Skip to main content

இலக்கிய விழாக்களில் காணாமல் போகும் சமத்துவம்





ஜனவரி மாத உயிர்மையில் முருகேச பாண்டியன் சிறுபத்திரிகை பண்பாட்டு பற்றி சொல்லும் போது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான சமத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் எழுத்தாளனை பெயரால் தான் அழைத்தார்கள். சின்னப் பையன் என்றாலும் மூத்த எழுத்தாளனை பெயரால் தான் அழைத்து பேசினான். அவர்களும் சமமாக நடத்தினார்கள். இலக்கியமும், எழுத்து, சமூக அக்கறை சார்ந்த விழுமியங்களும் இப்பரப்புக்குள் வருபவர்களை சமமாக்கியது. நீங்கள் ஒரு வரி கூட எழுதாமல் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வாசிக்கும் ஒரே தகுதி உங்களை சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையாக்குகிறது.

 ஏனென்றால் சிறுபத்திரிகை உலகம் மனிதன் தன் எண்ணங்களால் தான் தகுதியை அடைகிறான் என்று நம்பியது. உயர்ந்த எண்ணங்கள் ஒரு 16 வயது பையனைக் கூட நாற்பது வயது ஆளுக்கு நிகராக்குகிறது. நான் ஜெயமோகனை சந்தித்த காலத்தில் அவருக்கு நாற்பதின் துவக்கம். எனக்கு 14 இருக்கும். நான் அவரைப் பெயரால் தான் அழைத்து பேசுவேன். அண்ணே சார் எல்லாம் கிடையாது. ஆனால் மரியாதை நிமித்தமாக ஒருவரை அண்ணே என அழைப்பதிலும் தவறில்லை தான். ஆனால் நான் முன்னர் நிலவிய சமத்துவம் சார்ந்த நம்பிக்கை பற்றி பேசுகிறேன்.
சமீபத்தில் நடந்து வரும் இலக்கிய அறிமுக “விழாக்கள்” இந்த சமத்துவத்திற்கு நேர் எதிரானவை. நாம் பத்திரிகைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள், பாட்டாளிகளின் ஒடுக்குமுறை பற்றி ஆவேசப்பட்டு எழுதுகிறோம், படித்து விட்டு பேசுகிறோம். ஆனால் இந்த விழாக்கள் பணமும் செல்வாக்கும் இல்லாத எழுத்தாளனை தற்போது உ.பியில் முதல்வரும் குடும்பமும் சல்மான்கான் நடனத்தை மேடையில் பார்த்து ரசிக்க தற்காலிக முகாம்களில் வாடும் ஏழைகளைப் போல் கிட்டத்தட்ட ஆக்குகின்றன. இது ஒரு வழக்கமான நடைமுறை, இது வெறும் சடங்கு என உ.பி முதல்வர் நியாயப்படுத்துவது போல் புத்தக வியாபாரத்துக்கு விழாக்களும் அவற்றில் நட்சத்திரங்கள் கலந்து கொள்வதும் அவசியம் என பதிப்பாளர்கள் கூறலாம். தவறில்லை. ஆனால் கொண்டாட்டமும் வெளிச்சமும் எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டும். பைசா இல்லாதவனுக்கு ஒரு எளிய அரங்கில் விழா, பணக்காரனுக்கு பிரம்மாண்ட அரங்கில் அறிமுகக் கொண்டாட்டம் என்பது நாம் நம்பும் பேசும் சமத்துவத்திற்கு எதிரானது.
இந்த நாட்டில் ஏழைகளும் பணக்காரர்களும் இருந்து தானே ஆகிறார்கள், அவர்கள் தம்மால் முடிந்ததை பண்ணுவது தவறில்லை என நாம் யோசிக்கலாம். ஆனால் சமூக நீதியையும் சமத்துவத்தை தன் லட்சியமாக கருதும் பதிப்பகங்கள் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்பதே என் வாதம். ஒரு பணக்கார செல்வாக்கான எழுத்தாளன் நட்சத்திர ஹோட்டலில் கேப்ரே நடனத்துடன் கூட தன் நூல் வெளியீட்டை