Skip to main content

ஹெச்.ஜி ரசூல் கூட்டம்

Image result for ஹெச்.ஜி ரசூல்

எழும்பூர் இக்ஸா மையத்தில் நடைபெற்ற ஹெச்.ஜி ரசூலின் படைப்புலகம் பற்றின கூட்டம் மனநிறைவு தருவதாய், என் பதின்வயது வாழ்நாட்கள் பற்றின நினைவேக்கத்தை கிளறுவதாய் அமைந்தது. வழக்கமான கலை இலக்கிய பெருமன்றக் கூட்டத்தைப் போன்று இதுவும் இசையுடன் துவங்கியது. எளிய கலைஞர்கள் மக்கள் இசைப்பாடலை தப்பு தட்டி பாடினார்கள். ரசூலின் கவிதையை பாடலாக்கி இசைத்தார்கள். அவர்களின் குரலும், மன எழுச்சியும், நெகிழ்வும் நமது மண்ணின் ஆன்மாவை பிரதிபலித்தன.

ஒருங்கிணைத்த முஸ்தபா அண்ணன் “இது ரசூலை புகழ்ந்துரைக்கும் கூட்டமாய் அமைக்கப்படவில்லை. இது அவரை அறிவார்ந்து அணுகி புரிந்து கொள்வதற்கான கூட்டம்” என்றார். முதலில் பேசிய முஜீப் ரஹ்மானின் பேச்சு அப்படி அருமையாக அமைந்தது. ரசூல் இஸ்லாமிய சமூக பிற்போக்குவாதிகளுடன் உரையாடி அவர்களை தன் வசம் இழுக்க எப்படி தனக்கான ஆய்வு சட்டகம் ஒன்றை உருவாக்கினார் என அவர் எடுத்துரைத்தார். என்னைத் தொடர்ந்து பேசிய அனாரின் பேச்சும், ரசூலின் கவியாளுமையை நுணுக்கமாய், மென்மையாய் எடுத்துணர்த்துவதாய் அமைந்தது.
நான் ஒரு நிமிடத்தில் 20 வருடங்களுக்கு பின்னால் சென்று ரசூல் அண்ணனிடமும் முஸ்தபா அண்ணனிடமும் தத்துபித்தென்று வாதம் செய்யும் காலத்தை என் மனத்திரையில் ஓட்டினேன். என் நம்பிக்கைகளும், கருத்துக்களும், பார்வையும் அன்றிலிருந்து இன்று வெகுவாக மாறிப் போய் விடவில்லை எனத் தோன்றியது. சற்றே நிதானமாகி, கனிவாகி இருக்கிறேன் – மற்றபடி இன்று எனது பேச்சு இரு பத்தாண்டுகளுக்கு முன்பு முஸ்தபா அண்ணனின் களஞ்சியம் கடையில் இரவில் தரையில் அமர்ந்து கடுஞ்சாயா குடித்தபடி இடம், காலத்தை மறந்து பேசியதைப் போன்றே இருந்தது.
நான் இரண்டு விசயங்களை பேசினேன். ஒன்று ரசூலின் உளவியல் சித்திரம். இன்னொன்று ஒரு சிந்தனையாளனாய் அவர் நிகழ்த்திய சாதனை.
ரசூலின் ஆளுமையை பொறுத்த மட்டில் அவரது மட்டற்ற அன்பும் கனிவும் சிலாகிக்கத்தக்கவை. நம் சூழலில் அவரைப் போல் வெகு சிலரே இருந்திருக்கிறார்கள். யாரையும் வெறுக்க முனையாத, தான் எதிர்ப்பவரையும் அணைத்து உரையாட விழைகிற அற்புதமான மனிதர் அவர். இதை ஒட்டி, லஷ்மி மணிவண்ணன், விக்கிரமாதித்யன், என்.டி ராஜ்குமார் மற்றும் நான் சேர்ந்து ஜெயமோகனை அவரது தக்கலை அலுவலகத்தில் மதிய வேளையில் சந்திக்க சென்ற அனுபவத்தைப் பற்றி இன்று பேசினேன்.
