வெளிப்படையாய் அளந்து முன்வைக்கப்படும் வேலை ஒரு கொடுமையாய் நமக்குத் தெரிவதில்லை. துப்பாக்கிக்கு அடுத்தபடியாய் பயங்கரமான ஆயுதம் தகவல்கள். தகவல்கள் கடுமை தெரியாமல் ஒரு வேலையை ஒரு சுலப விளையாட்டாய், விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் செய்து முடிக்க வேண்டிய விளையாட்டாய் மாற்றுகின்றன.
வேலையும் விளையாட்டையும் ஒன்றாக மாற்றுவன கண்காணிப்பு கேமராக்கள். நம் அலுவலகங்களிலும் பிக்பாஸ் வீட்டிலும் இந்த கண்காணிப்பு
உணர்வும், கண்காணிப்பின்
வழி நம்மைப் பற்றி தொகுக்கப்படும் தகவல்களும் நம்மை ஏய்க்கின்றன.
இந்த வெளிப்படைத் தன்மை ஆயுதத்தை எப்படி முறியடிக்க முடியுமா?
முடியும்! அதற்கு கண்காணிப்புக் கேமரா முன் நாம் நடிக்கத் துவங்க வேண்டும். வேலையிடங்களில் வேலை பார்ப்பதாய் கச்சிதமாய் நடிக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிலும் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் இதை நுட்பமாய் சாமர்த்தியமாய் செய்து பிக்பாஸுக்கே ஆப்படிப்பதைக் காணலாம்.
பிக்பாஸ் இவர்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் புகார் இவர்கள் “வெளிப்படையாய் இல்லை”, “போலியாக இருக்கிறார்கள்” என்பது. அதற்கு பதிலளிக்கும் பங்கேற்பாளர்கள் தாம் “உண்மையாகவே” இருப்பதாய் உறுதியளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படையாய் இருப்பதாய் நடித்து வெளிப்படைத் தன்மையின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். உதாரணமாய், தாம் அணிந்திருக்கும் மைக்குக்கு கேட்காமல், கண்காணிக்கும் படக்கருவிகளுக்குத் தெரியாமல் அவர்கள் சைகையில் பேசினால் முணுமுணுத்தால் பிக்பாஸிடம் மாட்டிக் கொள்வார்கள். பிக்பாஸை சமாளிக்கத் தெரியாமல் அவர்கள் திணறுகிறார்கள் என்பதை அது காட்டும். ஆனால் மைக்கில் கேட்க வேண்டும் என்றே, கேமராவில் தெரிய வேண்டும் என்றே அவர்கள் சத்தமாய் மிகையுணர்ச்சியுடன் நடந்து கொள்கையில் இவர்களை எப்படி குற்றம் சாட்டுவது, கண்டிப்பது என பிக்பாஸுக்கே குழப்பம் ஏற்படுகிறது. பிக்பாஸ் இரண்டாம் பருவத்தில் நான் பங்கேற்பாளர்களிடம் மிகவும் ரசித்த விசயம் இது.
கடைசியாய், பிக்பாஸ் நம் பாஸாகவும் தெரியும் காரணம்:
அது இருவருமே இரும்புக்கை மாயாவிகள் என்பது. கார்ப்பரேட்டுகளில் சதா பாஸ் நம்மை கண்காணிப்பதாய், மதிப்பிடுவதாய் ஒரு பிம்பம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அவர் மாயமாய் இருப்பார்; அந்த மாயமே நம்மை தொடர்ந்து அச்சுறுத்தி ஓடி ஓடி வேலை செய்யத் தூண்டும்! ஒவ்வொரு முறை நமக்கு இந்த மாயமான் விளையாட்டு கசப்பை தரும் போதும், அழுத்தம் தாள முடியாது போகும் போதும், பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் கண்காணிப்பு கேமரா முன் நின்று புலம்புவது போல், நாம் நமது அணித் தலைவர்கள் அல்லது மனிதவளத் துறை அதிகாரிகளிடம் சென்று உணர்வுகளைக் கொட்டுகிறோம். அவர்கள் நம்மிடம் சொல்வார்கள்: “கவலைப்படாதீங்க, பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” நாம் மனதுக்குள் சொல்லிக் கொள்வோம்: “அதானே கவலையே!”
கருத்துகள்