Skip to main content

அனிதாவின் தற்கொலையும் ஸ்டாலினும்


மாநில அரசின் ஆட்சி அதிகாரத்திலும் கொள்கை முடிவுகளிலும் மத்திய அரசு கைவைப்பதே நீட் எனும் அநீதியின் மூலகாரணம். மத்திய அரசுக்கு இந்த துணிச்சலையும் சாத்தியத்தையும் வழங்கியது தமிழகத்தில் உள்ள நிலையற்ற, தலைமையற்ற, பா.ஜ.கவின் பொம்மையாட்சி. ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் மட்டுமல்ல ஜி.எஸ்.டி விசயத்திலும் நிச்சயமாய் ஆளும் மத்திய அரசை எதிர்த்திருப்பார். எந்த ஒரு தன்னிறைவான ஆட்சி இங்கு இருந்திருந்தாலும் பா.ஜ.கவின் பொம்மலாட்டம் இங்கு இவ்வளவு அப்பட்டமாய் நிகழ்ந்திருக்காது.

மக்கள் இந்த தலைமையற்ற, முதுகெலும்பற்ற அரசுக்காக ஓட்டளிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இந்த அரசை மாற்றும் பொருட்டு பெரும் போராட்டங்களை தன்னிச்சையாய் நடத்தும் ஆன்ம வலிமையும் லட்சிய ஒருங்கிணைப்பும் பொதுமக்களிடம் இல்லை. அப்பணியை திமுக எனும் பெரும் எதிர்க்கட்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் திமுகவோ அதை விடுத்து எதிர்ப்பரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் அதிமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியை வளர்த்தெடுத்து, அடுத்த தேர்தலில் தான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறது.
நீட் பிரச்சனை தமிழகத்தை உலுக்குவதற்கே காரணம் ஆட்சி ஸ்திரமின்மை தான் என ஸ்டாலினுக்குத் தெரியும். ஜெயலலிதா மரணத்தை அடுத்து அவர் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருந்தும் தனது இயல்பான தயக்கத்தால் அவ்வாய்ப்பை தவற விட்டார். இப்போது ஆட்சி அமைத்தால் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகும் என அவர் அஞ்சுகிறார். ஒருவேளை பா.ஜ.கவின் குறுக்கீடுகளையும் அவர் விரும்பாதிருக்கலாம்.
நேரடியாய் பொறுப்பெடுத்து தமிழகத்தை நிலைப்படுத்தாமல் பின்னால் நின்று அரசுக்கு எதிராய் மக்களை தூண்டி விடுவதே அவரது இப்போதைய திட்டம். அனிதாவுக்கு ஆதரவளித்து அவரை உச்சநீதிமன்றம் வரை அழைத்துப் போய் வழக்குத் தொடுக்க வைத்து, தமது ஆதரவான ஊடகங்கள் மூலம் இப்பிரச்சனையை பெரிதாக கவனம் பெற செய்து இன்று அதிமுகவை நடுக்கம் கொள்ள வைக்கும் அனிதாவின் தற்கொலை வரையிலான நிகழ்வுகளின் பின்னால் உள்ளது திமுக தான். திமுகவின் இந்த சாதுர்யத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் இந்த பாணி அரசியல் மக்களுக்கு நலம் பயக்கக் கூடியதல்ல. இது சாணக்ய அரசியல் லட்சியமற்ற, சமூக பொறுப்பற்ற அரசியல் என்பதையும் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைய அனுமதிக்கிறீர்கள். அதன் பிறகு அப்பாம்பு ஒரு கூட்டம் பாம்புகளை வீட்டுக்குள் அழைத்து வந்து புற்றுகளை எழுப்புகின்றன. பாம்புகள் மக்களை கொத்தி கொல்லத் துவங்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதன் பிறகு கூச்சலிட்டு மக்கள் கவனத்தை திருப்பி இதை ஒரு பெரிய பிரச்சனையாக வளர்க்கிறீர்கள். அதைக் கொண்டு அரசியல் செய்கிறீர்கள். மக்கள் உங்களுக்கு போன தேர்தலில் ஓட்டளித்தது முதல் பாம்பு வீட்டுக்குள் நுழையும் போதே கட்டையெடுத்து அதை அடித்துக் கொல்ல அல்லவா ஸ்டாலின்?
நீங்கள் மகுடம் அணிந்து ஆட்சிப் பொறுக்க வேண்டிய வேளை இது. துணிச்சலாய் களம் இறங்குங்கள்.
“நடக்கட்டும், நடக்கட்டும். பார்த்துக் கொள்ளலாம்” எனும் உங்கள் வியூகம் தமிழகத்துக்கு மேலும் பல இடர்களை, துயரங்களை கொண்டு வரப் போகிறது!

 போதும்! 

Comments

Unknown said…
எதிர்க்கட்சிகள் எது பேசினாலும் அது அந்தக் கட்சியின் சுய லாபத்திற்காக என்று கூறி எளிதாக ஆளும் கட்சியினர் திசை திருப்பிவிடும் சூழ்நிலையில் அவர் வேறு என்ன செய்ய முடியும்
Unknown said…
நடக்கின்ற அத்தனை நிகழ்வுகளுக்கும்
நிகழ்வுகளுக்கும் இவர்கள் தானே மூலக்காரணம் அது கதிராமங்கலமாக இருக்கட்டும் நீட் தேர்வாக இருக்கட்டும் இவர்களும் காங்கிரஸ் அரசும் தானே கொண்டு வந்தது
Anonymous said…
தங்கள் மாநிலத்துக்கு எதிராக ஒன்று வந்தால்
குறிப்பாக கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்கள்
கட்சி வேறுபாடின்றி போராடுகின்றன.. ஆனால்
தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரை
பார்த்து சிரித்தார் என்று அந்த கட்சியின் தலைவி
அவரையே தூக்கி விட்டார் . இப்போது அனிதாவின்
மரணத்தில் கூப்பாடு போடும் கட்சிகள் திருமா ,
ஸ்டாலின் போன்றோர் இந்த நீட் தேர்வை காங்கிரஸ்
கொண்டு வரும்போது ஏன் எதிர்க்கவில்லை ?
போன வருடம் ஸ்வாதி மற்றும்
ராம்குமார் , இந்த வருடம் அனிதா . கொஞ்ச நாட்கள்
கூப்பாடு போட்டு விட்டு அப்புறம் ஒன்னும் தேறவில்லை
என்றால் வேறு சோலி பார்க்க போய்விடும் இவர்களை
நம்பமுடியாது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...