முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக விலையின் இரு சிக்கல்கள்


புத்தக விலையை ஏன் குறைக்கக் கூடாது என்பது பற்றி ஒரு சர்ச்சை பேஸ்புக்கில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முடிவற்ற விவாதமாக தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டு எதிர்முனைகளில் இருந்து ஆட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று லட்சியத்தின் முனை. இன்னொன்று வணிகத்தின் முனை. எந்த புறச்செயலும் நிகழ இரண்டு முனைகளும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். ஆனால் அது நிகழ்வதில் ஒரு சிக்கல் உள்ளது.

இரண்டு விதமான பதிப்பகங்கள் உள்ளன. மலிவாய் பதிப்பிக்கிறவர்கள், அதிக விலையில் பதிப்பிக்கிறவர்கள். பொதுவாக மலிவான பதிப்பாளர்கள் அதிக பிரதிகள் விற்கிற வெகுஜன நூல்களை விற்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நூலை தரங்குறைந்த தாளில் அதிக எண்ணிக்கையில் குறைவான விலையில் பிரசுரிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு போதுமான லாபம் கிடைக்கிறது. குறைவாய் விற்கும் இலக்கிய அல்லது நடுநிலை பதிப்பாளர்களுக்கு அப்படி செய்ய தயக்கம் உள்ளது. ஒரு புத்தகத்துக்கு ஐநூறு வாசகர்கள் இருப்பதாக கொள்ளுங்கள். அதன் விலை 500. அதை 300க்கும் விற்கலாம். ஆனால் அதே ஐநூறு பேர்கள் தான் வாங்குவார்கள் என்றால் குறைவான முதலீட்டில் கூட குறைவான லாபம் தானே வரும். ஆங்கிலத்தில் இரண்டு விதமான விலைகளில் விற்கிறார்கள். ஒரு நூல் ஐநூறு ரூபாய் என்றால் இன்னொன்று 350 இருக்கும். ஆனால் தமிழில் இதை நடைமுறைப்படுத்தினால் விலை அதிகமான நூலின் விற்பனை பாதிக்கப்படுமோ என பதிப்பாளர்கள் அஞ்சுவார்கள். அதனால் தான் அவர்கள் இப்பிரச்சனையின் போது விற்பனை எண்ணிக்கை பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். அனைத்து தரப்பினருக்கும் தம் நூல்கள் போய் சேர வேண்டும் என நம்மைப் போல் அவர்களுக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் லாபத்தில் ஓட்டை விழுமென்றால் செய்ய மாட்டார்கள். ஆனால் சமூக சமத்துவம் ஒரு விழுமியத்தை மட்டுமே முக்கியமாய் நினைக்கும் எதிர்தரப்பினர் இந்த வணிக விகிதத்தை பார்க்க தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் தான் இரண்டு பேரும் எவ்வளவு தான் விவாதித்தாலும் இப்பிரச்சனை முடிவுக்கு வராது எனச் சொன்னேன். இம்முறையும் நான் புத்தக சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க மிகவும் தயங்குவேன். நான் அதிகமாய் பாதிக்கப்பட போவதில்லை. என் வாசிப்பு பெரும்பாலும் ஆங்கில நூல்களை நம்பியே உள்ளன. அவையும் கணிசமாய் இலவசமாய் தரவிறக்க கிடைக்கின்றன. தமிழை மட்டுமே நம்பியிருக்கும் சில வாசகர்களை நினைத்து தான் எனக்கு வருத்தம். அவர்களுக்கு சாப்பிட, வாடகை கொடுக்க, ஆடை வாங்க, நொறுக்கித் தீனிக்கு காசில்லையா, அது போல் புத்தகத்துக்கு செலவு செய்தால் என்ன என கேட்கக் கூடாது. ஏனென்றால் புத்தக வாசிப்பு ஒரு பண்பாட்டு நடவடிக்கை. நமக்கு தேவையான நூல்களுக்காய் முழுக்க