Skip to main content

தோனியின் தலைமையும் இந்திய உளவியலும்


(இரண்டு வாரங்களுக்கு முன் கல்கி வார இதழில் வெளியான கட்டுரை)

இந்திய அணி ரஜினி போல. ரஜினி படத்தில் அவர் இடைவேளைக்கு சற்று முன்பாக ஆரம்பித்து உறவினர், நண்பர்கள், குட்டி வில்லன்கள், மெயின் வில்லன் என ஒவ்வொருவரிடமாக அடி வாங்கிக் கொண்டே வருவார். ஆனால் கிளைமேக்ஸில் மிக முக்கியமான கட்டத்தில் திரும்ப அடித்து சாகசங்கள் செய்து வென்று விடுவார். இந்தியா உலகக்கோப்பைக்கு சற்று முன்பு வரை கிட்டத்தட்ட ஐ.சி.யுவில் அட்மிட் ஆகிற நிலையில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் ஆடி வந்தது. அதற்கு முன்பு இங்கிலாந்தில் துவண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.


 உலகக்கோப்பைக்கு முன்பு இவ்வளவு நீளமான தொடர் தேவைதானா என நிபுணர்கள் வியந்தனர். தொடர் தோல்விகள் தாங்க முடியாதது போல் தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கும் அடுத்த தலைவரான கோலிக்கும் உள்மோதல் என பேசிக் கொண்டார்கள். அணியின் இயக்குநராக புதுப்பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி கோலியின் அணியை சேர்ந்தவர் என்றும், பிளட்சரின் அதிகாரத்தை குறைத்து, பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கினது தோனிக்கு அதிருப்தி அளித்தது என்றார்கள். இது போக தோனியின் காட்பாதரான இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் ஊழல் வழக்குகளில் மாட்டிக் கொண்டு கிட்டத்தட்ட தன் அதிகார நாற்காலியில் இருந்து விளிம்புக்கு நகர்த்தப்பட்டார். இப்போது அவர் அதிகாரபூர்வமாய் தன் நாற்காலியை இழந்தே விட்டார். ஐ.பி.எல்லில் தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சூதாட்ட குற்றத்துக்கும் தோனிக்கும் எப்படி சம்மந்தமே இல்லாமல் இருக்க முடியும் என கேட்டார்கள். தோனியின் தலைமீது சனிபகவான் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். இதே போன்ற ஒரு சூழல் சேம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சற்று முன் நிலவிய போது தோனி எந்த குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல் அணியை திறமையாக அணிவகுத்து சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றார். இப்போது சூடு உச்சத்தில் இருக்கும் போது அவர் மிக கூலாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நோக்கி இந்தியாவை அணிவகுத்து நடத்திக்கொண்டிருக்கிறார். உலகக்கோப்பையை வெல்ல சாத்தியம் கொண்ட அணியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு வெகுபக்கத்தில் வந்திருக்கிறது.
 எப்போதெல்லாம் பிரச்சனைகள் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் தன் ஆட்டத்திறனை, தலைமைத்திறனை பலமடங்கு உயர்த்தி செயல்பட தோனிக்கு வருகிறது. கங்குலி இது போன்ற நிலைமையில் தொடர்ந்து தோல்விகளை தழுவி, அணியை கிரெக் சாப்பல் வசம் இழந்து விட்டு அணியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். திராவிட்டும் சச்சினும் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் தோனி நெருக்கடி மிகும் போது தான் மிகச்சிறப்பாக ஆடுகிறார். அவருக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டுக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு சிறந்த பதிலை கிரிக்கெட்டுக்குள் இருந்தபடி தான் அளிக்க முடியும் என.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பொதுவாக ஒரு பெருந்தொடருக்கு மிக கராறாக அறிவியல்பூரவமாக தயாராவார்கள். எப்படியும் உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு குட்டித்தொடர்களையாவது அபாரமாக வென்று விடுவார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அனைத்துத் திறன்களையும் சோதித்து, பயன்படுத்தி உச்சகட்டம் வரும் போது மிக லாவகமாய் முழு திறமையுடன் செயல்படலாம் என்பது அவ்வணிகளின் நம்பிக்கை. இறுதிப்பரீட்சைக்கு மாணவர்கள் தயாராவது போன்ற பாணி இது. எனக்குத் தெரிந்து மூன்று வருடங்களுக்கு மேலாக பத்தாம் வகுப்புக்கு இவ்வாறு தயாராகிற மாணவர்கள் இறுதித்தேர்வின் போது களைத்து பதற்றமாகி சொதப்பி விடுவார்கள். ஆனால் அதுவரை மெதுவாக உழைத்து தயாராகி இறுதி சில மாதங்கள் முழு உழைப்பையும் செலுத்தி படிக்கிற மாணவர்கள் சட்டென யாரும் எதிர்பாராமல் முதல் இடத்தை பிடித்து விடுவர்கள். இப்போது உலகக்கோப்பையிலும் இது தான் நடந்து வருகிறது.
 அனைவருக்கும் செல்ல அணியான தென்னாப்பிரிக்கா வெறும் சப்பாணி அணிகளாக அதுவரை தோற்றமளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக லீக் போட்டிகளில் தோற்றது. ஆஸ்திரேலியா நியுசிலாந்திடம் தோற்றது. இரண்டு மாதங்களாக அனைத்து போட்டிகளிலும் தோற்று வந்த இந்தியா இதுவரை அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா முக்கியமான ஆட்டங்களில் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் போதும் என நம்புகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தொடர்ச்சியாக நன்றாக ஆடினால் தான் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியும் என நம்புகிறது. இவை இருவேறுபட்ட அணுகுமுறைகள். இப்போதைக்கு இந்திய அணுகுமுறை தான் வென்றிருக்கிறது.
 இது இரண்டு கலாச்சாரங்கள் காலத்தை பார்க்கிற முறையில் உள்ள வேறுபாட்டையும் தான் காட்டுகிறது. ஐரோப்பியர்கள் காலத்தை நேர்கோட்டாய் பார்க்கிறார்கள். கடந்த காலம் வளர்ந்து நிகழ்காலம் ஆகிறது. கடந்த காலம் நிகழ்காலத்தை தீர்மானிக்கிறது. இந்தியர்கள் காலத்தை சுழற்சியாய் பார்க்கிறோம். இதில் கடந்த காலம் நிகழ்காலம் எனும் வேறுபாடில்லை. ஒரே காலம் தான். நாம் தற்போது இருக்கிற இயங்குகிற காலம் தான் முக்கியம். இந்த இந்திய மனப்பான்மையை தோனி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால் அவர் வீரர்களை தேவையின்றி நெருக்கடிக்கு உள்ளாக்காமல் அவர்கள் போக்குக்கு இயங்க அனுமதிக்கிறார். அணிக்கு வளைந்து கொடுக்கிறார். இதனால் அணியும் அவருக்கு ஏற்றபடி வளைகிறது.

