முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய கிரிக்கெட்டின் காட்பாதர்





 இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் தற்காலிகமாக விலகுகிறார். இது அவரை கடுமையாக விமர்சித்து கேள்வியெழுப்பிய மீடியாவின் வெற்றி. ஆனாலும் ஸ்ரீனிவாசனின் வெற்றியும் தான். அவர் தன்னிடத்தில் தனக்கு அணுக்கமான ஜக்மோஹன் தால்மியாவை தலைவராக நியமித்து விட்டு செல்கிறார். அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊழல்களை விசாரிக்கும் குழுவிலும் அவர் நியமித்த தென்னிந்திய நீதிபதிகள் தாம் இருக்கிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு நியாயமாக நடந்து கொள்வார்கள் என்பது சந்தேகமே. தால்மியாவும் சென்னை அணியில் கலைத்து விட போவதில்லை. இவ்வளவு கூச்சல் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு இரு தரப்புக்கும் அதிக சேதமின்றி, வெற்றி தோல்வி எதுவும் இன்றி ஆட்டம் டிரா ஆகிறது. மீடியா ஒரு தார்மீக வெற்றியும் ஸ்ரீனிவாசன் ஒரு நடப்பியல் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஸ்ரீனிவாசன் காட்பாதர் படத்தில் வரும் விட்டோ கொரிலியானாவை போன்றவர். பணத்தை விட தொடர்புகள் தாம் முக்கியம் என அறிந்தவர். அவர் இந்திய வாரியத்தில் நுழைந்ததில் இருந்தே தன் உதவிகளை பணத்தை விநியோகித்து தொடர்புகளை ஆதரவாளர்களின் வட்டத்தை விரித்துக் கொண்டே வந்திருக்கிறார். வாரியத்துக்குள் அவரால் வளர்ந்தவர்கள் அவருக்கு கடன்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று ஒரு பெரும் நெருக்கடி வரும் போது அவர்களின் பாதுகாப்பு ஸ்ரீனிவாசனுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் வீரர்களுக்கு உதவித்தொகையாக அளித்து அவர்களின் விசுவாசத்தை பெற்றார். காஷ்மீர் கிரிக்கெட் வாரியம் சம்மந்தமாக சர்ச்சை வந்த போது கண்டு கொள்ளாமல் விட்டு பரூக் அப்துல்லாவுக்கு நெருக்கமானார். தோனியின் கிரீடம் ஆஸ்திரேலிய பயணத்தில் உருள இருக்கையில் அவர் இடையிட்டு அவர் அணித்தலைவராக நீடிக்க செய்தார். அடுத்து தோனியை சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவராக மட்டுமல்ல தன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் நியமித்து ஒரு பாத்தியதையை ஏற்படுத்தினார். நண்பர்களின், ஆதரவாளர்களின் விசுவாசம் இம்முறை ஸ்ரீனிவாசனை காப்பாற்றி உள்ளது. 

