நான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவன் அல்ல.
பேஸ்புக் எட்டிப் பார்க்கவும் பாட்டுக் கேட்கவும் மட்டுமே போனை பயன்படுத்துவேன். போன்
பேட்டரி இரவில் சார்ஜ் போடும் வரை தாங்கும். சமீபத்தில் என் போன் திரை நொறுங்கியது.
அதோடு பேட்டரியும் நீரிழிவு நோயாளி போல் அடிக்கடி பசித்து சோர்ந்து கொண்டே வந்தது.
ரெண்டு மணி நேரம் இணையத்தில் புழங்கினாலே 60%க்கு குறைந்து விடும். அதோடு பாட்டும்
கேட்டால் மதியத்துக்குள் 20% வந்து விடும். பகல் முழுக்க தாங்க வேண்டும் என்றால் இரண்டு
முறை சார்ஜ் செய்ய வேண்டும்.
சரி போன் பழசாகி விட்டது; பேட்டரி கடைசி கட்டத்தில் இருக்கிறது
என நினைத்து புது போன் வாங்கினேன். ரெட்மி 5.
இந்த ரெட்மி பற்றின விமர்சனங்களில் பேட்டரி இரவு வரை தம்
கட்டும் என பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் போன் என் கைக்கு வந்த பின் அதன்
பேட்டரி நிலை சற்று பலவீனமாகவே தென்பட்டது. மதியத்துக்குள் 30% வந்து விட்டது. எனக்கோ
செம கடுப்பு. வாங்கின சில நாட்களிலே போன் பேட்டரி இப்படி தள்ளாடி விழுகிறதே! ஒருவேளை
பழுதான பேட்டரியா? புகார் தெரிவித்து போனை திரும்ப அனுப்பிவிட வேண்டுமா?
பிறகு, நான் எப்படி சார்ஜை போனில் சேமிப்பது என கொஞ்சம் இணையத்தில்
படித்தேன். இணையம் தந்த அறிவுறுத்தல் படி செட்டிங்ஸ் போய் ஆப்களுக்கு பின்னணியில் இயங்குவதற்கான
அனுமதியை சோதித்தேன். நான் தினமும் நான்கு ஆப்களுக்கு மேல் பயன்படுத்துவது இல்லை எனிலும்
இருபதுக்கு மேல் ஆப்கள் பின்னணியில் ஓடுவதை கவனித்தேன். அவை அப்படி ஓடுவதை என்னால்
பார்க்க முடியாது; ஆனாலும் அவை மாயமாய் இயங்குகின்றன. இப்படி அவை இயங்குவதற்கான அனுமதியை
ரத்து செய்தேன். ஆப்களில் வாட்ஸ் ஆப் தவிர பிற ஆப்கள் அறிவிக்கைகள் அனுப்பும் அனுமதியையும்
மறுத்தேன். அடுத்து ஜி.பி.எஸ்ஸை ரத்து செய்தேன்.
இதன் பிறகு போன் சற்று அமைதியானது. அதோடு பேட்டரியின் உடல்நிலையில்
ஆச்சரியப்படும்படியாய் மேம்பட்டது. முன்பு, இரவு வை பையை அணைத்து விட்டு போனை வைத்தால்
காலையில் 20% சார்ஜ் குறைந்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்களுக்குக் பின் வெறும்
2% மட்டுமே குறைந்தது. அது மட்டுமல்ல, 12 மணிநேரம் கழித்து சார்ஜ் 70% இருக்கிறது.
இணைய அலைச்சல், கேமிங், முகநூல் எட்டிப் பார்த்தல்,
பாட்டுக் கேட்டல் என போனை வழக்கமான படியே பயன்படுத்தினேன்.
ஒரு ஸ்மார்ட் போனில் கணிசமான சார்ஜை உறிஞ்சுவது அதில் நான் பயன்படுத்தாத
ஆப்களின் வெளித்தெரியாத செயல்பாடே என்பது இப்போதும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாம்
மூன்று ஆப்களை நாள் முழுக்க பயன்படுத்துகிறோம் என்றால் முப்பது ஆப்கள் நம் போனுக்குள்
குடித்தனம் பண்ணி, நம் சமையலறையில் இருந்து திருடித் தின்று, நம்மை பயன்படுத்துகின்றன.
அவற்றை அடித்து தூங்கச் செய்தால் போன் நமக்காக மட்டும் பயன்படுகிறது. சார்ஜும் நின்று
வேலை செய்கிறது.
கருத்துகள்
ரெட்மி செல் சூடாகும் என்கிற கம்பிளெயின்ட் இருக்கிறதே... அதைச் சரி செய்து விட்டார்களா?
உங்கள் செல்லிலிருந்து UIDAI எண்ணையும். Distress எண்ணையும் நீக்கி விட்டீர்களா? இரண்டும் நாம் அறியாமல் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் எண்கள்.