வைக்கலாம். அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். அது பதிப்பக பதாகையுடன் நடக்கும் போது சிக்கலாகிறது. உண்மையில் ஆங்கிலப் பதிப்பகங்கள் கூட இப்படிப் பண்ணுவதில்லை. அங்கு எல்லா எழுத்தாளனுக்கும் ஒரே மேடை, ஒரே வகையான நிகழ்ச்சி. இங்கு தமிழில் அதிகார படிநிலையை வலியுறுத்துவது, பகட்டை காட்டுவது சமீபத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளில் மோசமாக தலையெடுத்துள்ளது.
தமிழில் இலக்கிய, இடைநிலை புத்தகங்களுக்கு விளம்பரமோ வாங்க வாசகர் பரப்போ இல்லை என்பதால் எழுத்தாளன் தான் தன்னால் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்த வேண்டும், அதை பதிப்பகம் ஆதரித்து தான் ஆக வேண்டும் என ஒரு நியாயமும் கோரப்படலாம். ஆனால் பதிப்பகம் தான் நடத்தும் விழாக்களும் ஒரு வரைமுறையை உருவாக்குவதும், எல்லாருக்கும் சமமாக அதை வலியுறுத்துவதுமே சரியாக இருக்கும். உதாரணமாக, நான் பா.ஜ.கவை, இந்துத்துவாவை என் எழுத்து மற்றும் பேச்சு மூலமும் பத்திரிகை வழியாகவும் கடுமையாக எதிர்க்கிறவன் என கொள்ளுங்கள். நாளை நான் ஒரு பா.ஜ.க ஆதரவாளரின் புத்தகத்தை பிரசுரிக்கிறேன். அவர் மோடியைக் கொண்டு லட்சக்கணக்கான ஆட்கள் கூடுகிற இடத்தில் நேரடி டி.வி ஒளிப்பரப்புடன் வெளியிட ஆசைப்படுகிறார். அங்கு நான் போய் மேடையில் அமர்ந்து அந்த புத்தகத்தை ஆதரித்து பேசினால் மோடியையும் அவர் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டதாகவும் அது ஆகும். அங்கு கடுமையான மது துவேஷ கருத்துக்கள் பேசப்படலாம். அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டு அடுத்த நாள் மோடியை எதிர்த்து நான் எழுத முடியாது. இதை வெறும் வியாபார நடைமுறை என கடந்து விட முடியாது. நியாயமாக நான் அவரை தனியாக என் அங்கீகாரம் இன்றி, பதாகை இன்றி விழாவை நடத்த சொல்ல வேண்டும்.
நாம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சமத்துவமாக மாற்ற முடியாது. ஆனால் சில இடங்களில் சமத்துவத்தை கோருகிறோம் பள்ளிக்கூடம், எழுத்து என சில இடங்களில் மட்டும். ஏனென்றால் அங்கு தான் லட்சியங்களை கற்கிறோம். ஒரு பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தையை பெஞ்சிலும், உங்களை விட அதிகம் பணத்தை கொடையாக பள்ளிக்கு அளிக்கிற பணக்கார குழந்தையை சோபாவிலும அமர்த்தினால் ஏற்பீர்களா? மாட்டீர்கள். அதனால் தான் பள்ளிக் கூடத்தில் சீருடை இருக்கிறது. அங்கு தான் வாழ்க்கையின் அடிப்படையை கற்கிறார்கள். ஆனால் படித்து முடித்ததும் வேலையிடத்தில் முதலாளி முன் நின்று தான் பேச வேண்டி இருக்கும். பரவாயில்லை. ஆனால் சமத்துவம் தான் சரி என்கிற ஒரு சிறு நம்பிக்கையாவது உங்களுக்குள் இருக்கும். இலக்கியம், அரசியல் சிந்தனை, சமூகக் கோட்பாடுகள் ஆகியவை சமத்துவம் என்கிற விழுமியத்தின் மீது நிற்பவை. அதை எடுத்து விட்டால் எல்லாம் விழுந்து விடும். வியாபாரத்துக்காக நாம் தற்காலிகமாக நாற்காலியை நீக்கி விட்டு அந்தரத்தில் உட்கார்ந்திருக்க முடியாது.

