மோடி அரசின் அமைச்சர்களில் ஒருவரும் முன்னாள் பிரபல பத்திரிகையாளருமான
எம்.ஜெ அக்பருக்கு எதிராகவும் இப்போது பாலியல் குற்றச்சாட்டுகள்
வந்து கொண்டிருக்கின்றன. குற்றம் சாட்டுவோர்
பலர் முன்பு பத்திரிகைகளில் அவருக்குக் கீழ் வேலை செய்த இளம்பெண்கள். இவர்களில் ஒருவர் அக்பர் தன் பிரா பட்டியைப் பற்ற இழுத்து
விட்டதாய் சொல்வது மட்டுமே பாலியல் தொந்தரவு பட்டியலில் வரும். மற்ற பெண்கள் சொல்வது அவர் வேலைக்கான நேர்முகத் தேர்வின்
போது ஜொள்ளு விட்டார், தன் அருகே (படுக்கையில்) உட்காரச் சொன்னார், தன் ஓட்டல் அறைக்கு
அழைத்தார் என்பனவே. இதில் அவர் இப்பெண்களை
வற்புறுத்தி உறவு கொண்டதாய் குற்றச்சாட்டோ ஆதாரமோ இல்லை. ஆனால் பாலியல் வறட்சி கொண்ட, பெண்களிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கத் தெரியாத ஒரு மத்திய
வயது / வயதான ஆணின் குளறுபடிகளாகவே இவற்றைப் பார்க்கிறேன். அக்பர் செய்தது தவறே, அவரை நிச்சயமாய் கண்டிக்க வேண்டும், ஆனால் ஒரு பெண்ணிடம் வழிந்தார், ஜொள்ளு விட்டார் என்பதற்காய் அவரை கைது செய்து காவலில் வைக்க
முடியாது. பிரா பட்டியை தொட்டது ஒரு மீறலே, அதற்காய் அவரை தூக்கிலிட முடியாது. (முன்பு நாவலாசிரியர் / பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு எதிராகவும் இது போன்ற
குற்றச்சாட்டுகள் வந்ததை நாம் மறக்க முடியாது.)
நான் இந்த விசயத்தை இரு விதங்களில் பார்க்கிறேன்:
1) அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஆண் ஜொள்ளு விடுவதை
நாம் உடனே பலாத்காரம் என மிகைப்படுத்தி அவருக்கு எதிராய் பிரச்சாரம் பண்ணக் கிளம்பக்
கூடாது. ஆண்கள் தம் எல்லைகளை, தாம் விருப்பத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகளை அறிந்திருக்க
வேண்டும் தான். ஆனால் அதற்காய் ஒரு ஆண் செய்வதெல்லாம் ரேப் ஆகாது. இது உண்மையான பாலியல் தாக்குதல் வழக்குகளின் தீவிரத்தை இல்லாமல்
ஆக்கும்.
இது நான் சொல்வதல்ல, பிரான்ஸின் முக்கியமான பெண்ணியவாதிகள் இந்த இயக்கம் குறித்து
தம் கவலைகளை தெரிவிக்கையில் கூறியது. Vox / Morning Consult நிறுவனம் பெண்களிடம் நடத்திய சர்வே ஒன்றில் கணிசமான
பெண் பங்கேற்பாளர்கள் தெரிவித்த கவலை இது. ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் பெண்களின் முந்தானையை பறித்து
இழுக்கும் காமகுரோதர்களாய் சித்தரிக்காதீர்கள். நாளை உங்கள் மகனோ தம்பியோ ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து “நீ அழகாய் இருக்கிறாய்” எனச் சொன்னால் அப்பெண் “இவன் என்னிடம் பாலியல் அத்துமீறல் செய்தான்” என பொதுவெளியில் சொன்னால் உங்களுக்கு அது எப்படி இருக்கும்
என சர்வே பங்கேற்பாளர்கள் பலர் வினவுகிறார்கள். பத்தியாளர் மார்கரெட் வெண்டே, எழுத்தாளர்கள் மார்கரெட் ஆட்வுட், நடிகர்கள் மேட் டேமன், லீயம் நீசம் உள்ளிட்ட பலரும் இத்தகைய கருத்தை இந்த #metoo இயக்கத்துக்கு எதிராய் தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகை கேதரின் டெனுவே தலைமையில் நூறு பெண் கருத்தாளர்கள்
#metoo குறித்து கவலை தெரிவித்து லெ மொண்டே பத்திரிகையில்
ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சார இயக்கம் இப்போது ஒட்டுமொத்த ஆணினத்தையே ஒழிக்க கிளம்பி இருக்கும்
ஒரு சூனியக்கார வேட்டையாக (witch hunt) மாறிப் போயிருப்பதாய் இவர்கள் கோருகிறார்கள். அனைத்து ஆண்களும் கற்பழிப்பாளர்கள் அல்ல, சில செயல்கள் தெரியாத்தனமாயும் சில மென்மையான விருப்ப தெரிவிப்பாகவும்
சில நடவடிக்கைகள் எளிய தொந்தரவுகளாகவும் உள்ள நிலையில் அனைவரும் பொத்தாம் பொதுவாய்
தாம் அத்துமீறப்பட்டதாய் ஒப்பாரி வைக்கையில், “அத்துமீறல்” எனும் குற்றச்செயலே நீர்த்துப் போகும் நிலை ஏற்படுகிறது. மேலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு தம் தரப்பை விளக்கவோ
நிரூபிக்கவோ வாய்ப்பே தராமல் அவர்களை கூட்டமாய் மக்கள் மொத்துவது ஒருவித பெண்ணிய சர்வாதிபத்தியம் (totalitarianism) என்கிறார்கள் இந்த விமர்சகர்கள். “அவன் ஆணா என்று பார். ஆணென்றால் ரேப்பிஸ்ட் தான்” என முத்திரை குத்தி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றும்
ஒருவித வெறித்தனத்தை இந்த பிரச்சாரத்தின் போது எல்லா தளங்களிலும் பார்க்க முடிகிறது
என்கிறார் நடிகை கேதரின் டெனுவே. இது பெண்ணியம்
அல்ல, ஆண்கள் மற்றும் பாலியல் மீதான ஒருவித வெறுப்பு
பிரச்சாரம் இது என்கிறார். அவர் இதைச் சொன்னது
தான் தாமதம் ரேடிக்கல் பெண்ணியவாதிகள் அவர் மீது விழுந்து குதறத் தொடங்கினர்.
பாலியல் அழைப்பை எப்போது தொந்தரவாகவோ தாக்குதலாகவோ
பார்க்கலாம் எனும் விசயத்திலேயே இரு சாராருக்கும் கருத்துமுரண். இன்முகம் காட்டினாலே பாலியல் தாக்குதல் என வகைப்படுத்தக்
கூடாது என ஒரு தரப்பும், எந்தளவுக்குப்
போனால் பாலியல் குற்றமாகும் என்பதை பாதிக்கப்பட்டவரே முடிவெடுக்க வேண்டும் என அதன்
எதிர்தரப்பும் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்டோரின்
கோணத்தில், அவர்களின் விருப்பப்படி, பார்வையின்படி, ஒரு குற்றத்தை மதிப்பிடலாம் என்பது ஆபத்தானது மற்றும் அநியாயமானது.
நானா படேகர் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்துமீறினார்
என நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியது ஒரு நல்ல உதாரணம். படேகர் தன் கையைப் பற்றி நடனம் பழக்கினார் என்கிறார் தனுஷ்ஸ்ரீ. தன் கையை ஒரு ஆண் பற்றும் போது அது தவறான எண்ணத்தில் தான்
என எப்படி வரையறுப்பது? அது தவறாக பட்டதெனில்
அப்பெண் அவரிடம்
இருந்து விலகி இருக்கலாம்; ஆனால் தன் புரிதலின்
அடிப்படையில் அதை ஒரு அத்துமீறலாய், கிட்டத்தட்ட பலாத்காரமாய்
சித்தரிப்பது நியாயமல்ல.
எப்படியான நடவடிக்கையை பாலியல் குற்றமென வரையறுக்கலாம்
என்பதில் ஒரு தெளிவு அவசியம். “உன் வாட்ஸ் ஆப்
டி.பி நைஸ்” என ஒரு பிரபலம் ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், அப்பெண் பதிலளிக்காத பட்சத்தில் அவர் தொடர்ந்து “ஹை ஹலோ” என நான்கைந்து
முறை குறுஞ்செய்திகள் அனுப்பினால் அப்பெண்ணுக்கு அது தொந்தரவாகப் படலாம். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு அதை ஒரு பாலியல் குற்றமாய் கண்டு
பழிதூற்றல் ஆகாது. அவரை உதாசீனிப்பதோ “என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என அப்பெண் நேரடியாய் சொல்வதோ தான் சிறப்பு.
