Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

”எங் கதெ”: யாருடைய பிறழ்வு?

Image result for எங் கதெ

(தி ஹிந்துவில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்)

பின்னட்டை சுருக்கத்தில் “எங் கதெ” ஒரு நெடுங்கதை என குறிப்பிட்டுள்ளார்கள். உள்ளே இரண்டாம் பக்க பதிப்பி விவரக் குறிப்பில் இது ஒரு நாவல் எனப்படுகிறது. இக்கதை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சிறு நெளிவு கூட இன்றி நேராய் பயணிக்கிறது. இது சிறுகதையின் குணம். நம்மை ஒரே வாசிப்பில் முடித்து விடத் தூண்டுகிறது. அதுவும் சிறுகதையின் தன்மையே. அதே போல் கிளைக்கதைகள், மையக்கருவோடு நேரடியாய் இணையாத பிசிறான தகவல்கள், எண்ணச்சிதறல்கள், விவரிப்புகள் என நாவலுக்குரிய ரவிக்கை, உள்பாவாடை, முந்தானை ஏதுமற்ற ஒற்றை நீள கவுன் இது. நாவலுக்கு உரித்தான உளவியல் சிக்கல்கள் உண்டென்றாலும் அவற்று தனியான விரிவான இடத்தை இமையம் அளிப்பதில்லை. ஆக, இதை ஒரு நாவலின் நுணுக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட சிறுகதை எனலாம்.


இரண்டு குழந்தைகள் கொண்ட கமலம் எனும் ஒரு மேல்சாதி இளம் விதவையுடன் கிராமத்தில் வேலையற்றிருக்கும் கீழ்மத்திய வர்க்க இடைநிலை சாதி ஆண் கொள்ளும் “தகாத உறவு”, அது ஏற்படுத்தும் சமூக மற்றும் அகச்சிக்கல்கள் தாம் கதையின் களம். நாவலின் போக்கில் குறிப்பிடப்படும் கோவலன்—மாதவி கதையாகவும் இதைப் பார்க்கலாம். இது போன்ற கதைகளில் ஆணுக்கு தன் காதலி மேல் ஒரு கட்டத்தில் சந்தேகங்கள் தோன்றும். சந்தேகத்தினால் மனக்கசப்பும் வெறுப்பும் அதன் விளைவாய் வன்முறையும் விளையும். இறுதியில் அவன் மோகம் தணிந்து, ”மனத் தெளிவடைவான்”. இந்த டெம்பிளேட்டில் கறுப்புவெள்ளை காலம் துவங்கி ”சிந்துபைரவி”, அதன் பின் பாலா, வெங்கட்பிரபு போன்றோரின் பெண் வெறுப்பு படங்கள் வரை தமிழ்சினிமாவில் பல படங்கள் தோன்றி உள்ளன. புனைவிலக்கியத்தில் சமகாலத்தில் ஜெ.பி. சாணக்யா உள்ளிட்ட பலரது சிறுகதைகளில் ஆதிக்கம் செய்யும் பெண்ணிடம் மாட்டி அவஸ்தைப்படும் ”பெண் தன்மை” கொண்ட ஆணின் உலகம் மீளமீள பேசப்படுவதை கவனிக்கலாம். இப்படி இரண்டு வகையான கதையாடல்களின் நீட்சியாகவும் இமையத்தின் இப்படைப்பை பார்க்கலாம்.

 பெண்ணுடலின் போதை ஒரு மாயை என விமர்சிக்கும் சித்தர் பாடல் குறிப்புகளும் நாவலில் வருகிறது. இறுதியில் பெண் மோகத்தில் இருந்து விடுபடும் கதைசொல்லியான விநாயகம் பெண்ணுடல் என்பது மரணத்துக்கு பின் அழுகி புழு நெளியும் வெறும் சதைப்பிண்டம் தானே எனும் அருவருப்புணர்வுக்கு உள்ளாகி வெறுமையை உணர்கிறான். இந்த ஆன்மீக தரிசனத்திற்கு தோதான மனநிலை விநாயகத்துக்கு ஏற்கனவே உள்ளதாய் நாவலில் ஆரம்ப குறிப்புகள் இல்லாததால் கதையின் முடிவு திடுதிப்பென பொருந்தாமல் தோன்றுகிறது. ஆனாலும் சித்தர் மரபின் படி பெண் சர்ந்த பார்வையை வளர்த்தெடுக்கும் ஒரு சிறு விருப்பம் இமையத்திற்கு உள்ளது தெரிகிறது.

