முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஷ்வின் எனும் மாந்திரிகன்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின்போது ஆடிய அஸ்வின் பழைய அஸ்வின் அல்லர். அவர் உலகின் எந்த மூலையிலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தார். ஆனால், அவரது உடல்தகுதி அவரை முதல் டெஸ்டிலிருந்தே கைவிடத் தொடங்கியது. ஆகையால், அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியுமா என விவாதங்கள் நடந்தன. பல நிபுணர்களும் குல்தீப் யாதவே ஆஸ்திரேலிய மண்ணுக்குத் தோதானவர் என்றனர். ஆஸ்திரேலியாவில் அஸ்வினின் பந்து வீச்சு சராசரி 50க்கு மேல் எனச் சுட்டிக்காட்டினர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆடுதளம் சற்றே மெத்தனமானது; கொஞ்சம் சுழல்வது. இது பேட்ஸ்மேனைக் கட்டுக்குள் வைக்க அவருக்குக் கைகொடுத்தது என்றாலும் பிளைட், லூப், டிரிஃப்டைக் கொண்டுதான் அஸ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைக் கவனிப்பதே நல்ல கலை அனுபவமாய் இருந்தது.


கவாஜாவுக்கு அஸ்வின் விரித்த வலை


அடிலெய்டில் நான்காவது நாளன்று ஆஸ்திரேலியா 323 எனும் இலக்கை நோக்கி ஆடிவந்தபோது இடது கையாளரான உஸ்மான் கவாஜா வருகிறார். அவரே தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன். அஸ்வின் வழக்கம்போல் இடது கையாளரின் கால் பக்கமாய் பந்து விழுவது போல மயக்கம் தோன்றும்படியாய் லூப் செய்து வீசுகிறார். ஆனால் பந்து விழுந்த பின் வெளிநோக்கித் திரும்புகிறது. கவாஜா இதைச் சமாளிப்பதற்காக இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். ஆனால் லூப்பும் டிரிஃப்டும் அவரை நேராக அடிக்கச் செய்கின்றன. பந்து கடைசி நேரத்தில் வெளிநோக்கித் திரும்பிட, கிட்டத்தட்ட அவுட் ஆகிறார். ஆனால் தப்பித்துவிட்டார்.


இதற்கு அடுத்த பந்தில் அஸ்வின் என்ன செய்ய வேண்டும்? முந்தைய பந்தைப் போன்றே வீச வேண்டும் என நாம் சொல்வோம் அல்லவா! ஆனால், அஸ்வினோ வேறு விதமாய் சிந்தித்தார்.




அஸ்வின் அடுத்த பந்தைச் சற்று வைடாக, குறை நீளத்தில் வீசினார். கவாஜா அதை வெட்டி ஆடினார். அடுத்ததற்கு அடுத்த ஓவர். அஸ்வின் மீண்டும் கவாஜாவுக்கு வீச வருகிறார். சில பந்துகளை வெளியே திருப்பிவிட்டு ஒரு பந்தை நேராக பிளைட் செய்து வீசுகிறார். அழகான லூப்புடன் இப்பந்து கவாஜாவை அடிக்கக் கோருகிறது. கவாஜா தன்னை அறியாது இறங்கி வருகிறார்; வந்த பின் அதைத் தடுத்தாட முடியாது என எண்ணிக் கூடுதலாய் நெருங்கிச் சென்று தூக்கி அடிக்கிறார். இப்போது பந்து டிரிஃப்ட் ஆகி வெளியே போகிறது. லீடிங் எட்ஜ் எக்ஸ்டிரா கவருக்குச் செல்ல ரோஹித் ஷர்மா அங்கு லாகவமாய் அதை ஏற்கிறார்.


இதே பந்தை அஸ்வின் கவாஜாவுக்கு முந்தின ஓவரில் அடுத்தடுத்து வீசியிருந்தால் அவர் கவருக்கு மேலாக அடித்திருப்பார். விக்கெட் விழுந்திருக்காது. ஏனென்றால் பேட்ஸ்மேன் தெளிவற்று, சுயசிந்தனையற்று பந்தின் போக்கால் வசியப்பட்டு அடித்தாடும்போதே வெளியேற வாய்ப்பு அதிகம். மட்டையாளரின் ஷாட் செல்லும் வழி மனமும் சென்றால், அறிவும் பிரக்ஞையும் சென்றால் அது நல்ல ஷாட்டாகும். ஆனால், உணர்வால் தவறாய் வழிநடத்தப்பட்டு ஆடும்போது மட்டையாளர் வீழ்கிறார். அஸ்வின் தொடர்ந்து இரண்டாம் முறையாக அப்பந்தை வீசியிருந்தால் கவாஜா அதை பிரக்ஞைபூர்வமாய் எதிர்கொண்டிருப்பார். ஆகையால்தான் அவரை ஏமாற்றும் விதமாக அஸ்வின் குறை நீளப் பந்தை வீசினார். ஆனால், அடுத்த ஓவரில் இந்த லூப்பான பந்து கவாஜாவை நோக்கி எதிர்பாராத வேளையில் வருகிறது. அஸ்வினின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பந்து மாயம் செய்ய கவாஜா ஆடும் நிலைமை ஏற்படுகிறது. லீடிங் எட்ஜ் பிறக்கிறது. இதை விடச் சிறப்பாய் ஒரு பேட்ஸ்மேனின் மனத்தையும் உடலையும் ஒரு சுழலர் கட்டுப்படுத்த முடியுமா?


மேலும் படிக்க

https://www.minnambalam.com/k/2018/12/12/17


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...