முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்னைப் பற்றி மட்டும் எழுதுவதன் பிரச்சனைகள்


இணையம் எப்போதும் “சரி உன்னைப் பற்றிச் சொல்” எனத் தான் நம் முதுகில் அமர்ந்து கதை கேட்கும். சமூகவலைதளங்கள் சூடுபிடிக்கும் முன், வலைப்பூக்களின் காலத்திலும் நிலைமை இது தான். நான் உயிரோசை எனும் இணையதளத்தில் தான் (உரைநடை) எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை. அவ்வாரம் என் வாழ்வில் என்ன ஆர்வமூட்டும் வகையில் நடக்கிறது என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பேன். பத்திரிகை, நூல்களில் படிக்கிற வேறு விசயங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவேன். ஒருநாள் மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்து ஒரு அறிவுரை சொன்னார்: “வெளியே நடக்கிற புது விசயங்களைத் தேடி அறிந்து எழுது. உன் எழுத்தில் திரும்ப திரும்ப நீயே வருவது அலுப்பூட்டுகிறது.” மெல்ல மெல்ல சுயபுராணங்களை நான் கைவிட்டேன். சற்று காலத்துக்குப் பிறகு தான் அதன் பலன்களை நான் அறிந்து கொண்டேன்.

இன்று தமிழ் எழுத்துலகம் படுப்பது, தூங்குவது, பல்துலக்குவது எல்லாம் முகநூலில் தானே. ஆக, சுய-கதை கூறல் இன்று மலிந்து விட்டது.
இப்பதிவுகளைப் படிக்கையில் எனக்கு வருத்தம் ஏற்படும். இவ்வளவு எழுத்துத் திறன் இருந்தும் தம்மை இப்படி சிறிய வட்டத்துக்குள் அடைத்துக் கொள்கிறார்களே?
 நான் இன்றும் விடாப்பிடியாக என் அனுபவத் தரப்பில் இருந்தே எதையும் பார்த்து பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறவன். ஆனால் அந்த கால் சிட்டிகை அனுபவத்துக்குள் ஒரு பூச்சி போல விழுந்து கிடக்கக் கூடாது என கவனம் கொள்கிறவன். இந்த பின்புலத்தில் இருந்தே தன்னனுபவ எழுத்தின் ஐந்து குறைகளை, ஆபத்துக்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1)   சுய எழுத்து நம்மை ஒரு சின்ன வட்டத்துக்குள் வைக்கும். ஜெயமோகன் சொல்வார், ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள் கைப்பிடி அளவே என. பல ஊர்கள், தேசங்கள் பயணித்தவர்களுக்கும் (அபாரமான கற்பனையும் தகவல் அறிவும் இல்லையெனில்) அதைக் கொண்டு நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுத முடியாது. இரண்டாம் வருடம் முதல் நீங்கள் சொன்னதையே திரும்ப சொல்லவும், புதுப்புது வடிவங்களில் அதை பிரதியெடுக்கவும் துவங்குவீர்கள். உங்கள் பெயரைக் கண்டதுமே வாசகன் நீங்கள் எழுதப் போவதை பகடியாய் ஒப்பிப்பான். அது ஒரு அவல நிலை. ஒரு எழுத்தாளன் வாசகனை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
2)   எழுத்தாளனாய் இருப்பது எப்படி ஒரு வாழ்வுமுறையோ அதே போல அது ஒரு பிம்பமுமே. எந்த கட்டுரையிலும் (பதிவிலும்) “நான்” வந்து கொண்டே இருந்தால் உங்களை நாட்குறிப்பாளன் என்ற அளவிலே வாசகன் நினைத்துக் கொள்வான்.
3)   “இப்படித் தாங்க நான் ஒருநாள்” இப்படி ஆரம்பிப்பது ஒரு பொறி. இது பழகி விட்டால் எதையும் விலகி நின்று எழுத முடியாது. குஜராத்தில் கலவரம் நடந்தாலும் “இப்படித் தாங்க மதுரையில் ஒரு தடவை நடந்துச்சு. அன்னிக்கு என்ன நடந்துதுன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் குலை நடுங்கும்…” என்று தான் ஆரம்பிக்க முடியும். இல்லாவிட்டால் இப்படி ஆரம்பித்து “ஆனால் நான் இப்போ குஜராத் சம்பவத்தை பற்றி ஒண்ணு சொல்லணும்” என விசயத்துக்கு வருவார்கள். நீங்கள் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள்” ஆவீர்கள். நம் மொழியின் எந்த சொல்லும் சொற்றொடரும் நம் முதுகின் மீது ஏறி அமரக் கூடாது. மொழியை புதுமையாய் வைத்துக் கொள்ள முதலில் பழக்கங்களின் சுமையை இறக்கி வைக்க வேண்டும். அதற்கு “நான்”, “எனக்கு”, “எனது” “எங்கள்” சுட்டுப்பெயர்களை பெருக்கி வெளியே தள்ள வேண்டும்.
4)   புனைவில் கூட நீங்கள் சுயசரிதை பாணியை தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் கண்டிராத, அனுபவித்திராத களங்களை எழுத முடியாது. எல்லா கதைகளும் உங்கள் அலுவலகத்தில், ஊரில், வீட்டில், உறவுகள், நண்பர்கள் இடையில் தான் நடக்க வேண்டி வரும். அசோகமித்திரனின் கதைகளில் சூழலும் மனிதர்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் கதைசொல்லி அவராக இருக்க மாட்டார். இதனாலே அவரால் “பயணம்” மாதிரி ஒரு கதை எழுத முடிந்தது. இலக்கியத்தில் வெற்றிகரமான படர்க்கை கதைசொல்லலின் உதாரணம் ஜெயமோகன். அவர் என்னென்ன விதமான மாறுபட்ட கதைகளில் கதைசொல்லி இருக்கிறார் என சிந்தித்தால் திகைப்பூட்டும். (நீங்கள் பின்நவீனத்துவ எழுத்தாளர் எனில் இச்சிக்கல் இராது. ஏனெனில் இக்கதைகளில் “நான்” என்பதே ஒரு புனைவு தான். சாரு நிவேதிதா ஒரு உதாரணம்.)
5)   எழுத்தில் நாம் “நம்மைக்” கடந்து செல்லும் போது எழுத சாத்தியமுள்ள லட்சம் லட்சம் கருக்கள் கண்ணில் தென்படும். இதில் உங்கள் அகமும் ஜொலித்தால் நீங்கள் அற்புதமான ஒரு எழுத்தாளனாகலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...