நூலகத்தை நம்பி இருக்க இயலாது. நாம் தேடும் நூல்கள் தேவையான நேரத்தில் அங்கு கிடைக்காமல் இருக்கலாம். கோயிலுக்கு போக விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கோயில் பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இச்சமூகம் நிறைய செலவு செய்கிறது. முழுக்க ஒரு தனிமனிதனை நம்பி அது இல்லை. புத்தகங்களை நாடிச் செல்வதும் அப்படியான ஒரு தேவை தான். அதை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க செலவு செய்ய வேண்டும். இன்று தீபாராதனை செய்ய வேண்டுமென்றால் நீ நூறு ரூபாய் கட்டு என நாம் ஒரு பக்தனை கேட்பதில்லை. அது போல் புத்தக வாசிப்பை ஈர்ப்பானதாக மாற்ற புத்தகங்கள் கிடைப்பது எளிதாக வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை நாம் மொத்தமாய் பதிப்பாளன் மேல் சுமத்த முடியாது. அவர்கள் ஒரு தொழில் செய்கிறார்கள். நான் ஒரு ஆசிரியன். கற்பிக்கும் ஆர்வத்துக்காய் தான் அத்தொழில் செய்கிறேன். அது என் லட்சியம். ஆனால் அதில் இருந்து எனக்கு வருவாயும் வர வேண்டும். இல்லாவிட்டால் செய்ய மாட்டேன். இரண்டும் இணைய வேண்டும். பணம் இருந்து கற்பிக்கும் சூழல் இல்லாவிட்டாலும் செய்ய மாட்டேன். இப்போதைக்கு நம்மிடம் லட்சியம் மட்டுமே உள்ளது. வருவாய் இல்லை.
கிழக்கு பதிப்பகம் வெளிப்படையான தன்னை வியாபார நிறுவனமாய் அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் தரப்பு சுவாரஸ்யமானது. அவர்களுக்கு ஒரே முனை தான் – வருவாய். பேஸ்புக்கில் அப்பதிப்பகத்தின் ஹரன் பிரசன்னா விலை குறித்து ஒரு கருத்து சொல்கிறார். ஒரு நூலின் விலை பதிப்பகத்தின் தனிப்பட்ட முடிவு அல்லது நிலைப்பாடு சார்ந்தது என்கிறார், இதையும் கவனிக்க வேண்டும். பதிப்பு இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்ததாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு பதிப்பு தரமும் விலையும் உள்ளது. விலையை குறைத்தால் பதிப்பகத்தால் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க முடியாது. ஒரு பொருளை நாம் அதன் உள்ளடகத்திற்காக மட்டும் அல்ல, விலைக்காகவும் தான் வாங்குகிறோம். அதாவது நான் இருநூறு ரூபாய் விலையில் குறிப்பிட்ட தரத்தில் தான் ஒரு நூலை விரும்புகிறேன் என்றால் அதையே இன்னொரு தரத்தில் நூறு ரூபாய்க்கு தந்தால் மறுத்து விடுவேன். அப்பதிப்பகம் பற்றின என்னுடைய மனப்பதிவும், எதிர்பார்ப்பும் மாறும். இது பா.ஜ.கவின் இந்துத்துவா அரசியல் போலத் தான். இந்துத்துவாவை கைவிட்டு பொருளாதார வளர்ச்சியை கட்சியின் கொள்கையாக கையாளலாம் என சில தலைவர்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அக்கட்சியை ஆதரிக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் விலகி விடுவார்கள். அந்த அச்சத்தில் பா.ஜ.க இந்துத்துவாவை பற்றிக் கொண்டிருக்கும்.

மானை வேட்டையாடத் தான் சிங்கத்திற்கு கோரைப் பற்கள். சிங்கத்திற்கு கோரைப்பற்கள் உள்ள காரணத்தினால் தான் மான்களும் இயற்கையில் இருக்கின்றன. இருவரையும் பிரிக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...