காலிறுதி, அரையிறுதி, இறுதி என மூன்றே போட்டிகள் தாம். அவற்றை வென்றால் உலகமே நம் காலுக்கு கீழ். அவற்றுக்கு முன்பாக எத்தனை போட்டிகளை வென்றாலும் அதை யாரும் நினைவில் வைத்திருக்க போவ்தில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிப்போய் விரைகிற ரயிலில் தொத்தி ஏறி, ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்வில் யாரையோ முந்தி, அங்கே இங்கே பிடித்து வேலை வாங்கி, நெரிசலில் ஓடி நெரிசலில் குழந்தை பெற்று, அதற்கு பள்ளிக்கூட சீட் வாங்கி, அதை பத்தாம் வகுப்புக்கு தயாராக்கி இவ்வளவு விசயங்களை ஓடி முண்டியடித்து அடைந்து பழகுவது தானே இந்திய வாழ்க்கை. ஓட்டத்தின் முடிவில் அந்த கடைசி நொடி, அப்போது எம்பி முன் பாய்வது தான் முக்கியம் என நன்கு உணர்ந்தவர்கள் அல்லவா நாம். காலம் என்பது அந்த நொடியில் தான் உயிர் வாழ்கிறது. இந்த இந்திய மனப்பான்மையை மிக நன்றாக புரிந்து கொண்டவர் என்பதால் தான் தோனி ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...