ஜெயமோகனின் அலுவலகத்தில் நாங்கள் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட பின் லஷ்மி மணிவண்ணன் தொடர்ந்து ஜெயமோகனை கடுமையாய் தாக்கி விமர்சனங்கள் வைத்தார். சரம் சரமாய் அஸ்திரங்களை எய்தார். ஜெயமோகனும் அம்பு மழை பொழிந்தார். மணி நான்கரை. மணிவண்ணன் தன் யுத்தத்தை நிறுத்தி வைத்து தேரில் இருந்து இறங்கினார். வில்லையும் அம்புகளையும் வைத்தார். கவசத்தை கழற்றி பத்திரப்படுத்தினார். தோள்களை தழைய விட்டார். பதுங்கி பதுங்கி ஜெயமோகனை நெருங்கினார். முன்னூறு ரூபாய் கேட்டார். ஜெயமோகன் தரவே முடியாது என்றார்.
”சரி இருநூறு?”
 ”ம்ஹும்”
”அதெல்லாம் முடியாது. எனக்கு பணம் கொடுங்கள். நான் ஊருக்கு திரும்ப போக வேண்டும்.”
அவர் அரைமணி நேரம் ஜெயமோகனை நச்சரித்தார். ஜெயமோகன் தன் சட்டைப்பையை துழாவிக் காட்டினார். “பாருங்க, வெறும் பத்து ரூபாய் தான் இருக்கு. பஸ்ஸுக்கான பைசா”
“இல்லை நீங்க எப்படியாவது ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. நீங்க நெனச்சா முடியாதா?”
“முடியும் ஆனால் பண்ண மாட்டேன்”
நான் நினைத்தேன்: பணம் வேண்டுமென்றால் ஆரம்பத்தில் இருந்தே ஏன் வியூகம் அமைத்து, கத்தி வீசி, காயங்களை எல்லாம் ஏற்படுத்தினார்? ஏன் சூளுரைத்தார்? கொஞ்சம் அன்பாக, பணிவாக பேசியிருந்தால் ஜெயமோகனே நிச்சயம் முன்வந்து பணம் கொடுத்திருப்பாரே?
ஆனால் லஷ்மி மணிவண்ணன் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டார். அவர் முதலில் அடிப்பார். அடுத்து பிடுங்குவார்.
ஜெயமோகன் வெளியே போகும் முன் சொன்னார், “இப்பிடியே நேரா போனீங்கண்ணா ரசூல்னு ஒருத்தரோட வீடு வரும். அவரை இதே போல மிரட்டினீங்கண்ணா பணம் கொடுப்பார். முயன்று பாருங்கள்.”
மணிவண்ணனின் கண்களில் மின்னல் வெட்டியது. நாங்கள் ஆட்டோ எடுத்துக் கொண்டு ரசூலின் வீட்டுக்கு சென்றோம். ரசூல் எங்களை அருமையாய் உபசரித்தார். மணிவண்ணன் டீ குடித்து மிக்சர் கொறித்தபடி “ரசூல் உங்க எழுத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்குது தெரியுமா?” என ஆரம்பித்தார். அதன் பிறகு மிஷின் கன்னை எடுத்து மேலும் கீழுமாய் சுட்டார். ரசூல் மிக இனிமையாய் புன்னகைத்தபடி குண்டுகளை தாங்கிக் கொண்டார். மென்மையாய் பதிலளித்தார். “வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று விசாரித்தார். மணிவண்ணன் கேட்குமுன்னே அவருக்கு குடிப்பதற்கும் ஊருக்கு திரும்ப செல்வதற்குமான பணத்தை அளித்தார். “போய் வாங்க” என அதே இனிமையுடன் எங்களை அனுப்பி வைத்தார். எனக்கு உண்மையில் அன்று ஒரு பக்கம் குற்றவுணர்வும் இன்னொரு பக்கம் ரசூல் மீது கோபமும் தோன்றியது. இவரால் ஏன் திரும்ப திட்ட முடியாதா? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முடியாதா?