லலித் மோடிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு என காட்பாதர் படத்தில் கூறுவார் விட்டோ கொரிலியானா. ஸ்ரீனிவாசன் இதை நம் கண்முன் நிரூபித்தே காட்டி விட்டார். இந்நாட்டில் நியாயம் நீதி ஆகியவற்றுக்கு அல்ல உறவு தொடர்புகளுக்கு தான் மதிப்பு அதிகம். தன் பணத்தை இதற்கு அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்; ஆனால் பணம் மட்டுமே தன்னை காப்பாற்றாது என அறிந்து வைத்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குள் அரசியல்வாதிகள் நுழைய ஆரம்பித்ததில் இருந்தே ஊழலும் பொருளாதார தில்லுமுல்லுகளும் பிரம்மாண்ட தோற்றம் கொள்ள துவங்கி விட்டன. கார்ப்பரேட்டுகள், அரசியல்வாதிகள், நிழலுலக குற்றவாளிகள் என ஒரு அச்சுறுத்தும் கூட்டணி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றியது. ஆனாலும் என்றுமே குற்றம் செய்து தப்பிப்பது இந்திய கிரிக்கெட்டில் இத்தனை எளிதாக இருந்ததில்லை. ஸ்ரீனிவாசன் இந்த சர்ச்சையை கையாண்ட விதத்தில் இருந்த தன்னம்பிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் வெடிக்கும் போது நமது காங்கிரஸ் அமைச்சர்கள் காட்டும் சின்ன பதற்றம் கூட அவர் பட்சம் இல்லை. அவரை எதிர்த்து செயல்பட வாரியத்துக்குள் யாரும் இல்லை என உறுதி செய்து விட்ட நிலையில் மீடியா மட்டுமே தன்னந்தனியாக இந்த “புனிதப்போரை” தொடுத்தது. காங்கிரஸ், பா.ஜ.க தரப்பில் இருந்தோ முன்னாள் கிரிக்கெட்டர்கள் தரப்பில் இருந்தே பிஷன் சிங் பேடி போன்ற விதிவிலக்குள் தவிர யாரும் ஸ்ரீனிவாசனை நேரடியாக குற்றம் சாட்டவோ பதவி விலக கேட்கவோ துணியவில்லை. ஒரு தேசிய நிறுவனத்தை ஒருவர் இந்தளவுக்கு கச்சிதமாக ஹைஜேக் செய்ய முடியுமா என்று வியப்பேற்படுகிறது. டைம்ஸ் நவ் நிகழ்ச்சி ஒன்றின் போது ஒரு முன்னாள் வீரர் பேனலில் இருந்தார். ஆனால் நேரலை துவங்கும் முன் அவர் சட்டென்று எழுந்து போய் விட்டார். ஒரு போன் அழைப்பு மூலம் ஒரு நேரலை நிகழ்ச்சியில் இருந்து ஒருவரை சில நிமிடங்களில் எழுந்து போக செய்யும் அளவுக்கு ஸ்ரீனிவாசன் இந்த சர்ச்சையை தன் ரிமோட் கண்டுரோலால் இயக்கிக் கொண்டிருந்தார். 

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகள் இது போல் எழும் போது அரசியல்வாதிகள் கூட மீடியா முன் பம்முவார்கள். இந்தியாவின் பிரதமர் கூட இந்தளவுக்கு அலட்சியத்துடன் மீடியாவையும் கோடானுகோடி மக்களின் கேள்விகளையும் எதிர்கொண்டதில்லை. ஸ்ரீனிவாசன் அவ்விசயத்தில் ஒரு முன்மாதிரி. அவர் அரசியலுக்கு வந்தால் ஏற்கனவே உள்ள பல திமிங்கலங்களை விழுங்கி ஏப்பம் விடுவார். அத்தோடு அரசியல்-மீடியா-சமூகம் என்கிற பின்னலை ஒரு பொம்மலாட்ட கலைஞன் போல் அனாயசமாக கையாளவும் செய்வார். எல்லார் வாயையும் பணத்தாலும் நன்றியுணர்வாலும் மிரட்டல் அரசியலாலும் அடைத்து விட்டு கோடானுகோடி பணம் திருடி மொத்த இந்தியாவையும் சூறையாடி அதற்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிற திமிருடன் செயல்படுகிற நிலைக்கு நம் அரசியல்வாதிகளை கொண்டு சென்று விடுவார். நினைக்கவே அச்சமாக இருக்கிறார்.  

இந்த சூதாட்ட ஊழல் ஒன்றை உணர்த்துகிறது. பார்வையாளர்கள் ஒரு பக்கம் பொழுதுபோக்கை தவிர வேறெதையும் பொருட்படுத்துவதாக இல்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள், வீரர்கள் என யாருக்கும் நேர்மை, உண்மை, நியாயம் முக்கியமில்லை. எவ்வளவு பணம் சம்பாதித்து போதாமல் இருக்கிறது. எந்த வாய்ப்பையும் சுணக்கமில்லாமல் பயன்படுத்தி உயர வேண்டும் என்பதன்றி வேறு உறுதி இல்லை. மொத்தத்தில் நம் சமூகம் சந்தித்து வரும் ஒரு சீரழிவுக்கு இந்த ஊழலில் நாம் நடந்து கொண்ட விதம் நல்ல உதாரணம். லட்சியங்கள் அற்ற சமூகம் இப்படித் தான் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...