இது போன்ற கதைகளில் பெண் பாத்திரம் ஒருசார்புடன் உருவாக சாத்தியம் அதிகம். ஆனால் இமையம் மிக கவனமாய் கமலத்திற்கான வெளியை உருவாக்குகிறார். அவளுடனான உறவே தன் வாழ்வை சீரழித்ததாய் விநாயகம் புலம்பும் போதே அவனுடைய தொனியில் ஒரு சுயபகடியையும் சேர்த்து விடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு பலவீனமான கோமாளியாக அவன் தோற்றம் கொள்கிறான். அவனுடைய குரல் தஸ்தாவஸ்கியின் Notes from Underground நாவலின் கதைசொல்லியை நினைவுபடுத்துகிறது. அந்நாவலின் கதைசொல்லி தன்னைச் சுற்றியுள்ளோரை போலிகள் என்று கரித்துக் கொட்டியபடியே இருக்கிறான். ஆனால் அவனது நிலைப்பாட்டின் போலித்தனம் போக போக வாசகனுக்கு புலப்படத் துவங்கும். இமையத்தின் நெடுங்கதையில் கமலத்தின் மீது விநாயகம் தொடர்ந்து அடுக்கும் குற்றச்சாட்டுகள் ஒரு கட்டத்தில் அவளுடைய நியாயங்களாய் உருமாறுகின்றன.

 அவள் விநாயகத்தை பொருளாதார ரீதியாகவோ உணர்வுரீதியாகவோ சுரண்டுவதாய் சில காட்சிகளை இமையம் எளிதில் உருவாக்கி வாசகர்களை நெகிழவும் கொதிப்படையவும் வைத்து விநாயகத்தை ஒரு டிராஜிக் நாயகனாக உயர்த்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்வதில்லை. அவள் முடிந்தளவுக்கு அவனை ஜனநாயகபூரவமாய் நடத்துகிறாள். ஒரு கிராமத்தில் பள்ளி குமாஸ்தாவாக வந்து சேரும் அவள் தன் மகள் பள்ளி வயதை எட்டும் வரையில் விநாயகத்தையே நம்பி இருக்கிறாள். பின்னர் கடலூரில் சி.இ.ஓ அலுவலகத்திற்கு மாற்றம் வரும் போது அவளது சூழலும் சார்புகளும் இயல்பாகவே மாறுகின்றன. 

