முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி – பந்து வீச்சு




2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கும். அதுவரை தொடரில் நன்றாக வீசி வந்த நம் வேகவீச்சாளர்கள் பதறி விதிர்விதிர்த்து மோசமாக வீசினர். 12 வருடங்களுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நம் வேகவீச்சாளர்கள் அதே போல் பதறி குழம்பிப் போய் பந்து வீசினர். ஷாமி, மோஹித் ஆகியோர் இத்தொடர் முழுக்க ஒரு குறிப்பிட்ட நீளத்தில் தொடர்ந்து வீசினதால் மட்டுமே நன்றாக வீசி விக்கெட்கள் வீழ்த்தினர். ஆனால் இன்றோ ஆஸ்திரேலியா ஆடுவதற்கு முன்பே அவர்கள் நிதானம் இழந்து பயப்பட துவங்கினர். அதனால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தும் மிகை ஆர்வத்தில் ஒரே ஓவரில் பல பந்துகளை வீச முயன்று சொதப்பினர்.


 இன்றைய ஆட்டத்துக்கான ஆடுதளம் சற்றே மெத்தனமானது. ஆனால் இலங்கை ஆஸ்திரேலியா காலிறுதி ஆட்டம் நடந்த அன்று அளவுக்கு மெத்தனம் அல்ல. இந்த தளத்தில் 300க்குள் ஆஸ்திரேலியாவை நாம் சுருட்டியிருக்க முடியும். சற்று நிதானமாக அமைதியாக வீசியிருக்கும் பொருட்டு. ஆனால் நம் பந்து வீச்சாளர்கள், களத்தடுப்பாளர்கள் யாருமே இன்று உள்ளமைதியுடன் இல்லை.
இருந்தும் கூட அஷ்வின், ஷாமி ஆகியோர் அவ்வப்போது நன்றாக வீசியதால் மேக்ஸ்வெல், வாட்ஸன் ஆகியோரை சரியான நேரத்தில் வீழ்த்த முடிந்தது. வார்னர், கிளார்க் போன்றோரின் விக்கெட்டுகள் அதிர்ஷ்டத்தில் கிடைத்தன. மேக்ஸ்வெலின் விக்கெட் கிடைத்ததும் நம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமானது. அடுத்து எட்டு ஓவர்கள் நன்றாக வீசினார்கள். அமைதியும் நிதானமும் பந்து வீச்சில் தாளமும் திரும்பியது. இறுதி சில ஓவர்கள் மீண்டும் பதற்றத்தில் மோசமாய் வீச ஜான்சனின் காட்டு சுற்றலில் இருபது ஓட்டங்கள் கூடுதலாய் கொடுக்க நேர்ந்தது.
மேக்ஸ்வல் மட்டும் வெளியேறாமல் 48 ஓவர்கள் வரை ஆடியிருந்தா ஆஸ்திரேலியா 370இல் இருந்து 400 வரை எட்டி இருக்கும். அவ்விதத்தில் 328க்குள் சுருட்டியது என்பது ஒரு சின்ன சாதனை தான்.
இப்போதும் கூட இந்த 329 இலக்கை நம்மால் விரட்டி அடைய முடியும். ஆனால் அதற்கு நாம் நிதானமாக ஆட வேண்டும். முதல் இருபது ஓவர்கள் விக்கெட் கொடுக்க கூடாது. நூறு ஓட்டங்கள் எடுத்தால் கூட போதும். ஜான்சன், ஸ்டார்க்கை கடந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வீச்சாளர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவின் வியூகம் எப்போதுமே முதல் இருபது ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் எடுப்பது தான். அதனால் தான் அவர்கள் மட்டையாட்டத்தை வலுவாக வைத்து பந்து வீச்சை பலவீனமாக கொண்டுள்ளார்கள். அவர்களின் திட்டத்தை முறியடித்து நிதானமாக ஆடினால் நாம் நிச்சயம் வெல்ல முடியும். ஆனால் பந்து வீச்சில் காட்டின பதற்றத்தை மட்டையாட்டத்திலும் காட்டினால் நாம் 20 ஓவருக்குள் 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் கொடுத்திருப்போம். பிறகு தோனியும் ரெய்னாவும் ஜடேஜாவுமாக நத்தை ஓட்டம் ஓடி 80 ஓட்டங்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் தோற்போம். 2003 இறுதி ஆட்டம் மீண்டும் மறு ஒளிபரப்பானது போல் இருக்கும்.
இன்று எந்த இந்தியா மட்டையாடுகிறது எனப் பார்ப்போம். நடுக்கமுற்ற இந்தியாவா அமைதியான இந்தியாவா? 2011 இறுதிப் போட்டியில் இறங்கின இந்தியாவா 2003இல் களமிறங்கின இந்தியாவா?
இப்போதைக்கு நம் வெற்றி வாய்ப்பு 60-40 தான். அரை இறுதி போட்டிகளில் பதற்றமாவது இயல்பு தான். நியுசிலாந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதற்றமாக பந்து வீசியது. ஆனால் மட்டையாட்டத்தில் அமைதியும் நிதானமும் கொண்டிருந்தது. அதனால் வென்றது. இந்தியா என்ன பண்ணுகிறது என பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...