முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மீ-டூ – சில விமர்சனங்கள்” – நூல் வெளியீடு



நண்பர்களே! இம்மாதம் 29இல் தேவநேய பாவாணர் அரங்கில் வெளியாகும் எனது மற்றொரு நூல் “மீ-டூ – சில விமர்சனங்கள்”.
கடந்த இரு மாதங்களில் மீ-டூ சர்ச்சை தலைவிரித்தாடிய சந்தர்பங்களில் நான் தொடர்ந்து அது குறித்து எனது மாற்றுப் பார்வையை வெளியிட்டு வந்ததை அறிவீர்கள். எனது பிளாகிலும், மின்னம்பலம், தீராநதி ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எனது விமர்சனங்களை பிரசுரித்தேன். இந்த இயக்கம் ஆண்-பெண் பிளவை அதிகப்படுத்துவதாக, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக, மறைமுக ஒழுக்கவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக, கும்பல் மனப்பான்மையையும், விசாரிக்காமல் ஆராயாமல் ஒருவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் ஆவேசத்தையும் ஊக்குவிப்பதாக எப்படி செயல்படுகிறது, இந்த சிக்கல்களின் அரசியல்-பண்பாட்டு வேர்கள் என்ன என இந்நூலில் விவரித்திருக்கிறேன்.

எந்த ஒரு சமூக-அரசியல் இயக்கத்தின் பிரச்சனைகளை, அது ஏற்படுத்தும் ஆபத்துகளை வெளிப்படையாய் பேச வேண்டியது ஒரு படைப்பாளியின் பொறுப்பு. இந்த மீ-டூ இயக்கத்தினால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒரு எழுத்தாளனாய் யாரும் பேச விரும்பாததை, தவிர்க்க விரும்புவதை பேச வேண்டியவனாக நான் இருப்பது முக்கியம் – இதை நான் என் நண்பர்கள் பலரிடமும் உரையாடும் போது உணர்ந்தேன். அவர்கள் என் கருத்துக்கு இணையாக சிந்திப்பவர்கள், ஆனால் (1) எதற்கு வம்பு, நாம் ஏன் பெண்ணியவாதிகளிடம் உதைபட வேண்டும் என ஒதுங்கிச் செல்பவர்கள்; (2) ஒரு இயக்கத்தின் குறைகளை, பிரச்சனைகளை அதன் நன்மைகளைக் கருதி பேசாமல் விட்டு விடுவது அவசியம் என லட்சியவாத தரப்பை எடுப்பவர்கள்.
இந்த புத்தகம் வழி நான் இந்த மௌனிகளின் குரலாக இருந்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குறுகிய காலத்தில் ஒரு சமூகப் பிரச்சனையை ஒட்டி நான் எழுதிய முதல் புத்தகம் இது.
இந்நூலை பிரசுரிக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் வாங்கி, இதை வெளியிட்டுப் பேசப் போகும் எழுத்தாளர் சரவண கார்த்திகேயனுக்கும் இதைப் பற்றி விவாதிக்க இருக்கும் வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்.
வாங்க சந்திப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...