வயதான சி.இ.ஒ அவள் மீது சபலம் கொண்டு ஆரம்பத்தில் நெருக்கடி கொடுக்கிறார். பின்னர் உதவிகள் செய்கிறார். ஆதரவு கொடுக்கும் போர்வையில் அவளை தன்வசப்படுத்த முயல்கிறாள். அவள் ஒரு கட்டத்தில் அவரை ஏற்கிறாள். இது ஒரு முக்கியமான திருப்பம். சி.இ.ஒவின் குடும்பத்தினர் அவள் அவருக்கு தொலைபேசிய நேரம் மற்றும் அவள் அவரை “என் செல்லமே தங்கமே குட்டி டார்லிங்” என கொஞ்சி அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆதாரமாய் காட்டி அவள் வீட்டுக்கு வந்து தகராறு பண்ணுகிறார்கள். அவளை ஆத்மார்த்தமாய் நேசிப்பதாய் கோரும் விநாயகத்தை அவள் ஒருமுறை கூட அன்பொழுக அழைத்ததில்லை. ஆனால் அவளை பயன்படுத்த நினைக்கும் 57 வயதான ஒரு வக்கிர மனிதரை அவளால் எப்படி இப்படி காதல் வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய முடிகிறது? இதன் தர்க்கம் அவனுக்கு விளங்கவில்லை.
அவள் வி.இ.ஒவை தவிர்த்திருக்கலாம். அவளுக்கு இத்தனைக்கும் எந்த பொருளாதார நெருக்கடியும் இல்லை. வேலையை விட்டாலும் அவளால் வசதியாய் வாழ முடியும். ஆனாலும் அவள் மசிந்து போகிறாள். இது ஏன் என்பதற்கு நாவலில் நேரடியான பதிலே இல்லை. பெண் மனத்தின் புதிர் இது. நாவலில் இமையம் இதை கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. விநாயகத்திடம் அவள் எப்போதுமே விறைப்பாய் கௌரவம் குறையாமலே நடந்து கொள்கிறாள். தன் பெற்றோர் மற்றும் மாமனாரின் சொத்துக்களை நிர்வகிக்கிறாள். யாரையும் சாராமல் வாழ்கிறாள். ஆனால் பாலியல் ஆதரவு சார்ந்து அவளுக்குள் ஒரு தடுமாற்றம் எப்போதும் இருந்து வருகிறது. அவள் ஒரு கிழவரிடம் வீழ்கிறாள். விநாயகம் அவளது நடத்தைக்கேட்டை சுட்டி அவளை கடுமையாய் சாட அவள் அதற்கு இரண்டு பதில்கள் அளிக்கிறாள். வி.இ.ஒ தன்னை மிகவும் தொந்தரவு செய்ததாகவும், கொஞ்ச காலம் அவரை “லூசாக்கலாம்” என நினைத்து கொஞ்சலாய் குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள். ஆனால் மாறாக இறுதியில் அவர் தன்னை “லூசாக்கி” விட்டதாய் சொல்கிறாள். இந்த விடலை விளையாட்டில் அவள் அடையக் கூடிய சிலிர்ப்பு தான் என்னவாய் இருந்திருக்கும்? இமையம் நம்மை ஊகிக்க விட்டு விடுகிறார். அடுத்து அவன் கமலத்திடம் கேட்கிறன்: ”இன்னும் எத்தன் மாப்ள மாத்துவ?”
அவள் பதிலளிக்கிறாள் “நீ சொல்றபடியே வச்சிக்குவோம். நீ பாட்டுக்கு கல்யாணம் கட்டிக்கிட்டு போயிட்டா என்னோடது மானத்த பார்க்குமா? அது மட்டும் மண்ணாலியா செஞ்சிருக்கு?”. இக்கேள்விகளில் உள்ள தனிமையும் கசப்பும் நெஞ்சை உருக்கக் கூடியது. அதுவரை விநாயகத்தின் தனிமையும் கைவிடப்படலையும் பேசி வந்த கதை சட்டென அப்பெண்ணின் உலகை நோக்கி திரும்புகிறது.
“என் கதெ” சித்தர் வரிகளின் வழியே பழைய பெண் வெறுப்பு கதையாடலை முன்னெடுக்கிறது என பெருந்தேவி விமர்சிக்கிறார். இப்பார்வையை அவர் விநாயகம் முடிவில் சொல்லும் சில வரிகளில் இருந்து உருவாக்குகிறார். ஆனால் இக்கதையை கமலத்தின் தரப்பில் இருந்து படிக்கையில் நமக்கு முற்றிலும் வேறுவகையான புரிதலே கிடைக்கிறது. சொல்லப்போனால் ஆணின் தரப்பை விட பெண்ணின் தரப்பே “என் கதெயில்” வலுவாய் உள்ளது.

கமலம் தன்னை தொடர்ந்து மட்டம் தட்டுவதை விநாயகம் ஏற்கிறான். ரசிக்கக் கூட செய்கிறானோ என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் தன்னை விட மேலாக வி.இ.ஒவை நடத்துகிறாள் என்பது அவனை மிகவும் காயமடைய வைக்கிறது. அவளை கொல்லத் தூண்டும் அளவுக்கு வஞ்சினம் கொள்கிறான். அவளிடம் இருந்து முற்றுமுழுதாய் பிரிகிறான். அதற்கு அடுத்த அத்தியாயம் அற்புதமானது. அவனுக்கு அவள் தனது மறைந்த கணவன் பற்றி சொன்ன சித்திரம் நினைவுக்கு வருகிறது. ஏன் அவன் தொடர்ந்து தன் காதலியின் முதல் கணவன் பற்றியே தீவிரமாய் சிந்திக்கிறான்? அவனால் அவள் கணவன் இடத்தை பிடிக்க இயலாது. ஆனால் மற்றொரு ”கள்ளப்புருஷன்” அவளுக்கு வந்த பிறகு அவன் இயல்பாகவே தன்னை அவள் கணவனுடன் ஒப்பிட்டு மனதளவில் ஆறுதல் கொள்கிறான். அவரைப் பற்றி அவன் நினைவுகொள்ளும் சித்திரம் மிகவும் கனிவானதாய் உள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. விநாயகத்துக்கு அவளது மறைந்த கணவன் அவளால் ஏமாற்றப்பட்ட அவனது “மறுபிரதி”. அதிகாரபூர்வமான, அனைவரும் போற்றி விரும்பிய ஒரு அழகிய மறுபிரதி.

