முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரிஷப் பண்டின் முதிர்ச்சி


Rishabh Pant

நான் ரிஷ்ப பண்டின் விசிறி. இதற்கு முன் என்னை இந்தளவுக்கு கவர்ந்த ஒரு கீப்பர் பேட்ஸ்மேன், இடதுகை அதிரடிக்காரர் என்றால் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். அவருக்குப் பின் சிறிது காலம் யுவ்ராஜ் சிங்.


ரிஷப் பண்ட் உள்ளூர் ஆட்டங்கள் ஆடும் காலத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் தான். சில வீரர்கள் டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டத்தின் வேகத்தில் ஆடுவர். பண்டோ டி-20 தாளத்தில் டெஸ்டில் மேளம் அடிப்பவர். பத்து பவுண்டரிகள் அடிக்கும் நீளத்தில் விழும் பந்துகளை ஏன் வீணடிக்க வேண்டும் என பத்து சிக்ஸர்கள் அடிப்பார் அவர். ஒரு பேட்ஸ்மேன் 20 சிக்ஸர்கள் அடித்தால் 160-200 ரன்களை நான்கு நாள் போட்டிகளில் அடிக்கலாம் என உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்தவர். அப்படித் தான் அவர் தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்றார்.

 தில்லி அணிக்காக இரண்டாவது வருடம் ரஞ்சி கோப்பை ஆடிய போது பண்ட 48 பந்துகளில் ஜார்கண்டுக்கு எதிராக சதம் அடித்தார் - ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மிக வேகமான சதம் அது. அதே ஆண்டில் அவர் மகாராஷ்டிராவுக்கு எதிராய் 326 பந்துகளில் முச்சதம் அடித்தார். இத்தனையும் செய்து பண்ட் அதிர்வுகளை ஏற்படுத்திய போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன் பின்னர் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிகழவில்லை. தோனி அப்போது மோசமான பார்மில் இருந்தார் - ஆகையால் அப்போது தோனிக்கு ஓய்வளித்து பண்டு உள்ளே கொண்டு வரப்படுவது தோனிக்கு தேவையற்ற சிக்கலை, நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால் டெஸ்ட் கீப்பர் சாஹா காயப்பட, எதிர்பாராத விதமாய் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அயல்மண்ணில் ஆடினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நேரடியாய் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய பண்ட் ஒன்பது போட்டிகளில் 2 சதங்களும் 2 அரை சதங்களும் அடித்தார். ஆகையால், அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டு அது நிகழாத போது இந்தியா முழுக்க மட்டுமல்ல உலக அளவில் கூட ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் வாஹ்ன், ஆஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் போன்றோர் பண்ட் தேர்வாகாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர். பண்ட் நிச்சயம் தன் ஆட்டவாழ்வில் மூன்று உலகக்கோப்பைகளாவது ஆடுவார் என பாண்டிங் ஆருடம் கூறியுள்ளார். முன்னாள் தேர்வாளர் வெங்க்சார்க்கர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் அசருதீன் ஆகியோரும் பண்ட் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து கூறினர். இந்த கருத்துக்களின், எதிர்பார்ப்பின் நெருக்கடி காரணமாய் பண்ட் உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்களில் ஒருவராய் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இவ்வளவு ஆதரவு இருந்தும் ரிஷப் பண்டின் சில குறைகள் குறித்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. அவருக்கு ஆட்டச் சூழல் குறித்த புரிந்துணர்வு இல்லை, பொறுமையோ முதிர்ச்சியோ இல்லை, தேவையான நேரத்தில் அபத்தமாய் ஆடி அவசியமற்று வெளியேறுகிறார் என தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது. 2019 ஐ.பி.எல்லில் கூட இதற்கு பல உதாரணங்களை நாம் கண்டோம். ஆக, 22-04-19 அன்று தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராய் ஆடிய பண்ட் 36 பந்துகளில் 78 அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அது ஒரு சாதாரண இன்னிங்ஸ் அல்ல. பண்ட் ஒரு நிதானமான பொறுப்பான பேட்ஸ்மேனாக முதிர்ந்து விட்டார் என நமக்கு சொல்கிற இன்னிங்ஸ் அது.

192 எனும் இலக்கு அந்த சற்றே மெத்தனமான ஆடுதளத்தில் சற்று சிரமமானது. பண்ட் உடனடியாய் அவசரகதியில் வெளியேறி இருந்தால் தில்லி நிச்சயம் தோற்றிருக்கும். ஆனால் பண்ட் இம்முறை பொறுமையாய் இறுதி ஓவர் வரை நின்று, தோனி ஸ்டைலில், ஆடினார். வந்த உடனே சிக்ஸர்களை இலக்காக்காமல் பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ரன்கள குறி வைத்தார். முப்பது பந்துகளில் முப்பது ரன்கள் எனும் நிலை வந்த போதும் ஓவருக்கு ஒரு சிகஸர் போதுமென புரிந்து ஆடினார். சிக்ஸர் அடித்து விட்டு அடுத்து ஒற்றை ரன் எடுத்தார். கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட்ட போது அவர் ஒற்றை ரன்கள் எடுத்து ஆட்டத்தை தேவையின்றி சிக்கலாக்கவில்லை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பது ஆபத்தானது. ஆக இரண்டாவது பந்தில் அவர் ஒரு தட்டையான சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.


எதிரணி தலைவர் ஸ்மித் குறிப்பிட்டது போல பண்டின் ஒரு சிறப்பு அவர் எதிர்பாராத இடங்களில் ரன்களை அடிப்பார் என்பது. குறிப்பாய் கால்பக்கமாய் அவரது ஷாட்கள் தனித்துவமானவை. முன்பு off பக்கமாய் பந்தை வீசி பண்டின் பொறுமையை சோதிப்பார்கள். அவரும் வைடான பந்துகளை கால்பக்கம் அடிக்க முயன்று வெளியேறுவார். ஆனால் இன்றோ அவர் பவுலர்கள் ஓரளவு நேராய் வீசும் படி பொறுமை காத்தார்.



ரிஷப் பண்ட் முதிர்ந்து விட்டார். இதே கதியில் தொடர்ந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தோனியை நாம் அதிகம் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வார் அவர். அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...