எளிய விருப்ப வெளிப்பாட்டுக்கும் பாலியல் குற்றத்துக்குமான
வித்தியாசத்தை தெளிவுபடுத்த நாம் தாம்பத்ய பலாத்காரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் தாம்பத்ய பலாத்காரத்தை ஒரு குற்றமாய் கருதுகிறார்கள். ஒரு பெண் தன் கணவன் தன்னை தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்வதாய்
குற்றம் சாட்டலாம். எந்த பெண்ணும்
அதைச் செய்யலாம். லிவ்-இன் உறவிலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் இதை எப்படி நிரூபிப்பது? எந்த கட்டத்தில் எப்போது ஒரு இணை எல்லை மீறுகிறார், அந்த எல்லை மீறல் எப்போது செக்ஸாகவும் எப்போது பலாத்காரமாகவும்
ஆகிறது என்பதை சட்டத்தால் வரையறுக்க இயலுமா? வெளிப்படையான உடல் காயங்கள் இல்லாத பட்சத்தில் முடியாது; தாம்பத்ய பலாத்காரம் என்பது மிக சிக்கலான விசயமே.
ஆகையால் தான் அமெரிக்க தாம்பத்ய பலாத்கார சட்டங்கள் வன்முறை
அல்லது மயக்கமருந்து அளித்து செக்ஸுக்கு வற்புறுத்துவதை மட்டுமே பலாத்காரம் என அடையாளப்படுத்துகின்றன. இணைகள் இடையே உடலுறவு என்பது பரஸ்பர விருப்பத்துக்கும் விருப்பமின்மைக்கும்
நடுவில் உள்ளது. ஒரு சின்ன எதிர்ப்பு, வற்புறுத்தல், கெஞ்சல், மறுப்பு, கோபம், கண்ணீர், உன்மத்த வெறி, ஆறுதல்படுத்தல் ஆகிய கட்டங்கள் இல்லாத செக்ஸ் உண்டா சொல்லுங்கள். ஒரு பெண் தான் அத்துமீறப்படுவதாய் உணர்வது மட்டுமே அத்துமீறல்
அல்ல என அமெரிக்க சட்டங்கள் கூறுகின்றன. இதையே நாம் #metoo பிரச்சாரத்துக்கும்
கூற வேண்டும்.
காதலுக்கு வெகு அருகில் சென்று விட்டு மீள்கிற ஜோடிகள் உண்டு. அதில் ஒரு ஆண் ஒரு கட்டத்தில் அப்பெண்ணிடம் கோபத்தில் கத்தலாம், அவளை மிரட்டும்படியாய் அவன் நடவடிக்கைகள் அப்போது அமையலாம், அல்லது அவன் மன்றாடி அவளை நெகிழ வைக்க முயலலாம், அவளது எதிர்வினைகளை அவன் தனக்கு சாதகமானவை என தவறாய் புரிந்து
கொண்டு அவள் தோளை உரச / கன்னத்தை / கையை முத்தமிட முயலலாம். அப்போது அப்பெண் இதை அத்துமீறலாய் பார்க்க வாய்ப்பதிகம். ஆனால் அவளது உணர்வுகளை மட்டுமே கருத்தில் கொண்டு நாம் இதை
கடுமையான பாலியல் குற்றமென கருத இயலாது. ஏனென்றால் இந்த செயல்பாடுகள் ஆண்-பெண் இணைவை நிகழ்த்துவதற்கு இயற்கை நமக்கு போதித்துள்ள உத்திகள். ஒரு வழக்காடுமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மனுவை சமர்ப்பிப்பது
போல, கவனமாய், அரசியல் சரித்தன்மையை மீறாமல் ஒரு காதலன் தன் அன்பை, ஆசையை தன் காதலியிடம் கூற முடியாது. பிறழ்வே காதல், பிறழ்வே காமம். பிறழ்வின்றி மிகுந்த
ஒழுங்குடன் நடந்தால் அது நட்பு மட்டுமே. பிறழ்வு வன்முறையாகாத வரை குற்றமாகாது.
கருத்துகள்