முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஹீருக்கு நம் வாழ்த்துக்கள்



சஹீர் கான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் ராக்கெட் லாஞ்சராக இருந்தார். எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அவர் சஹீரை அழைப்பார். சஹீர் தன்னுடைய வேகம் மற்றும் ஆளுமையின் தாக்கம் கொண்டே எதிரணியின் விலா எலும்புகளை ஓமப்பொடி போல் உருவுவார். ஒரு ஆட்டத்தில் சிம்பாப்வேயின் அலிஸ்டெர் காம்பெலை அவர் பவுல்டாக்கினார். காம்பெல் மிக நல்ல மட்டையாளர். குச்சிகள் சிதறியதும் அவர் முகத்தில் ஏற்பட்ட வியப்பு மிக சுவாரஸ்யமானது. பந்து இவ்வளவு வேகத்தில் வரும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தியர்களும் கூடத் தான். எந்த இந்தியனும் இவ்வளவு மூர்க்கத்துடன் இதற்கு முன் வீசியதில்லை.


ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் காயங்களால் உடல் பலவீனமான பின் சஹீர் பத்து கிலோ மீட்டர் வேகத்தை குறைத்து அதிக கூர்மை மற்றும் புத்திசாலித்தனத்துடன் மறுவரவு நிகழ்த்தினார். இக்காலகட்டம் அற்புதமானது. ஒவ்வொரு ஓவரும் ஒரு பாடம். ஒரு பந்து கூட சும்மா பேச்சுக்கென அவர் வீசுவதில்லை. ஒரு திட்டத்தின் துவக்கம், மையம், முடிவு போல் பந்துகளின் போக்கு இருக்கும். அதுவும் எந்த ஆடுதளத்திலும் சஹீரால் பந்தை நினைத்த இடத்தில் வீழ்த்தி எப்பக்கமும் எந்த அளவுக்கும் ஸ்விங் செய்ய வைக்க முடியும். 