இந்த இடத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது. கமலா தனது பிறழ்வுக்கு கணவன் இல்லாது தனிமரமாய் இருப்பது காரணம் என்கிறாள். அவன் தன்னை மணந்து ஊரறிய ஏற்க வேண்டும் என்கிறாள். சுயசார்பும் சுதந்திரமும் கொண்ட நவீனப் பெண்ணான அவளது இந்த சற்று “பிற்போக்கான” பரிமாணம் சுவாரஸ்யமானது. அவள் அவனை தொடர்ந்து ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துவதும் அவன் அப்படி நடந்து கொள்வதனால் தான். அதேநேரம் வி.இ.ஒ அதிகாரத்தில் அவளை விட மேலான இடத்தில் இருக்கிறார். அவருக்கு அவளை ஆதிக்கம் செய்யும் “ஆண்மை” இருக்கிறது. அதனால் அவரிடத்து அவள் குழைகிறாள். இப்படி இக்கதையின் பாத்திரங்களுக்கு என்று தனித்த நிரந்த குணங்கள் ஏதுமில்லை. யாருடன் உறவாடுகிறார்களோ அதன்படி அவர்களின் உளவியல் மாற்றங்கொள்கிறது.

 வி.ஒ.ஒ உடனான உறவு ஊரறிந்து அவள் அவமானத்துக்கு உள்ளாகும் தருணம் அவள் பலவீனமாகிறாள். அதுவரை விநாயகத்தை கட்டளையிட்டும் தள்ளி வைத்து கட்டுப்படுத்தியும் பழகின அவள் அப்போது அவன் தன்னை அடிக்கும்படி தூண்டுகிறாள். முதன்முறையாய் அவனுக்கும் அவளை அடிக்கிற தன்னம்பிக்கை தோன்றுகிறது. அவன் அவளை கடுமையாய் தாக்கி அவள் மூக்கை குத்தி உடைக்கிறாள். இதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிப்பதோ பின்னால் அவனை குற்றம் சாட்டுவதோ இல்லை. இந்த வன்முறையும் வி.இ.ஒவின் ஆதிக்கமும் அவள் ஆழ்மனதுக்கு ஒரு கிளர்ச்சியை அளிக்கிறது. இப்படி கமலம் தனியான ஒரு பெண் அல்ல. அவள் சமூகத்தினுடனான உறவாடலில் உருவெடுக்கிறாள், உருவழிகிறாள், தொடர்ந்து மாறுகிறாள்.
விநாயகம் கூட ஒரு தனிமனிதன் அல்ல. ஊரில் அவனைப் போல் பொருத்தமற்ற பெண்ணுடன் உறவு கொண்டு திருமணமாகாமல் திரிந்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் முன்பே இருந்திருக்கிறார்கள். பாவாடை என்றொரு பாத்திரம் அப்படியானவர். அவர் திருமணம் செய்யாமல் தன் அண்ணனின் மனைவியுடன் உறவு கொண்டு அவள் மூலமாய் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அக்குழந்தைகள் அவன் அண்ணனைத் தான் அப்பா என்று அழைக்கின்றனர். அவர்கள் வளர்ந்த பின் பாவாடையை துரத்தி விட அவன் பரதேசியாய் திரிகிறான். அவன் கமலத்துடன் நெருங்கும் போதே ஊர்க்காரர்கள் அவன் பாவாடையை போல் ஆகி விடுவான் என்கிறார்கள். அவனும் ஒரு கட்டத்தில் பாவாடையை போலவே ஆகி விடுகிறான். தனக்கு என்று யாருமே இல்லையோ என மனம் வெதும்புகிறான். கமலத்தின் குடும்பத்தில் அவன் உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் நிற்க முடியாமல் தவிக்கிறான். சொந்த குடும்பத்திலும் தங்கைகளுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என வருந்துகிறான். அவனது அந்நியத்தன்மையை இமையம் மிக நுட்பமாய் சித்தரிக்கிறார். ஆனால் அவன் மேற்கத்திய நாவல்களில் வருகிற பாத்திரம் போன்று தனிமனிதன் அல்ல. அவன் பாவாடையின் அச்சில் கச்சிதமாய் பொருந்திப் போகும் மற்றொரு ஊர் மனிதன். அவன் இறந்து போன பின் ஊரில் அவனைப் போல் மற்றொரு “பாவாடை” தோன்றுவான்.

