந்து கொள்கிறான். இக்கதையில் கடற்கரையில் தொடர்ந்து தற்கொலை திட்டங்கள் இன்றி, உத்தேசங்கள் இன்றி, ஆனால் அதன் கிளர்ச்சியான அம்சத்தில் மட்டும் மனம் பறிகொடுத்து அமர்ந்திருக்கும் கவிஞன் ஒரு கற்பனை செய்கிறான். அந்த பகற்கனவு அவனுக்கு உண்மையாகவே தோன்றி விடுகிறது. அதில் ராஜகுமாரி தோன்றி அவனிடம் மீண்டும் காதல் யாசிக்கிறாள். அவனுக்கு காதலித்தால் ஒன்றும் மோசமில்லை என்று தோன்றினாலும் காதல் ஒரு மண்ணுலக சமாச்சாரம் என்பதால் அதை அவனது அகங்காரம் மறுக்கிறது. ஒரு தருணத்தில் அவன் அவளை முத்தமிடுகிறான். ஒரு அர்த்தமும் இல்லாத மண்ணுலக காதல் அவனுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. முதன்முறை உற்சாகமடைகிறான். பிரமை விலகும் போது அவன் ஸ்தம்பித்து போகிறான். சுவாரஸ்யமாக இந்த தத்துவப் பகடியில் எந்த தத்துவ ரத்தினங்களும் இல்லை. திலீப் குமாரின் சிறந்த கதைகளில் ஒன்று இது.  இதே வரிசையில் கொஞ்சம் தாழ்வாக வைக்க வேண்டிய வேறு இரண்டு அங்கதக் கதைகள் ஜனம் மற்றும் தீர்வு .
திலீப் குமாரின் அநேக கதைகளில் நிலையாமை மீது பகடி பிரதானமாக உள்ளது. நிலையற்ற, அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் ஒரு நிலையான உயிர்த்தன்மை உள்ளது என்பதை அவரது கங்குப்பாட்டி, கவிஞன் போன்றவர்கள் மிக தாமதமாக புரிந்து கொள்கிறார்கள். வாழ்வின் இந்த ஆதார ஆற்றல் தான் அவர்களை பிரபஞ்சத்தின் போக்கோடு ஒழுகிப் போக வைக்கிறது. கடவு கதையில் பழுத்த கங்குப்பாட்டி சாவதற்கான தருணம் அருகில் வந்து மீண்டும் மீண்டும் தள்ளிப் போகிறது. கங்குப்பாட்டியின் அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் அவரது சாவை எதிர்பார்த்து அடையும் ஏமாற்றம் வெகு தமாஷானது. பாட்டிக்கு பாடை கட்டித் தருவதற்கென்றே ரஜ்னி என்ற ஒருவர் கங்கணம் கட்டி அலைகிறார். கடைசியில் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் கடந்து பாட்டி ஒரு அநாமதேய வேளையில் சாதுவாக இறந்து போகிறாள். நினைத்தபடிக்கு தன்னால் பாடை கட்டமுடியவில்லையே என்று ரஜ்னி பெரும் ஏமாற்றம் கொண்டு அழுகிறார். கடிதம் கதையில் கண்ஷியாம்ஜி எனும் தனது உறவுக்கார புரவலருக்கு மன்மோகன் தாஸ் துவாரகா தாஸ் எனும் வயதான வறுமையில் வாடும் மிட்டு மாமா பணம் கேட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். அதில் பணம் வராவிட்டால் தான் சாக வேண்டியது தான் என்று அடிக்கொரு தரம் மறைமுகமாக குறிப்பிட்டு நுட்பமாக மிரட்டுகிறார். இந்த மிரட்டல் கடிதத்தை இரண்டு மூன்று தரம் படித்து விட்டு அன்றே கண்ஷியாம்ஜி எதிர்பாராமல் செத்துப் போய் விடுகிறார். தன் சாவை தள்ளிப் போடுவதில் அக்கறை கொண்ட ஒரே மனிதரும் செத்துப் போய் விட மிட்டுமாமா மேற்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார். ஒரு மாற்றத்தை - அது மரணமோ கழிப்பறைக்கு செல்வதோ - திட்டவட்டமாக எதிர்பார்த்து செய்வதில் ஒரு அபத்தம் உள்ளது. இது நம் நடைமுறை வாழ்வில் தினமும் ஒவ்வொரு நொடியும் நிகழ்கிறது. ஒரு விசயம் நிலைக்கும் என்று நினைப்பது மட்டுமல்ல நிலைக்காது என்று நம்புவது கூட அபத்தம் தான். திலீப்குமார் கதைகளின் மைய கருப்பொருள் இது தான்.
வெளியீடு: கிரியா
விலை: 160

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...