ஒரு தலையாய எழுத்தாளனை அங்கீகரிக்க கூட தனி நிகழ்ச்சிகள் வைக்கலாம். ஆனால் அங்கு தேவையற்று அந்த எழுத்தாளனை புகழ்ந்து கொண்டே இருப்பது வாசகர்களை எரிச்சலடைய வைக்கும். ஏனென்றால் எழுத்து அதிகாரத்துக்கு எதிரானது. சமீபமாக அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் நிகழ்ச்சியிலேயே ஒரு அதிகார மையம் இயல்பாக உருவாவதை பார்க்கிறோம். இதற்குக் காரணம் அதிகார எதிர்ப்பரசியல் பற்றி ஏதும் தெரியாத, ஆழமான சமூகப் பார்வை அற்ற வெகுஜன, சினிமா ஆட்கள் இலக்கிய பரப்பை ஊடுருவதால் தான். இவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சம்மந்தமே இல்லாமல் தன்னை பேச அழைத்த ஒரே காரணத்துக்காக நிகழ்ச்சி நடத்துபவரைப் பற்றி அரைமணி புகழ்வார்கள். இவர்களுக்கு கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய எழுத்தாளர்கள் கடந்து வந்த பாதையும் கொண்டுள்ள நம்பிக்கைகளும் மரபும் தெரியாது. இப்படியான தனிமனித புகழ்ச்சி பேச்சுகள் இருக்கலாம். ஆனால் பிறந்த நாள் விழா, திருமண விழா போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் இருக்க வேண்டும். இலக்கிய அறிமுகக் கூட்டங்களில் கருத்துக்களும் விழுமியங்களும் தாம் முக்கியம்.
ஒரு மேடையில் டி.ஆரும் ஜெயமோகனும் சேர்ந்து இருக்கலாம், அல்லது சாருவும் திரிஷாவும் ஒரு டி.வி நிகழ்ச்சியில் தோன்றலாம். நீங்கள் ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவில் கூட போய் பேசலாம். ஆனால் அங்கே ஒரு எழுத்தாளனின் இருப்பு ஒரு சிறுவெளிச்சத்தை உருவாக்குகிறது. ஆனால் ஜெயலலிதாவின் பாராட்டு விழாக்களின் பாணியை நாம் இலக்கிய மேடைக்கு கொண்டு வந்தால் இருக்கிற வெளிச்சத்தை துரத்தி மொத்தமாய் இருட்டில் மூழ்குகிறோம் என அர்த்தம். நாம் இருட்டான இடத்திற்கு வெளிச்சத்தை கொண்டு போகிறோம். அவர்கள் ஏற்கனவே வெளிச்சமாக உள்ள நம் இடத்தில் இருட்டை கொண்டு வருகிறார்கள். பணமும் அதிகாரமும் இருக்கிறவனின் காலில் நாம் விழுவதே நியாயம் என நம்மிடமே வந்து சொல்கிறார்கள்.
நம் பண்பாட்டை அங்கே கடன் கொடுக்கலாம், ஆனால் அவர்களின் பாசாங்கான அதிகார போதையின் பண்பாட்டை நாம் கடன் வாங்குவது அபத்தத்தின் உச்சம்.
வெகுஜன, அரசியல் மேடைகள் ஏற்கனவே குப்பை மேடு. வெகுஜன மக்களுக்கு பாதை காட்டுவது சிந்தனையாளனின் பணி. பாதை காட்ட வேண்டியன் குருடர்களின் பஜனையில் கலந்து கொள்ளலாம். ஆனால் குருடாக இருப்பதே சிறந்தது என தன் மேடையில் வந்து அவர்கள் பேச நாம் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே சுத்தமாக உள்ள இடத்தில் குப்பையை கொட்ட விடக் கூடாது..