 பதின்வயதில் ரசூலின் இந்த மென்மையான, சங்கோஜம் மிக்க, தாய்மை மிகுந்த ஆளுமை எனக்கு ரசிக்கவில்லை. அவர் உறுதியற்றவர் என நினைத்தேன். ஆனால் கடந்த இருபதாண்டுகளில் வாழ்வில் சிந்தனை நிலைப்பாடுகள், கருத்து மாறுபாடுகள் எதுவும் முக்கியமில்லை. குழந்தையாய் மனதை வைத்துக் கொள்ளுதல், கசப்புகளை நொடியில் கழற்றிப் போட்டு விட்டு பிறரை நேசிக்க முடிதல், எப்போதும் வாழ்வின் கதவுகளை அகலத் திறந்து வைத்திருந்தலே ஒரு மனிதன் அடையக் கூடிய ஆகப்பெரிய சிறப்பு எனப் படுகிறது. ரசூல் இயல்பிலேயே அப்படி கனிவு ததும்பும் மனிதராய் இருந்தது ஒரு கொடுப்பினை. வெறுப்பில் உழன்று மறைந்த பல கலைஞர்களை விடவும் அவர் மேலானவர்.
ரசூலின் கட்டுரைகளைப் படிக்கையில் அவர் ஒரு இறுக்கமான கோட்பாட்டுவாதி அல்ல என புரிகிறது. எல்லா சிந்தனைச் சட்டகங்களையும் மீறிச் செல்லவே அவர் முயல்கிறார். முரண்-எதிர்வை தாண்டின ஓர் உண்மையை அவர் நமக்கு திறந்து காட்ட முயல்கிறார். ஐ.எஸ் தீவிரவாதிகள் சவுதி மன்னர்களின் செல்வத்தை முதலீடாய் கொண்டு வன்முறையை அறுவடை செய்கிறார்கள். சவுதி மன்னர்களுக்குப் பின்னே அமெரிக்க ஏதேச்சதிகாரம் இருக்கிறது. ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பிய கிறித்துவர்களை தம் எதிரிகளாய் பாவித்து அவர்களை அழித்தொழிக்கும் கொள்கையை முன்னெடுப்பதேன் என ரசூல் கேட்கிறார்.
 உலக அரசியலில் இன்று எதையும் கறுப்பு வெள்ளையாய் சுலபமாய் புரிந்து கொள்ள இயலாது; உண்மை இரண்டில் ஒவ்வொரு கால் பாவி நிற்கிறது. சென்னை வெள்ளத்தின் போது இஸ்லாமிய தொழுகைத் தலங்களை சுத்தப்படுத்தி, பாதுகாத்து இஸ்லாமியருக்கு அளித்த இந்துத்துவர்களைப் பற்றி குறிப்பிடும் ரசூல் இதே இந்துத்துவர்களை வெள்ளம் முடிந்த பின், இயல்பு வாழ்வுக்கு நாம் மீண்ட பின் இஸ்லாமியர்களின் நண்பர்கள் என எளிமையாய் எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது இவர்கள் இஸ்லாமியர்களின் நிரந்தர எதிரிகள் என்பதும் சரியாக இருக்குமா எனும் கேள்விகளை எழுப்புகிறார்.

 ஒரு சிந்தனையாளனாக இதுவே அவரது மிக முக்கிய பங்களிப்பு. எல்லா தளங்களிலும் முரண் எதிர்வை நொறுக்குகிறார் ரசூல். இருமைக்கு எதிராய் நின்று உண்மையின் பக்கமாய் நம் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு போகிறார். இஸ்லாத்தை முற்போக்கான, அரசியல் கூருணர்வு கொண்ட ஒரு வாழ்க்கைத் தேடலாய் முன்னெடுக்க விரும்பும் அவரது சொந்த சமூகத்தினருக்கும் ரசூலின் கட்டுரைகள் இருளில் வழிநடத்தும் ஒளிவிளக்காய் திகழும் என்பதில் ஐயமில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...