முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல 5

Related image
காந்தி இந்த தேசியவாத, முதலாளித்துவ நகரமயமாக்கல் அஜெண்டாவுக்கு குறுக்கே நின்றது தான் இந்துத்துவர்கள் அவர் மீது கொதிப்புற்றதற்கும் அவரை படுகொலை செய்ய முடிவெடுத்ததற்கும் உண்மையான காரணம். இந்திய விடுதலைக்குப் பின் காந்தி தேசபக்தி எழுச்சி அலையில் பங்கெடுக்க மறுத்தார். பிரிவினைக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை (75 கோடிகள்) அவர்களின் பங்காக அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் இருந்தது. ஆனால் பிரிவினையின் போது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுகமாய் வன்முறையில் ஈடுபட்டது, காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது ஆகிய விசயங்கள் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கசப்பையும் உண்டு பண்ண, “நம் எதிரி தேசத்துக்கு அந்த ஒப்பந்த தொகையை கொடுக்கக் கூடாது” எனும் கோரிக்கை பரவலாய் எழுந்தது. பிரதமர் நேருவும் இதை ஏற்றுக் கொண்டார். இப்பணத்தை அளித்தால் பாகிஸ்தான் அதை இந்தியாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்திய பாராளுமன்றமும் நம்பியது.

 ஆனால் காந்தி மட்டுமே அத்தொகையை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். பாகிஸ்தான் வெறுப்பு எனும் கருத்தமைவு இந்தியா எனும் தேசம் புதிதாய் உருவான அன்றைய நிலையில் அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தேவையிருந்தது. ஒரு தேசியவாத உணர்வுநிலையை, எழுச்சியை கட்டமைக்க அது அவசியப்பட்டது. ஆனால் காந்தியோ இந்த எழுச்சி மனநிலையை ஒரு பலூனை உடைப்பது போல் உடைக்க எத்தனித்தார்.
 நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களின் பாகிஸ்தான்-மற்றமை தேசியவாத கருத்தமைவுக்கு, அஜெண்டாவுக்கு, வெறுப்பரசியலுக்கு குறுக்கே நின்றார் காந்தி. மாறாக அந்த வெறுப்பை அன்பாக மாற்ற முனைந்தார்.
 மற்றமை மீதான வெறுப்பை அழிப்பது இந்திய தேசியவாதத்தை அழிப்பதற்கு சமானமானது. இந்தியா ஒரு இளம் தேசமாய் மொட்டு விடத் துவங்கிய அக்காலத்தில் பாகிஸ்தான் மீதான வெறுப்பரசியலே ஒரு தேசமாய் ஒற்றை அடையாளத்தின் கீழ் நம்மைத் திரட்டும், ஒன்றிணைக்கும், இயக்கும் விசையாக இருந்தது. காந்தி இந்த விசையை எதிர்த்து தனியாக நின்றார். நாம் ஒற்றை அடையாளத்தின் கீழ் இணையத் தேவையில்லை, பல்வேறு அடையாளங்களின் தொகுப்பாய் இருப்போம் என்றார். அன்றைய சூழலில் சாவார்க்கர் மட்டுமல்ல நேருவும் பட்டேலும் கூட காந்தியை உள்ளூர இதனாலே வெறுத்தனர்.
காந்தியின் அரசியல் ஒரு பக்கம் ஆளும் காங்கிரசுக்கு பாதத்தில் தைத்த முள்ளாக இருந்தது என்றால் இன்னொரு பக்கம் காங்கிரஸின் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையினருக்கு காந்தியின் நிலைப்பாடு கடும் எரிச்சலையும் கொலை வெறியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் சாவார்க்கர் இந்திய பிரிவினையை ஆதரித்தார். அப்படி இருக்க, ஏன் பிரிவினையை காரணமாய் காட்டி அவர் காந்தியை எதிர்த்தார்? பிரிவினையின் போதான வன்முறைகள் காரணமாய் இந்து பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்பும் கசப்பும் கொழுந்து விட, அதை மேலும் வளர்த்து இந்து தேசியவாதத்தை ஒரு யாகமாய் எரிய விட சாவார்க்கர் விரும்பினார். சட்டென உயிர்பெற்ற அவர் இந்த பணியில் தன்னை மிக ஆர்வமாய், ஆவேசமாய் ஈடுபடுத்திக் கொண்டார். (இந்த கட்டத்தில் தான் கோட்சே அவரால் ஈர்க்கப்பட்டு, சதித்திட்டத்தில் இணைகிறான்.)
 ஆனால் காந்தி எனும் பேரலை தான் வளர்த்து எழுப்பும் வெறுப்புத் தீயை சுலபத்தில் அணைத்து விடலாம் என சாவார்க்கர் உணர்ந்தார். தன் வாழ்நாள் பூரா அவர் காந்தியால் இப்படி தோற்கடிக்கப்பட்டவர். ஆனால் இம்முறை அவர் தோற்க தயாராக இல்லை.
காந்தியின் உண்ணாநிலை போராட்டம் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல, இந்திய தேசியத்துக்கு எதிரானது என சாவார்க்கரும் அவரது சீடர்களும் உள்ளூர உணர்ந்து கொண்டார்கள். காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, (முள் ஏற்படுத்திய வலியை தாங்க முடியாத கட்டத்தில்) உண்ணாநிலை போராட்டத்தை முடிக்கக் கோரி பிரதமர் நேரு ஒப்பந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அளிக்க ஒப்புக் கொண்டார். இந்த தருணத்தில் தான் “இனி காந்தி உயிருடன் இருக்க கூடாது” என கோட்சேவும் சகாக்களும் முடிவெடுக்கிறார்கள். ஏனெனில் காந்தி உயிருடன் இருந்தால் தேசியவாத வெறி திரண்டு ஒரு யாகமாய் வளர அவர் அனுமதிக்க மாட்டார் என அவர்கள் நம்பினர். காந்திக்கு எதிராய் காங்கிரஸார் ஆழ்மனதில் வளர்ந்து வந்த கசப்பை இந்துத்துவர்கள் அன்று “துணிச்சலாய்” வெளிப்படுத்தினர். ஏனெனில் ஆளும் காங்கிரஸ் அரசும் அவர்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தது.
அப்படித் தான் ஒரு “இந்துத் துறவியை” படுகொலை செய்யும் முடிவுக்கு இந்துத்துவர்கள் தள்ளப்பட்டனர்.
(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...