சமூகம் நம்மை கவனிக்கவில்லை, நியாயமான அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பது இலக்கிய பதிப்பாளர்களின் நியாயமான வருத்தம் தான். ஆனால் அதற்காக நாம் நம் அடிப்படை நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் பார்த்து வளர்கிற ஒரு இளைய எழுத்தாளன் என்ன நினைப்பான்? நிறைய பணமும் செல்வாக்கும் வந்து விட்டால் நாமே மேடை அமைத்து இந்த எழுத்தாளர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் நம்மைப் பற்றி பேச வைத்து விடலாம். எழுத்து மீது கடப்பாடோ ஈடுபாடோ தேவையில்லை என்று தான் நினைப்பான். இன்று அப்படியான சூழல் வந்து விட்டது. முன்னர் இரண்டு சீனியர் எழுத்தாளர்கள் தாம் நட்சத்திர இரவுகள் நடத்தினார்கள். விதிவிலக்கு என நினைத்தோம். ஆனால் இன்று முதல் புத்தகம் போடுகிறவர்களே தனியாக கட் அவுட், பேனர் வைத்து நடிக நடிகைகளை வைத்து தன்னை மணிக்கணக்காய் புகழச் செய்து விளம்பரம் செய்து கிளுகிளுப்பு அடைகிறார்கள். அங்கு மேடையில் நம் இலக்கிய எழுத்தாளர்களும் போய் தம்பி நல்ல எழுத்தாளர் என அங்கீகாரம் கொடுக்கிறார்கள். பணம் இருந்தால் நல்ல எழுத்தாளனா?

ரித்தேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்கள் சினிமாவில் செய்வதை விட மோசமான சீரழிவை இங்கு இலக்கியத்தில் சில போலி எழுத்தாளர்கள் சந்தைப்படுத்தலின் பெயரில் செய்கிறார்கள். மஞ்சள் எழுத்தை எதிர்க்கலாச்சார எழுத்து, டிஜிட்டல் பின்நவீனத்துவம் என்றெல்லாம் கூறி மக்களை இவர்கள் ஏமாற்றுவதை பார்த்தால் பவர் ஸ்டால் உண்மையில் எவ்வளவு நல்லவர் எனத் தோன்றுகிறது. அவர் தன்னைத் தானே கோமாளி ஆக்குகிறார். இந்த போலி எழுத்தாளர்களை மக்களை கோமாளி ஆக்குகிறார்களே!

நாம் ஒரு விடாப்பிடியான லட்சியவாதியாக இருக்க வேண்டியதில்லை. அதே நேரம் எல்லாம் வியாபாரம் என்றும் இருக்க முடியாது. நடுவில் ஒரு கோட்டில் பயணிக்கிறோம் என நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் இருக்கும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை தகர்க்க அனுமதிக்கக் கூடாது. நாம் எதை எழுத்தில் வலியுறுத்துகிறோமோ அதை முடிந்தவரை செயலிலும் காட்ட வேண்டும். ஒருவனது தரமும் தீர்க்கமான பார்வையும் பொறுத்து ஒரு இலக்கிய அரசியல் பத்திரிகையில் இடம் அளிக்கிறோம் என்றால் அதன் பதிப்பகத்தின் வெளியீட்டு விழாவிலும் அதே கரார் தன்மை இருக்க வேண்டும். எழுத்தில் எல்லோரும் சமம் என்றால் மேடையில் அப்படியே இருக்க வேண்டும்.

