ரவிசுப்பிரமணியனின் புதிய தொகுப்பான
“விதானத்து சித்திரம்” படித்த போது அதில் ஒரு விசயம் வித்தியாசமாக தோன்றியது. வழக்கமாக,
நம் கவிகள் உள்ளூர்ச் சூழலை சித்தரித்தாலும் அதில் ஒலிப்பது ஒரு ஐரோப்பிய குரலாக இருக்கும்.
தனித்து, விடுபட்ட, சுயமாய் சிந்திக்கிற, சிறிய ஐயத்துடன், விலகலுடன் எதையும் கவனிக்கிற,
பெண்கள் முந்தானையை சரி செய்வது போல் பிரக்ஞை நழுவி விடாதிருக்கும் கவனத்துடன், உணர்ச்சிவயப்பட்டு
நம்மை இழந்து விடாதிருக்க விரும்பும் ஒரு ஐரோப்பிய மனமே நமது கணிசமான சமகால கவிதைகளில்
கூட வாசகனை வரவேற்கிறது. ரவிசுப்பிரமணியனிடம் ஒரு அசலான தமிழ் மனம் வெளிப்படுகிறது;
அவரிடம் சராசரி இந்தியத்தனம் தெரிகிறது. குறிப்பாய், தி.ஜாவை வெகுவாய் நினைவுபடுத்துகிறார்.
இசையில் லயித்து தோயும் மனம், அந்த மனத்தின் இன்னொரு பக்கம் தெரியும் வன்மமும் பொறுப்பின்மையும்,
எதிலும் தன்னை இழந்து வெல்லக்கட்டி போல் கரையும் மனப்போக்கு, சிலாகிப்பு, சிலாகிப்பு,
சிலாகிப்பு….
அனைத்தும் சிறந்த, கச்சிதமான, முழுமை பெற்ற கவிதைகள்
அல்ல. ஆனால் எனக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அந்த மொழிக்காகவே அவரை முழுக்க புன்னகை
மாறாது வாசித்தேன். மிகச்சிறிய தொகுப்பு. எளிய நேரடியான கவிதைகள். நேற்று எங்கள் பல்கலையின்
தபால் பிரிவுக்கு சென்று நூலை வாங்கி மின்தூக்கியிடம் வந்து காத்தி்ருந்தேன். அதன்
பிறகு மின்தூக்கி என்னை தப்பான ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து மீண்டும்
காத்திருந்து ஏறி கீழ்த்தளத்துக்கு வந்து காப்பி குடித்து, மீண்டும் ஏறி மேல்தளத்தில்
நூலகம் போகும் முன் மொத்த தொகுப்பையும் படித்து முடித்து விட்டேன்.
எனக்குப் பிடித்த இரு கவிதைகளை
கீழே தருகிறேன்.
அப்படித்தானே
அமிர்தா
பகல் நேரத்துப்
பொரிகளின் ஞாபகத்தில்
நியான் விளக்கொளியில்
படிக்கட்டுப் பக்கமாய்
வந்து வந்து மீள்கின்றன
மீன்கள்
எப்போதாவது
மரங்களிலிருந்து உதிரும்
சருகுகள் கண்டு ஏமாந்து
விடியலின் பொழுதுக்காய்
குளமெல்லாம் சுற்றி வருகின்றன
இதில்
மீன்களுக்கும்
எனக்கும்
பொரி தூவும் விரல்களுக்கும்
உனக்கும்
யாதொரு சம்பந்தமும் இல்லை தானே
அமிர்தா
வால் முளைத்த அன்பு
அணிலாய்
உருவெடுத்த அன்பு
மரம் தாவி சுவரேறி
தயங்கித் தயங்கி வருகுது வீட்டுக்குள்
இரு கையால்
வணக்கம் சொல்வதான பாவனை
பயந்தபடி ஒரு பார்வை
வாலசைத்து வரையும் குதூகலம்
ஓடத் துடிக்கும் பரபரப்பு
சர சரவென்று ஓடி
திரும்ப வந்து பார்த்து நிற்கிறது
அன்பு
கருத்துகள்