முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோனியின் தலைமையும் இந்திய உளவியலும்


(இரண்டு வாரங்களுக்கு முன் கல்கி வார இதழில் வெளியான கட்டுரை)

இந்திய அணி ரஜினி போல. ரஜினி படத்தில் அவர் இடைவேளைக்கு சற்று முன்பாக ஆரம்பித்து உறவினர், நண்பர்கள், குட்டி வில்லன்கள், மெயின் வில்லன் என ஒவ்வொருவரிடமாக அடி வாங்கிக் கொண்டே வருவார். ஆனால் கிளைமேக்ஸில் மிக முக்கியமான கட்டத்தில் திரும்ப அடித்து சாகசங்கள் செய்து வென்று விடுவார். இந்தியா உலகக்கோப்பைக்கு சற்று முன்பு வரை கிட்டத்தட்ட ஐ.சி.யுவில் அட்மிட் ஆகிற நிலையில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் ஆடி வந்தது. அதற்கு முன்பு இங்கிலாந்தில் துவண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.


 உலகக்கோப்பைக்கு முன்பு இவ்வளவு நீளமான தொடர் தேவைதானா என நிபுணர்கள் வியந்தனர். தொடர் தோல்விகள் தாங்க முடியாதது போல் தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கும் அடுத்த தலைவரான கோலிக்கும் உள்மோதல் என பேசிக் கொண்டார்கள். அணியின் இயக்குநராக புதுப்பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி கோலியின் அணியை சேர்ந்தவர் என்றும், பிளட்சரின் அதிகாரத்தை குறைத்து, பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கினது தோனிக்கு அதிருப்தி அளித்தது என்றார்கள். இது போக தோனியின் காட்பாதரான இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் ஊழல் வழக்குகளில் மாட்டிக் கொண்டு கிட்டத்தட்ட தன் அதிகார நாற்காலியில் இருந்து விளிம்புக்கு நகர்த்தப்பட்டார். இப்போது அவர் அதிகாரபூர்வமாய் தன் நாற்காலியை இழந்தே விட்டார். ஐ.பி.எல்லில் தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சூதாட்ட குற்றத்துக்கும் தோனிக்கும் எப்படி சம்மந்தமே இல்லாமல் இருக்க முடியும் என கேட்டார்கள். தோனியின் தலைமீது சனிபகவான் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். இதே போன்ற ஒரு சூழல் சேம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சற்று முன் நிலவிய போது தோனி எந்த குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல் அணியை திறமையாக அணிவகுத்து சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றார். இப்போது சூடு உச்சத்தில் இருக்கும் போது அவர் மிக கூலாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நோக்கி இந்தியாவை அணிவகுத்து நடத்திக்கொண்டிருக்கிறார். உலகக்கோப்பையை வெல்ல சாத்தியம் கொண்ட அணியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு வெகுபக்கத்தில் வந்திருக்கிறது.
 எப்போதெல்லாம் பிரச்சனைகள் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் தன் ஆட்டத்திறனை, தலைமைத்திறனை பலமடங்கு உயர்த்தி செயல்பட தோனிக்கு வருகிறது. கங்குலி இது போன்ற நிலைமையில் தொடர்ந்து தோல்விகளை தழுவி, அணியை கிரெக் சாப்பல் வசம் இழந்து விட்டு அணியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். திராவிட்டும் சச்சினும் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் தோனி நெருக்கடி மிகும் போது தான் மிகச்சிறப்பாக ஆடுகிறார். அவருக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டுக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு சிறந்த பதிலை கிரிக்கெட்டுக்குள் இருந்தபடி தான் அளிக்க முடியும் என.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பொதுவாக ஒரு பெருந்தொடருக்கு மிக கராறாக அறிவியல்பூரவமாக தயாராவார்கள். எப்படியும் உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு குட்டித்தொடர்களையாவது அபாரமாக வென்று விடுவார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அனைத்துத் திறன்களையும் சோதித்து, பயன்படுத்தி உச்சகட்டம் வரும் போது மிக லாவகமாய் முழு திறமையுடன் செயல்படலாம் என்பது அவ்வணிகளின் நம்பிக்கை. இறுதிப்பரீட்சைக்கு மாணவர்கள் தயாராவது போன்ற பாணி இது. எனக்குத் தெரிந்து மூன்று வருடங்களுக்கு மேலாக பத்தாம் வகுப்புக்கு இவ்வாறு தயாராகிற மாணவர்கள் இறுதித்தேர்வின் போது களைத்து பதற்றமாகி சொதப்பி விடுவார்கள். ஆனால் அதுவரை மெதுவாக உழைத்து தயாராகி இறுதி சில மாதங்கள் முழு உழைப்பையும் செலுத்தி படிக்கிற மாணவர்கள் சட்டென யாரும் எதிர்பாராமல் முதல் இடத்தை பிடித்து விடுவர்கள். இப்போது உலகக்கோப்பையிலும் இது தான் நடந்து வருகிறது.
 அனைவருக்கும் செல்ல அணியான தென்னாப்பிரிக்கா வெறும் சப்பாணி அணிகளாக அதுவரை தோற்றமளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக லீக் போட்டிகளில் தோற்றது. ஆஸ்திரேலியா நியுசிலாந்திடம் தோற்றது. இரண்டு மாதங்களாக அனைத்து போட்டிகளிலும் தோற்று வந்த இந்தியா இதுவரை அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா முக்கியமான ஆட்டங்களில் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் போதும் என நம்புகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தொடர்ச்சியாக நன்றாக ஆடினால் தான் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியும் என நம்புகிறது. இவை இருவேறுபட்ட அணுகுமுறைகள். இப்போதைக்கு இந்திய அணுகுமுறை தான் வென்றிருக்கிறது.
 இது இரண்டு கலாச்சாரங்கள் காலத்தை பார்க்கிற முறையில் உள்ள வேறுபாட்டையும் தான் காட்டுகிறது. ஐரோப்பியர்கள் காலத்தை நேர்கோட்டாய் பார்க்கிறார்கள். கடந்த காலம் வளர்ந்து நிகழ்காலம் ஆகிறது. கடந்த காலம் நிகழ்காலத்தை தீர்மானிக்கிறது. இந்தியர்கள் காலத்தை சுழற்சியாய் பார்க்கிறோம். இதில் கடந்த காலம் நிகழ்காலம் எனும் வேறுபாடில்லை. ஒரே காலம் தான். நாம் தற்போது இருக்கிற இயங்குகிற காலம் தான் முக்கியம். இந்த இந்திய மனப்பான்மையை தோனி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால் அவர் வீரர்களை தேவையின்றி நெருக்கடிக்கு உள்ளாக்காமல் அவர்கள் போக்குக்கு இயங்க அனுமதிக்கிறார். அணிக்கு வளைந்து கொடுக்கிறார். இதனால் அணியும் அவருக்கு ஏற்றபடி வளைகிறது.