பணம், பகட்டு, சரக்கு விநியோகம், வலைதொடர்பாக்கம், அற்ப விளம்பரம் மூலம் மக்களின் கவனம் கவரும் பாசாங்கு எழுத்தாளர்கள் எவ்வளவு நாள் நிலைப்பார்கள்? ஒரு மாதம், மூன்று அல்லது ஆறு மாதங்கள்? இவர்களிடம் நாம் கை கொடுக்கலாம், ஆனால் நம் நம் நம்பிக்கைகளை கைமாறக் கூடாது. எம்.ஜி சுரேஷ் என்றொருவர் இருந்தார். அசோகமித்திரனையே மிரட்டி தன்னை பாராட்டி எழுத வைத்தார். தன் ராஜேஷ் குமார் பாணி நாவலை குயூபிசம் என்று பாவ்லா பண்ணி வாசகர்களை குழப்பினார் - சிலர் ஏமாந்து வாசித்து காறி துப்பினார்கள். அவர் நாவலை சென்னை பல்கலையின் பாடத்திட்டத்தில் கூட வைத்தார்கள். ஆனால் இப்போது அவர் எங்கே போனார்? புத்தக வாசிப்பே இல்லாத இயக்குநர்களை மேடைக்கு கொண்டு வந்து கூட்டம் சேர்த்து தன்னை எழுத்தாளனாக நிறுவ முயல்பவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. ஊரில் திடீரென்று புது ஆட்கள் விநோதமாய் திரித்தால் புள்ள புடிகாரன் வரான் போல என்று தாய்மார்கள் குழந்தைகளை பூட்டி வைப்பார்கள். போலி எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை அப்படிக் கூட காப்பாற்ற முடியாது.

Comments

நல்ல கருத்துகள், ஆனாலும் எழுத்தாளர்களை ஒருமாதிரிப் பார்ப்பனர்கள் ஆக்குகிறீர்களோ என்றும் தோன்றுகிறது. (ஞானிகளாக விலகி இருக்க வேண்டும் என்றே நான் புரிந்துகொண்டேன்.)

அருமையான எழுத்துநடையில் அமைந்திருக்கிறது இந்தக் கட்டுரை. வாழ்க!
Srini said…
நல்ல கட்டுரை நண்பரே. ஒரு நோக்கமுள்ள எழுத்து!

நேற்று எழுத வந்த குஞ்சு குளுவான்களும் "ஜே .ஜே .சில குறிப்புகள்" ஒரு fake novel என்று விமர்சிக்கும் போது சிரிப்பும் ஒரு விதமான மகிழ்ச்சியும் கூடவே வருகிறது . ஏனெனில் காலம் கடந்து இந்த நாவல் விமர்சிக்கப்பட்டாலே சு ராவின் எண்ணம் நிறைவேறியது .(அதில் அவர் செய்த வடிவ பரிசோதனை என்ன !மொழியின் நடை என்ன ! )எந்த இலக்கியப் படைப்புக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் என்னுடைய விமர்சனத்தை ஒரு வரியில் முக நூல் பதிவாகப் போடமாட்டேன் .
ஆனால் இவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு பக்குவப் பட்டார்களா என்றால் இல்லை. நான் முகநூலில் நிறைய தமிழ் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் .வெகு சிலரையே எனது நட்பு வட்டாரத்தில் வைத்துள்ளேன். அவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் ரசனை நன்றாக இருப்பதால் மட்டும் . ஒரு இளையராஜா பாப் மார்லேயையும் பாப் டிலனையும் நிராகரிக்கலாம். அதற்கு ஒரு தகுதி உள்ளது, நேற்று முளைத்த காளான்கள் ஒரு உன்னதமான இலக்கிய முயற்சியை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கும் போது கடுங்கோபம் வருகிறது . சரி தான் அவர்களின் ரசனை அவ்வளவுதான். நாம் மேற்கொண்டு நல்ல எழுத்துக்களை எழுத பிரயத்தனப் படுவோம். சு ராவின் "இல்லாத ஒன்று" சிறுகதையில் வருவது போல குப்பைகளே இங்கு அதிகம்.

Regards,
Srinivasan
Chennai
Anonymous said…
Exactly

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...