சாதி ஏன் ஒழிக்கப்படவில்லை என வினவும் ஜி. முருகனின் பதிவுக்கு
நான் கீழ்கண்டவாறு எதிர்வினை ஆற்றினேன்:
“சமூகத்தை கட்சி மற்றும் அதன் கொள்கை
திருத்தி வழிநடத்தும் என்பது ஒரு நடைமுறை சாத்தியமற்ற மார்க்ஸிய பார்வை. அது வெறும்
லட்சியம். சமூகத்தின் பல சிக்கலான, பகுத்தறிவுக்கு
அப்பாலான விசைகளுக்கு முகம் கொடுப்பதே அரசியல் செயல்பாடு. ஆகையால் சாதியை அப்படி
யாரும் பதாகை உயர்த்தி நடவடிக்கை எடுத்து ஒழிக்க இயலாது. வரலாற்றின் பாய்ச்சலில்
அதுவாக சாதி அழிய வேண்டும். யாரையும் பழித்து அர்த்தமில்லை.
மக்கள் தான் அரசியல். அரசியல் தான் மக்கள்.
அவ்வள்வு பெரிய மகானான, ஆளுமையான காந்தியையே
சுதந்திரத்துக்குப் பிறகு தேசம் கைவிட்டது. அவருக்கான
வரலாற்று அவகாசம் முடிந்த பின் அவரது லட்சியவாதத்துக்கு, மகத்தான நம்பிக்கைகளுக்கு
தேவையில்லாமல் போனது. அவர் படுகொலை செய்யப்பட்டார் – அரசு எந்திரங்கள்
அதை ஆவலாய் எதிர்பார்த்தது போல் வேடிக்கை பார்த்தனர். காந்தி சுலபத்தில் தூக்கி
கடாசப்பட்டார். தேசத்தை இந்தளவுக்கு வழிநடத்தி செதுக்கியவர் அவர் எனில் எப்படி
அவர் ஒரேயடியாய் தனக்கான அரசியல் இடத்தை இழந்திருக்க முடியும்? ஏன் அவரது அஹிம்சாவாதத்தை
பிரிவினைக்கு பின்பான இந்தியாவால் ஏற்க முடியவில்லை? இதெல்லாம் ஒன்றைக்
காட்டுகின்றன – தனிமனிதன் அவன் மாபெரும் தலைவனே ஆனாலும் வெறும் பொம்மை தான்; அவனை
ஆட்டும் கைகள் திரைக்கு பின்னே இருக்கின்றன.
இதுவரை வரலாற்றில் எந்த
அமைப்பும் தலைவரும் சமூகத் தீங்குகளை ஒழித்ததில்லை. அதுவாகத் தான் காணாமல் போக
வேண்டும், அதற்கான
சமூக பொருளாதார சூழல் அமையும் போது. உதா. அமெரிக்காவில் நவீனமாக்கலுக்கும்,
கார்ப்பரேட் பொருளாதாரம் நோக்கி அவர்கள் நடை போட்டதற்கும்
மார்ட்டின் லூதர் "ஏற்படுத்திய" கறுப்பினத்தோர்
எழுச்சிக்கும்
ஒரு தொடர்புள்ளது. சந்தைக்கான பயனாளர்களை விரிவுபடுத்த சமூகத்தில் சமத்துவம் பேண
வேண்டி உள்ளது. அப்போது கருப்பர்களும் பெண்களும் விடுதலை பெற்றார்கள். அதே
போராட்டம் இருநூறு வருடங்களுக்கு முன் சாத்தியப்பட்டிருக்குமா? ம்ஹும். சாதி இனவெறியை விட
நுணுக்கமானது. ஆகையால் சாதி ஒழிவது இன்னும் இன்னும் கடினம்!”
சரி, ஏன் தமிழகத்தில்
இன்னும் சாதி இருக்கிறது?
ஏனெனில் இன்னும் முழுக்க
சாதியற்ற சமூக வாழ்வுக்கு தமிழகம் தயாராகவில்லை. அத்தகைய நிர்பந்தத்தை நம்
பொருளாதார கலாச்சார வாழ்வு ஏற்படுத்தவில்லை. தமிழ் வரலாறு இன்னும் சாதி
ஒழிப்புக்கான முனைப்பை பெறவில்லை.
நடைமுறையில் சாதி இன்னும் தமிழர்களுக்கு
ஏற்புடையதே; நிறைய வசதிகளும் ஆறுதலும் வலுவான அடையாளத்தையும் சாதி நம் மக்களுக்கு
அளிக்கிறது; ஒரு குழந்தை பிறந்த மறுநொடி சமூகத்தில் பண்பாட்டில் அதன் இடத்தை சாதி
உறுதி செய்கிறது – குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களாய் அடையாளத்தை தேடி லோல்பட
தேவையில்லை. தலித்துகளை பொறுத்தமட்டில் இந்த அடையாளம் ஒடுக்குமுறைக்கும்
அநீதிக்கும் பாகுபாடுகளுக்கு வழிகோலுகிறது. ஆகையால் அவர்கள் சாதி ஒழிப்புக்கு
பாடுபடுவதில் ஒரு அவசியமும் நியாயமும் உள்ளது. ஆனால் மத்திய, மேல் சாதிகளுக்கு
இந்த நடைமுறை மட்டும் அரசியல் தேவை இல்லை.
ஆனால் சாதி ஒரு
தொந்தரவாக, ஆறாவது விரலாக மாறும் நாள் நிச்சயம் எதிர்காலத்தில் வரும். அன்று நாம் சாதியை
முறித்து ஜன்னலுக்கு வெளியே வீசுவோம். அதுவரை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் …
கருத்துகள்