நண்பர்களே! இம்மாதம் 29இல்
தேவநேய பாவாணர் அரங்கில் வெளியாகும் எனது மற்றொரு நூல் “மீ-டூ – சில விமர்சனங்கள்”.
கடந்த இரு மாதங்களில் மீ-டூ சர்ச்சை தலைவிரித்தாடிய சந்தர்பங்களில்
நான் தொடர்ந்து அது குறித்து எனது மாற்றுப் பார்வையை வெளியிட்டு வந்ததை அறிவீர்கள்.
எனது பிளாகிலும், மின்னம்பலம், தீராநதி ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எனது விமர்சனங்களை
பிரசுரித்தேன். இந்த இயக்கம் ஆண்-பெண் பிளவை அதிகப்படுத்துவதாக, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக,
மறைமுக ஒழுக்கவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக, கும்பல் மனப்பான்மையையும், விசாரிக்காமல்
ஆராயாமல் ஒருவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் ஆவேசத்தையும் ஊக்குவிப்பதாக எப்படி
செயல்படுகிறது, இந்த சிக்கல்களின் அரசியல்-பண்பாட்டு வேர்கள் என்ன என இந்நூலில் விவரித்திருக்கிறேன்.
எந்த ஒரு சமூக-அரசியல் இயக்கத்தின் பிரச்சனைகளை, அது ஏற்படுத்தும்
ஆபத்துகளை வெளிப்படையாய் பேச வேண்டியது ஒரு படைப்பாளியின் பொறுப்பு. இந்த மீ-டூ இயக்கத்தினால்
நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒரு எழுத்தாளனாய் யாரும் பேச விரும்பாததை,
தவிர்க்க விரும்புவதை பேச வேண்டியவனாக நான் இருப்பது முக்கியம் – இதை நான் என் நண்பர்கள்
பலரிடமும் உரையாடும் போது உணர்ந்தேன். அவர்கள் என் கருத்துக்கு இணையாக சிந்திப்பவர்கள்,
ஆனால் (1) எதற்கு வம்பு, நாம் ஏன் பெண்ணியவாதிகளிடம் உதைபட வேண்டும் என ஒதுங்கிச் செல்பவர்கள்;
(2) ஒரு இயக்கத்தின் குறைகளை, பிரச்சனைகளை அதன் நன்மைகளைக் கருதி பேசாமல் விட்டு விடுவது
அவசியம் என லட்சியவாத தரப்பை எடுப்பவர்கள்.
இந்த புத்தகம் வழி நான் இந்த மௌனிகளின் குரலாக இருந்திருக்கிறேன்.
எனக்கு அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குறுகிய காலத்தில் ஒரு சமூகப் பிரச்சனையை ஒட்டி
நான் எழுதிய முதல் புத்தகம் இது.
இந்நூலை பிரசுரிக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் வாங்கி, இதை வெளியிட்டுப்
பேசப் போகும் எழுத்தாளர் சரவண கார்த்திகேயனுக்கும் இதைப் பற்றி விவாதிக்க இருக்கும்
வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்.
வாங்க சந்திப்போம்!

கருத்துகள்