காலிறுதி, அரையிறுதி, இறுதி என மூன்றே போட்டிகள் தாம். அவற்றை வென்றால் உலகமே நம் காலுக்கு கீழ். அவற்றுக்கு முன்பாக எத்தனை போட்டிகளை வென்றாலும் அதை யாரும் நினைவில் வைத்திருக்க போவ்தில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிப்போய் விரைகிற ரயிலில் தொத்தி ஏறி, ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்வில் யாரையோ முந்தி, அங்கே இங்கே பிடித்து வேலை வாங்கி, நெரிசலில் ஓடி நெரிசலில் குழந்தை பெற்று, அதற்கு பள்ளிக்கூட சீட் வாங்கி, அதை பத்தாம் வகுப்புக்கு தயாராக்கி இவ்வளவு விசயங்களை ஓடி முண்டியடித்து அடைந்து பழகுவது தானே இந்திய வாழ்க்கை. ஓட்டத்தின் முடிவில் அந்த கடைசி நொடி, அப்போது எம்பி முன் பாய்வது தான் முக்கியம் என நன்கு உணர்ந்தவர்கள் அல்லவா நாம். காலம் என்பது அந்த நொடியில் தான் உயிர் வாழ்கிறது. இந்த இந்திய மனப்பான்மையை மிக நன்றாக புரிந்து கொண்டவர் என்பதால் தான் தோனி ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...