இந்த கட்டுப்பாட்டையும் புத்திசாலித்தனத்தையும் வாசிம் அக்ரமிடம் தான் முன்னர் பார்த்திருக்கிறேன். சஹீரின் பந்து வீச்சை இன்றைய அஜ்மல் அல்லது முந்தைய வார்னுடன் ஒப்பிடலாம். திட்டமிடுவதும் அதை நிறைவேற்றுவதும் முற்றிலும் வேறுவேறானவை. இரண்டையும் கச்சிதமாக செய்பவர்களை தான் பந்து வீச்சில் மேதை என கூற வேண்டும். சஹீர் ஒரு மட்டையாளரை எல்.பி.டபிள்யோ முறையில் வெளியேற்றும் பட்சம் தொடர்ந்து வெளியேறும் பந்துகளை போடுகிறார் என்றால் முதலில் அந்த பந்துகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு கூர்மையாக உக்கிரமாக போடுவார். மட்டையாளர் இவர் நம்மை வெளியே போகும் பந்து மூலம் வெளியேற்றத் தான் பார்க்கிறார் என நிஜமாகவே நம்பத் துவங்குவார். அப்போது சஹீர் உள்ளே வரும் பந்தை நாலாவதாக போடுவார். அதுவும் மிக சரியாக அது நடுக்குச்சிக்கு வந்து நேராகும். பல வேகவீச்சாளர்கள் உள்வரும் பந்தை ரொம்ப அதிகமாக ஸ்விங் செய்வார்கள். விளைவாக பந்து கால்பக்கம் போய் வீணாகும். நல்ல உதாரணமாக முன்னாள் வீச்சாளர் ஸ்ரீனாத்தை சொல்லலாம். அவருக்கு மட்டும் இந்த உள்வரும் பந்தின் கட்டுப்பாடு இருந்திருந்தால் அவர் இன்னும் நூறு விக்கெட்டுகள் கூட எடுத்திருப்பார். இன்னொரு விசயம் கரார்தன்மை. இங்கிலாந்தின் ஆண்டெர்ஸன் இது போல் மட்டையாளரை பொறி வைக்கையில் வெளியே போகும் பந்துகள் இவ்வளவு கராறாக இருக்காது. விளைவாக மட்டையாளரால் திட்டத்தை ஊகிக்க முடியும். சஹீர் இவ்விசயத்தில் வார்னைப் போன்றவர்.
நம்மூரில் பயிற்சியாளர்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள். சஹீர் போன்றவர்கள் எளிதில் காயமுறுவதற்கு சரிசமமான உடல் வலுவில்லாதது காரணம். சஹீருக்கு மேலுடம்பு அளவுக்கு கீழுடம்பு வலு இல்லை. இதே பிரச்சனை ஷோயப் அக்தருக்கும் இருந்தது. அவர் உடல் மட்டும் பந்து வீச்சளவுக்கு கச்சிதமாக இருந்திருந்தால் மெக்ராத்தை மிஞ்சியிருப்பார்.
இஸ்லாமியர்கள் வேகவீச்சாளர்கள் ஆகும் போது அதில் ஒரு தனி உக்கிரம் புத்திசாலித்தனம் விடாப்பிடித்தனம் இருக்கிறது. ஷாமி அஹமதை எடுங்கள். அவருக்கு இயல்பான வேகம் இல்லை. ஆனால் புவனேஸ்வர் போல் கட்டுப்பாட்டை நம்ப மாட்டார். ஒரு வேகவீச்சாளராக தன்னை எண்ணிக் கொண்டு தன்னையே மீறி விச முயல்வார். பல சமயங்களில் சொதப்புவார், ஆனால் அவரது அணுகுமுறை கிளர்ச்சியானது. இன்னொரு நல்ல உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அபு நச்சீமை சொல்லலாம். அந்த சராசரி உடலில் இருந்து எப்படித் தான் தீ போன்ற 140 கிலோமீட்டர் வேகத்தை பெறுகிறாரோ! இயல்பான உடலமைப்பும் வலுவும் அவர்களுக்கு துணை போகிறது. பஞ்சாபியர்களிடம் இந்த முரட்டுத்தனம் உள்ளது. ஆனால் ரயில் முன்னே குதிப்பவர்கள் போல் ஒரு அசட்டு தைரியம் கொண்டவர்கள் சீக்கியர்கள். இஸ்லாமிய வீச்சாளர்களிடம் வேகத்துடன் ஒரு தந்திரமும் உள்ளது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வறுமைக்கு நல்ல ஒரு தீர்வு அதிகமாக இஸ்லாமியர்களை தேர்ந்தெடுத்து வேகவீச்சை எடுக்க ஊக்குவிப்பது.
இன்று 35 வயதாகும் சஹீர் கானுக்கு ஒரு எளிய தமிழ் மனதின் வாழ்த்துக்கள்!

கருத்துகள்

dinesh.88560 இவ்வாறு கூறியுள்ளார்…
நம் உடல்வாகை எடுத்துக்கொண்டால்...நமக்கு கெண்டைக்கால் தசை (calf muscles
)வலு இல்லாமல் தான் இருக்கும்...ஓரு உடற்பயிற்சி அவ்வளவாக செய்யாத வடகிழக்கு மாணவனை எடுத்துக் கொண்டால் அவனுக்கு நம் ஊர் பயில்வான் அளவுக்கு கெண்டைக்கால் தசை இருக்கும்....காரணம் அவன் முன்னோர்கள் அரிசியை மூட்டை மூட்டையாய் சுமந்து மலை மேல் சென்றனர்....அதன் விளைவாக தசை உருவாக்கலில் உள்ள ஜீன்கள் மாற்றப்பட்டு அது பரம்பரையில் தொடரும்....அதே போல ஆப்ரிக்க வீரர்கள் தடகளத்தில் ஜொலிப்பது அவர்கள் தசை வலுவில் தான் (வேட்டையாட இரையை பல மைல்கள் துரத்திக் கொண்டு ஓடியதால்)....

நம் உயரமே நமக்கு பலவீனம் ஆகிவிடும்...காரணம் குதிகால் தசையால் காக்கப்படாததால் அது அடிபட்டுவிடும்...மேலும் ஓடுதூரம் அதிகம் கொண்ட வீரர்கள் அதிகம் அவதியுறுகின்றனர்....வாசிம் அக்ரம் நீண்ட நாள் நிலைத்தது அவர் இவற்றை கவனித்து கொண்டதால் தான்.....

என்னதான் இருந்தாலும் இந்தியா-பாக் ஒரேஇனம் தானே...உணவுப் பழக்கம் தான் வேறு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...