Skip to main content

தமிழ் நாடு பிரீமியர் லீக்: அரசியலும் இளம் நட்சத்திரங்களும்

(கடந்த வார கல்கியில் வெளியான கட்டுரை)
தமிழக கிரிக்கெட் வாரியம் பல்வேறு தமிழக மாவட்ட வீரர்களை கொண்டு ஒரு மினி ஐபிஎல் நடத்துகிறது: TNPL – Tamil Nadu Premier League. கோவை, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், சேப்பாக், தூத்துக்குடி, காஞ்சிபுரம், காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கின்றன. அம்பானியின் பினாமி நிறுவனம், தந்தி டிவியின் குழுமம், லைக்கா எனும் சினிமா தயாரிப்பு நிறுவனம் போன்ற சில பெரும்புள்ளிகள் அணிகளை வாங்கி இருக்கிறார்கள். ஸ்டார் சேனலில் நேரடி ஒளிபரப்பு, மாதவன், சமந்தா போன்ற திரைநட்சத்திரங்கள் பங்கேற்ற துவக்க விழா, டீன் ஜோன்ஸ், பிரெட் லீ, ஸ்ரீகாந்த், லஷ்மண் சிவராம கிருஷ்ணன் போன்ற பிரபல வர்ணனையாளர்கள் என் டி.என்.பி.எல் ஒரு நட்சத்திர, சர்வதேச தோரணை கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம்
டி.என்.பி.எல்லின் பிரதான கவர்ச்சி அது அதிகம் கிரிக்கெட் புழங்காத மாவட்டங்களில் T20 கிரிக்கெட்டை கொண்டு போகிறது என்பது. சேப்பாக்கில் ரஞ்சி டுரோபி நடந்தால் கூட அதைப் பார்க்க பாதி மைதானமாவது கிரிக்கெட் விசுவாசிகளால் நிறைந்து விடும். ஆனால் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் நேர் எதிரானது. இப்போது திண்டுக்கல், நெல்லை போன்ற மாவட்ட மைதானங்களில் ஆடப்படும் டி.என்.பி.எல் குடும்ப பார்வையாளர்க்ள், இளைஞர்களை பெருமளவில் ஈர்க்கிறது. இது வருங்காலத்தில் தமிழக கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கும். சிறுநகர, கிராமத்துக்கு மக்களையும் இந்த எலைட் ஆட்டத்தை நோக்கி இழுக்கும்.

அரசியல்
இந்திய கிரிக்கெட்டின் எந்த மாற்றத்திலும் என்.ஸ்ரீனிவாசனின் பெயர் இழுபடாது இருக்காது. அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றில் இருந்து தன் தலைமை பதவிகளை இழந்தார். கௌரவமாக அல்ல. கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான சூதாட்ட குற்றச்சாட்டு, அந்த அணியின் இருவருட தடை அவரை இன்னும் தளர்த்தியது. இந்த பின்னடைவுகளுக்கு எதிராக தமிழக கிரிக்கெட் வாரிய தலைவரான ஸ்ரீனிவாசன் இப்போது மற்றொரு மினி ஐபிஎல்லை ஒரு மாற்றாக அறிமுகப்படுத்த முயல்கிறார் என இது பார்க்கப்படுகிறது.
 இவ்விசயத்தில் தமிழக வாரியத்துக்கும் இந்திய வாரியத்துக்குமான மோதல் இப்போதே ஆரம்பித்து விட்டது. டி.என்.பி.எல்லுக்காக பிஸ்லா, பாட்டியா போன்ற சில வெளிமாநில வீரர்களை ஆட அழைப்பதற்கு இன்னும் இந்திய வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. டி.என்.பி.எல் நடக்கும் போது இந்திய வாரியம் இன்னொரு பக்கம் துலீப் கோப்பை என முக்கியமான உள்ளூர் ஆட்டத்தொடரை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவிலும் இந்திய ஏ அணி ஒன்று ஆடி வருகிறது. இந்த இரண்டிலும் பெரும்பாலான உள்ளூர் நட்சத்திரங்கள் ஈடுபட்டு வருவதால் டி.என்.பி.எல் கொஞ்சம் ஒளி மங்கி போய் விட்டது. இந்திய வாரியத்துக்கும் தமிழக வாரியத்துக்கும் (அதாவது ஸ்ரீனிவாசனுக்கும் அனுராக் தாக்குருக்கும் இடையிலான) இந்த ஈகோ மோதல், அரசியல் இழுபறியில் டி.என்.பி.எல் மாட்டிக் கொண்டிருக்கிறது.
 நட்சத்திர பங்களிப்பும் மீடியா கவனமும் பெரும்ளவில் இல்லை என்றாலும் டி.என்.பி.எல் சில சிறந்த உள்ளூர் வீரர்க்ளை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. குறிப்பாக பாபா அபராஜித், ஆர்.சதீஷ், ஆந்தொனி தாஸ், எம். விஜய் குமார் ஆகியோரை சொல்லலாம். இந்நால்வரும் சர்வதேச தரம் கொண்டவர்கள்.
பாபா அபராஜித்
 அபராஜித் 19 வயதுக்கு கீழானோருக்கான உலகக்கோப்பையை இந்திய வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அபராஜித் கொஞ்சம் வி.வி.எஸ் லஷ்மணை நினைவூட்டும் wristy பேட்ஸ்மேன். அபாரமான டைமிங் கொண்டவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். 2013இல் துலீப் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்தார். திருவள்ளூர் அணியின் தலைவராக இருக்கும் இவர் டி.என்.பி.எல்லின் முதல் சதத்தை அபராஜித் அடித்திருக்கிறார்.
Off sideஇல் மிக நளினமாய் பந்தை விரட்டும் அபராஜித் T20க்காக இதே ஷாட்களை சற்று தூக்கி அடிக்கிறார். கவர் பகுதிக்கு மேலாக இவர் தூக்கி அடிக்கும் சிக்ஸர்கள் அனாயசமாய், வெகு அழகாக இருக்கின்றன. ஒரு பின்னங்கால் straight driveஇல் பார்க்க கொஞ்சம் சச்சின் டெண்டுல்கர் சாயல். சிக்ஸர் அடிக்கும் போதும் முழங்கையை இவர் நேராய் உயரமாய் வைத்திருப்பது பார்த்தால் மரபான கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகிப்பார்கள். அபராஜித் நிச்சயம் எதிர்காலத்தில் ஐ.பி.எல்லிலும் இந்திய அணியிலும் ஆடப் போகிறார். அவரிடம் இப்போதே அந்த தரம் ஜொலிக்கிறது.