 கமலத்தை தன்னைப் போன்றே ஊரிலுள்ள பல ஆண்களும் மோகித்ததாய் விநாயகம் சொல்கிறான். ஒருவேளை அவன் அவளிடம் நெருங்காதிருந்தால் வேறு ஒரு ஆண் விநாயகமாய் மாறி இருப்பான். அவனுடைய பிறழ்வு அவன் உருவாக்கினது அல்ல. ஊரின் கதையாடலில் உள்ள ஒரு பிறழ்வான பாத்திரத்தை அவன் ஏற்கிறான் அவ்வளவே. அதே போன்று, அவனுடைய குடும்பத்தினர், தங்கைகள், கமலத்தின் பெற்றோர், அவளது இரண்டு மகள்கள் யாரும் அவனை நேரடியாய் கடிந்து கொள்வது இல்லை. ஆரம்பத்தில் அவன் பெற்றோரும் தங்கைகளும் அவனுக்கு அறிவுரை கூறினாலும் ஒரு கட்டத்தில் அவன் பிறழ்வை ஏற்று துணை போகிறார்கள். ஒரு காட்சியில் கமலத்தை தன் நாத்தனாராக மனதளவில் ஏற்றுக்கொண்டு அவள் வீட்டுக்குச் செல்லும் அவனது தங்கைகள் அவளை திட்டுகிறார்கள். தம் அண்ணனுக்கு அவள் ஏன் ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என புகார் கூறுகிறார்கள். பிறகு அவளுக்காய் சீராய் காய்கறி, பழங்கள் கொண்டு போகிறார்கள். அங்கேயே உரிமையாய் சமைத்து உண்கிறார்கள். கமலம் அவர்களை எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அவள் இச்சம்பவத்தை விநாயகத்திடம் நுண்பேசியில் அழைத்து கூறுகிறாள். அப்போது அவள் அவனது தங்கைகள் தன்னை வசைபாடியதை எண்ணி ஒருவித புளகாங்கிதத்துடன் சிரிக்கிறாள். இப்படி விநாயம், கமலம், இருவரின் பெற்றோர்கள், பிள்ளைகள், தங்கைகள் தெரிந்தோ தெரியாமலோ இவ்விளையாட்டில் பங்கேற்கிறார்கள். அதை மறைமுகமாய் அங்கீகரிக்கிறார்கள். கமலத்தின் பிறழ்வு கூட அவளுடையது மட்டுமல்ல. கணவனை இழந்து வேலை செய்து சுயசார்பாய் வாழ முயலும் பெண் தன் மீது பொருத்திக் கொள்வதற்காய் சமூகம் உருவாக்கித் தரும் ஒரு “வேசை” பாத்திரத்தை அவள் அரைமனதுடன் ஏற்கிறாள். அவளது பெற்றோர், உற்றோர், அவனது பெற்றோர், தங்கைகள் அனைவரும் இந்த “வேசைத்தனத்தில்” பங்கு கொள்கிறார்கள். ”எங் கதெயில்” நான் மிகவும் ரசித்தது பாத்திரங்களீன் இந்த தனிமனித தன்மையற்ற கூட்டு இருப்பு தான். இந்த கூட்டுப்பங்கேற்பு இருவரின் பிறழ்வையும் இயல்பானதாக்குகிறது.


“எங் கதெ” போன்று இவ்வளவு கச்சிதமான, நிறைய “மௌனங்கள்” கொண்ட படைப்புகளை இப்போது யாரும் எழுதுவதில்லை. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் பிசுறு தட்டாத நவீனத்துவ நாவல் மரபின் ஒரு நீட்சியாகவே இமையம் இன்று இருக்கிறார். தரையில் கண்ட சிறுபுள்ளியை குறிவைத்து வானத்தில் ஒரே வட்டதில் மீளமீள சுற்றிப் பறக்கும் பருந்தைப் போன்றது இமையத்தின் எழுத்து. மாறாக சமகாலத்தோரின் புனைவெழுத்தோ கழுத்தை அறுத்து விட்டதும் குருதி பீய்ச்சியடித்தபடி சுற்றி சுற்றி ஆவேசமாய் ஓடும் கோழியைப் பொன்று இருக்கிறது. தன்னுடைய கலைநேர்த்தி மற்றும் கட்டுப்பாடு மூலம் இமையம் நம் காலத்தின் மகத்தான் கலைஞனாகவும் உதிரி எழுத்தாளனகவும் ஒரேவேளையில் இருக்கிறார். “எங் கதெ” அதற்கு மற்றொரு சான்று.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...