முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளவரசன் திவ்யா பிரிவும் சில பரிந்துரைகளும்






இளவரசன் திவ்யா திருமண முறிவில் காதல் தம்பதிகளுக்கு/ ஜோடிகளுக்கு ஒரு பாடம் உள்ளது.
1.   காதலில் வெற்றி பெற காதல் மட்டுமே போதாது. நிறைய தந்திரங்களும் அரசியல் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.
2.   காதல் ஜோடிகள் தமது காதலரின் பெற்றோரை எப்போதும் ஒரு போட்டியாளராக அல்லது எதிரியாகத் தான் நினைக்க வேண்டும். இனிமையாக அவர்களிடம் பேசலாம் பழகலாம். ஆனால் எப்போதும் முதுகுக்குப் பின் ஒரு கத்திக் குத்துக்கு தயாராக இருக்க வேண்டும்
3.   இது தான் மிக முக்கியமானது. காதலி அல்லது காதல் மனைவியை தக்க வைக்க (ஆம் தக்க வைப்பது தான் ஆகப்பெரும் சாதனை) நிறைய பேசி அப்பெண்ணை உங்களது அலைவரிசையில் வைத்திருக்க தெரிய வேண்டும். நிறைய நாடகங்கள் போட வேண்டும்.

4.   மேல் சாதிப் பெண் என்றால் குறைந்தது அப்பெண்ணுக்கு 45 அல்லது 50 வயதாகும் வரை அவளது பெற்றோர்கள் அவளை உங்களிடம் இருந்து பிரித்து மற்றொருவருக்கு மணம் செய்து வைக்க முயலக் கூடும் என உணர வேண்டும். ஆக நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உங்கள் மாமனார் அல்லது மாமியாருக்கும் ரொம்ப வயதாகி தளர்ந்து விடுவார்கள், மென்பாஸுக்கு பிறகு உங்கள் மனைவியும் இன்னொரு துணையிடம் போக முடியாது மற்றும் ஐம்பது வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு கணவனின் துணை மிகவும் அதிகம் தேவைப்படும் என்பன அந்த வயதை தேர்ந்ததன் காரணங்கள்.
5.   பெரும்பாலும் பெண்ணின் அம்மா தான் தன் பெண்ணை கணவனிடம் இருந்து பிரித்து வைப்பதில் மிக முனைப்பாக இருக்கிறார். இதை என் நண்பர்களின் வாழ்வில் பலமுறை பார்த்து விட்டேன். அதனால் மாமியாரிடம் அதிக ஜாக்கிரதையாக இருங்கள்.

முதலில் பெண்ணிடம் தொடர்ந்து பேசி மனதை பதம் செய்வதை எடுப்போம். இதன் தேவை என்ன?
உளவியலில் infantilization என்றொரு பதம் உண்டு. நீடித்த குழந்தைமை. அதாவது ஒருவர் வளர்ந்த பிறகும் தம் பெற்றோரின் குழந்தையாகவே தன்னை நினைத்துக் கொள்வது. அரோக்கியமானவர்கள் சுமார் 12 வயதில் தம்மை தனிமனிதராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து 18 வயதுக்குள் தன் குடும்பத்தில் இருந்து தனித்து சிந்திக்கும் செயல்படும் ஒரு நபராக மாறுவார்கள். அதற்குப் பின் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால் சிலர் வளர்ந்த பிறகும் முடிவுகளை எடுப்பதிலும் உணர்வு ரீதியாகவும் பெற்றோரை அண்டி இருப்பார்கள். இதைத் தான் நீட்டித்த குழந்தைமை என்கிறோம். நீடித்த குழந்தைமை கோளாறு உள்ளவர்கள் வளர்ந்து மீசை முளைத்து அத்தனை தகாத காரியங்களையும் வாழ்வில் பண்ணின பிறகும் சதா அம்மாவின் இடுப்பிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது ஒரு பலகீனம். இவர்கள் எளிதில் குழம்பி விடுவார்கள். தனித்து முடிவெடுக்க தடுமாறுவார்கள்.
உங்கள் உயர்சாதி காதல் மனைவி அல்லது காதலி இப்படியான கோளாறு கொண்டவர் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பத்து வருடம் காதலித்த பிறகும் கூட என் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை என காதலை முறித்துக் கொள்வார்கள். அல்லது திருமணத்துக்கு பிறகும் கூட அம்மா பேச்சை கேட்டு மெல்ல மெல்ல உங்களை வெறுக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பிரிந்து விடுவார்கள்.
உதாரணமாக உங்கள் மாமியாருக்கு உங்களைப் பற்றி சில குறைகள் இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதலி/மனைவி உங்கள் மீது விருப்பமாக இருப்பார். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அதிருப்தி உற்று அவர் உங்கள் மாமியார் மீது மனரீதியாக சாய ஆரம்பிப்பார். அப்போது பேசி பேசி மாமியார் தன் பெண்ணை தன்னை போல் சிந்திக்க வைத்து விடுவார். இது வாதை உடலில் இறங்குவதை போல. பெண் தன் அம்மாவின் குரலில் வாதை வந்தது போல பேச ஆரம்பிப்பார். இது ஒரு ஆளுமைக் கோளாறு. என் நண்பனின் மனைவி இப்படியே தான் அவரிடம் இருந்து பிரிந்து சென்றார். காரணம் கேட்டால் தன் அம்மாவின் குரலில் பேசுகிறார்.