ஆர்.சதீஷ்
சதீஷை ஐ.பி.எல் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக கொஞ்ச காலம் ஆடினார். நல்ல கீழ்வரிசை பேட்ஸ்மேன். மிதவேக பவுலர், சுறுசுறுப்பான களத்தடுப்பாளர். இப்போது சதீஷ் ஐ.பி.எல்லில் கொல்கொத்தா அணியில் ஆடுகிறார். சதீஷ் டி.என்.பி.எல்லில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைவர். காரைக்குடி அணிக்கு எதிரான இவரது 46 ஒரு பெரிய ஸ்கோரை தன் அணி எட்ட உதவியது.
சதீஷ் தொண்ணூறுகளில் இந்தியாவுக்காக ஆடின ராபின் சிங், இப்போதைய நம் ஒருநாள் அணித்தலைவர் தோனி ஆகியோரின் பாணியை கொண்ட ஒரு பேட்ஸ்மேன். சம்பிரதாயமான காலாட்டமோ தடுப்பாட்டமோ இல்லை. சுலபத்தில் சிக்ஸர் அடிக்கும் திறனும், ஒற்றை இரட்டை ஓட்டங்களுக்காய் முயல் போல் ஓடும் எனர்ஜியும் கொண்டவர். எந்த கட்டத்திலும் மனம் தளராது போராடி அணியை வெற்றியின் அருகில் கொண்டு போய் சேர்ப்பவர்.

எம். விஜய் குமார்
விஜய் குமார் அதிகம் அறியப்படாதவர். டி.என்.பி.எல்லில் காரைக்குடி அணிக்காக ஆடுகிறார். ரொம்ப இயல்பான ஒரு stroke maker இவர். சேப்பாக் அணிக்கு எதிராக இவர் அடித்த 46 ஒரு வாணவேடிக்கை இன்னிங்ஸ். அலட்டிக் கொள்ளாமல் கம்பீரமாய் இவர் அடிக்கும் சிக்ஸர்கள் கொஞ்சம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாய் லெண்டில் சிம்மன்ஸ் நினைவு வருகிறார். (2016 T20 உலகக்கோப்பை அரை இறுதியில் தனது 82 அடித்து இந்தியாவை நாக் அவுட் செய்தவர்.) விஜய் குமார் தொடர்ந்து உழைத்து ரன்களை குவிக்கும் பட்சத்தில் நாம் ஒருநாள் அவரை இந்திய அணியில் காண முடியும்.

ஆந்தொனி தாஸ்
ஆந்தொனி தாஸ் இப்போதைய தமிழ்நாடு அணியின் பிரதான வேகவீச்சாளர். ஒரு வறிய மீனவப் பின்னணியில் இருந்து தன் உழைப்பு மற்றும் திறமையை மூலதனமாய் கொண்டு இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறார்.

டி.என்.பி.எல்லில் சேப்பாக் கில்லீஸ் அணிக்காக ஆடும் ஆந்தொனியின் பவுலிங் ஸ்டைல் சற்று முகமத் ஷாமியை நினைவுபடுத்துகிறது. இவர் ஒரு டிப்பிக்கல் டென்னிஸ் பந்து பவுலர் எனலாம். வேகமாய் ஸ்டெம்புக்கு நேராய் கூர்மையாய் வீசுகிறார். Round arm பவுலர் என்பதால் இவரது யார்க்கர்களை ஆடுவதும் கணிப்பதும் சிரமம். தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் தன் எனர்ஜியை தக்க வைக்கிறார். இந்த ஆட்ட வடிவில் எப்படி வீச வேண்டும் என அவருக்கு தெரிகிறது: முழுநீளம் மற்றும் பவுன்சர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துகிறார். டி.என்.பி.எல்லில் பிற வேக வீச்சாளர்கள் பேட்ஸ்மேன் விரட்டும் விதம் டெஸ்ட் மேட்ச் நீளத்தில் வீசி அடி வாங்க, ஆந்தொனி மிகத்தெளிவான திட்டங்களுடன் செயல்படுகிறார். பிற பவுலர்களிடம் இல்லாத ஒரு முதிர்ச்சி இவரிடம் உள்ளது.


காரைக்குடி அணிக்கு எதிராக 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவரது ஸ்பெல் இவர் விரைவில் ஐ.பி.எல் ஆடுவார் என உணர்த்தியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...