ஏன் மாமியார்கள் மருமகன்கள் மீது இவ்வளவு வெறுப்பு பாராட்டுகிறார்கள். இதற்கு விடை காண நாம் சில மாமியார்கள் மருமகன்களை மிகுந்த அன்போடு நடத்துவதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக மாமியார் தன் மருமகனை தன் மகளின் கணவனாக நினைப்பதில்லை. ஒரு அம்மாவுக்கு தன் மகள் தனது உடல் மற்றும் மன ரீதியான நீட்டிப்பு. குறிப்பாக பாலியல் ரீதியாய். ஒரு அர்த்தத்தில் மருகன் என்பவன் ஒரு மாமியாருக்கு கணவனைப் போலத் தான். மறைமுகமாக மாமியார் அப்படித் தான் இப்பிரச்சனையை அணுகுகிறார். ஆக தன் பெண்ணுக்கு வரும் கணவன் தன்னுடைய பொருளியல் பாலியல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். சாதி இதற்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. பெண்ணுக்கு கணவனை பிடித்திருந்து மாமியாருக்கு பிடிக்காமல் போகும் பட்சத்தில் மாமியார் தொடர்ந்து இந்த முரண்பாட்டுடன் மோதிக் கொண்டே இருப்பார். தன் வெறுப்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி தன் பெண்ணின் மனதை மாற்ற முயற்சித்துக் கொண்டிருப்பார். மாமியாருக்கு தன் பெண் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை நம்பத் தோன்றாது. அவருக்கு ஒரு அதிருப்தி இருந்து கொண்டிருக்கும். தன் பெண் வழியாக மாமியார் இன்னொரு தாம்பத்திய வாழ்க்கை வாழ முயற்சிப்பார். தன் வாழ்வில் செய்த தவறுகளை தன் பெண்ணின் தாம்பத்திய வாழ்வில் நடக்கக் கூடாது என நினைப்பார். தன் நடந்து முடிந்த வாழ்வின் பிரச்சனைகளை தன் பெண் வழி திருத்த முயல்வார். இதனால் அவர் தன் பெண்ணின் குடும்ப வாழ்வில் தலையிடுவார். தயவு தாட்சணியமின்றி பிரச்சனைகளை உருவாக்குவார். அப்போதெல்லாம் அவர் தனக்காகத் தான் தன் பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கிறார் என புரிந்து கொள்ள மாட்டார். இது ஒரு சிக்கலான பிரச்சனை. அதனால் தான் இப்படியான ஒரு குழந்தைமை மிக்க மனைவி/காதலி + பாலியல் சிக்கல் கொண்ட மாமியார் எனும் ஜோடி சேரும் போது அது படு ஆபத்தானதாக மாறும். அதனால் தான் மருமகன்கள்/காதலன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றேன்.
நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி உயர்சாதி. ஏழு வருடங்களாகின்றன். சுமூகமான மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை. இருந்தும் சமீபமாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது என் மாமியார் என் மனைவியை என்னிடம் இருந்து பிரிக்க பார்த்தார். இரண்டு முறைகள் முயன்றார்.
ஆனால் சாமர்த்தியமாக என் மனைவியிடம் பேசி நான் இம்முயற்சிகளை முறியடித்தேன். அதனால் தான் என் மாமியாரால் ஜெயிக்க முடியவில்லை.

எனக்கு சில அனுகூலங்கள் இருந்தன.
1. என் மனைவி இலக்கிய வாசிப்பு உள்ளவர். தர்க்க ரீதியாக பேசினால் அவருக்கு புரியும். என் விழுமியங்கள் அவரோடு பொருந்திப் போகும்.
2. திருமணத்துக்குப் பிறகு இன்றும் அவளுக்கு என் மீது மாறாக் காதலும் ஈர்ப்பும் மரியாதையும் உள்ளது.
3. என் மாமியாரும் என் மனைவியும் வேறு வகை மன அமைப்பு கொண்டவர்கள். என் மாமியாரின் மொழியை விட எனது மொழி என் மனைவிக்கு இன்னும் நெருக்கமாக உள்ளது. அவரை விட என்னால் நெருங்கிப் போய் அவளிடம் பேசி புரிய வைக்க முடியும்.
4. என் மாமியாருக்கு என்னளவுக்கு பேச்சாற்றலோ தர்க்க அறிவோ கிடையாது. முக்கியமாய் ஆற்றல். அவர் ரெண்டு மணிநேரம் பேசினால் நான் பதினாறு மணிநேரம் பேசுவேன். ஓயாமல் போராடிக் கொண்டிருப்பேன். அவர் சீக்கிரம் களைத்து விடுவார். அவர் ஒரு திட்டம் போட்டால் நான் நூறு திட்டம் போடுவேன்.
5. மிக முக்கியமாக என் மனைவிக்கு infantilization கோளாறு இல்லை. அவர் ஆரோக்கியமான ஆளுமை கொண்டவர்.
இந்த அனுகூலங்கள் இல்லாதவர்கள் இன்னும் அதிகமாக போராடவும் அரசியல் ஆடவும் வேண்டும். இல்லையென்றால் தனிமையில் வாட நேரிடும்.
பெண் மனம் தரையில் கொட்டின பாதரசம் போல. பெண்கள் மிக உணர்ச்சிகரமானவர்கள். தம்மால் குடும்பத்துக்கு பாதகம் வரக் கூடாது என நினைப்பார்கள். பத்து பேர் சேர்ந்து பேசினால் குழம்பி விடுவார்கள். திவ்யா விசயத்தில் அவரது அப்பாவின் மரணம், அம்மாவின் உடல்நலமின்மை, ஜாதி அரசியல்வாதிகளின் மிரட்டல், வாதங்கள், நெருக்கடி ஆகியவை அவரை உருக்குலைத்து விட்டன. ஆனால் முக்கியமான பிரச்சனை வேறு.
ஒரு முக்கியமான கட்டத்தில் இளவரசனால் திவ்யாவை பேசி தன் வசப்படுத்த முடியவில்லை. சில பல உளவியல் அணுகுமுறைகள் மூலம் அவரால் திவ்யாவை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்திருக்க முடியும். தன் பிணத்தை கடந்து தான் திவ்யா குடும்பத்தை விட்டு வெளியேற முடியும் எனும் நிலையை அவர் உருவாக்கி இருக்க வேண்டும். ஒரு தோல்பாவையை போல கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சீக்கிரம் விட்டுக் கொடுத்து விட்டார். அவருக்கு மூர்க்கமும், விழிப்பும், புத்திசாலித்தனமும், போட்டியுணர்வும் போதவில்லை என கூறுவேன். ரொம்ப ”நல்லவர்” போல.

காதலில் வெற்றி பெற வெறும் காதல் மட்டும் போதாது. காதலில் வெற்றி பெற நீங்கள் ரொம்ப நல்லவராகவும் இருக்கக் கூடாது.

கருத்துகள்

சிவக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆத்தாடி இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டுமா என்ன ?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் இருவருக்குள்ளும் இருந்தது காதல்தானா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...