Skip to main content

ரிஷப் பண்டின் முதிர்ச்சி


Rishabh Pant

நான் ரிஷ்ப பண்டின் விசிறி. இதற்கு முன் என்னை இந்தளவுக்கு கவர்ந்த ஒரு கீப்பர் பேட்ஸ்மேன், இடதுகை அதிரடிக்காரர் என்றால் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். அவருக்குப் பின் சிறிது காலம் யுவ்ராஜ் சிங்.


ரிஷப் பண்ட் உள்ளூர் ஆட்டங்கள் ஆடும் காலத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் தான். சில வீரர்கள் டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டத்தின் வேகத்தில் ஆடுவர். பண்டோ டி-20 தாளத்தில் டெஸ்டில் மேளம் அடிப்பவர். பத்து பவுண்டரிகள் அடிக்கும் நீளத்தில் விழும் பந்துகளை ஏன் வீணடிக்க வேண்டும் என பத்து சிக்ஸர்கள் அடிப்பார் அவர். ஒரு பேட்ஸ்மேன் 20 சிக்ஸர்கள் அடித்தால் 160-200 ரன்களை நான்கு நாள் போட்டிகளில் அடிக்கலாம் என உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்தவர். அப்படித் தான் அவர் தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்றார்.

 தில்லி அணிக்காக இரண்டாவது வருடம் ரஞ்சி கோப்பை ஆடிய போது பண்ட 48 பந்துகளில் ஜார்கண்டுக்கு எதிராக சதம் அடித்தார் - ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மிக வேகமான சதம் அது. அதே ஆண்டில் அவர் மகாராஷ்டிராவுக்கு எதிராய் 326 பந்துகளில் முச்சதம் அடித்தார். இத்தனையும் செய்து பண்ட் அதிர்வுகளை ஏற்படுத்திய போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன் பின்னர் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிகழவில்லை. தோனி அப்போது மோசமான பார்மில் இருந்தார் - ஆகையால் அப்போது தோனிக்கு ஓய்வளித்து பண்டு உள்ளே கொண்டு வரப்படுவது தோனிக்கு தேவையற்ற சிக்கலை, நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால் டெஸ்ட் கீப்பர் சாஹா காயப்பட, எதிர்பாராத விதமாய் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அயல்மண்ணில் ஆடினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நேரடியாய் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய பண்ட் ஒன்பது போட்டிகளில் 2 சதங்களும் 2 அரை சதங்களும் அடித்தார். ஆகையால், அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டு அது நிகழாத போது இந்தியா முழுக்க மட்டுமல்ல உலக அளவில் கூட ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் வாஹ்ன், ஆஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் போன்றோர் பண்ட் தேர்வாகாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர். பண்ட் நிச்சயம் தன் ஆட்டவாழ்வில் மூன்று உலகக்கோப்பைகளாவது ஆடுவார் என பாண்டிங் ஆருடம் கூறியுள்ளார். முன்னாள் தேர்வாளர் வெங்க்சார்க்கர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் அசருதீன் ஆகியோரும் பண்ட் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து கூறினர். இந்த கருத்துக்களின், எதிர்பார்ப்பின் நெருக்கடி காரணமாய் பண்ட் உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்களில் ஒருவராய் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இவ்வளவு ஆதரவு இருந்தும் ரிஷப் பண்டின் சில குறைகள் குறித்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. அவருக்கு ஆட்டச் சூழல் குறித்த புரிந்துணர்வு இல்லை, பொறுமையோ முதிர்ச்சியோ இல்லை, தேவையான நேரத்தில் அபத்தமாய் ஆடி அவசியமற்று வெளியேறுகிறார் என தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது. 2019 ஐ.பி.எல்லில் கூட இதற்கு பல உதாரணங்களை நாம் கண்டோம். ஆக, 22-04-19 அன்று தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராய் ஆடிய பண்ட் 36 பந்துகளில் 78 அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அது ஒரு சாதாரண இன்னிங்ஸ் அல்ல. பண்ட் ஒரு நிதானமான பொறுப்பான பேட்ஸ்மேனாக முதிர்ந்து விட்டார் என நமக்கு சொல்கிற இன்னிங்ஸ் அது.

192 எனும் இலக்கு அந்த சற்றே மெத்தனமான ஆடுதளத்தில் சற்று சிரமமானது. பண்ட் உடனடியாய் அவசரகதியில் வெளியேறி இருந்தால் தில்லி நிச்சயம் தோற்றிருக்கும். ஆனால் பண்ட் இம்முறை பொறுமையாய் இறுதி ஓவர் வரை நின்று, தோனி ஸ்டைலில், ஆடினார். வந்த உடனே சிக்ஸர்களை இலக்காக்காமல் பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ரன்கள குறி வைத்தார். முப்பது பந்துகளில் முப்பது ரன்கள் எனும் நிலை வந்த போதும் ஓவருக்கு ஒரு சிகஸர் போதுமென புரிந்து ஆடினார். சிக்ஸர் அடித்து விட்டு அடுத்து ஒற்றை ரன் எடுத்தார். கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட்ட போது அவர் ஒற்றை ரன்கள் எடுத்து ஆட்டத்தை தேவையின்றி சிக்கலாக்கவில்லை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பது ஆபத்தானது. ஆக இரண்டாவது பந்தில் அவர் ஒரு தட்டையான சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.


எதிரணி தலைவர் ஸ்மித் குறிப்பிட்டது போல பண்டின் ஒரு சிறப்பு அவர் எதிர்பாராத இடங்களில் ரன்களை அடிப்பார் என்பது. குறிப்பாய் கால்பக்கமாய் அவரது ஷாட்கள் தனித்துவமானவை. முன்பு off பக்கமாய் பந்தை வீசி பண்டின் பொறுமையை சோதிப்பார்கள். அவரும் வைடான பந்துகளை கால்பக்கம் அடிக்க முயன்று வெளியேறுவார். ஆனால் இன்றோ அவர் பவுலர்கள் ஓரளவு நேராய் வீசும் படி பொறுமை காத்தார்.



ரிஷப் பண்ட் முதிர்ந்து விட்டார். இதே கதியில் தொடர்ந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தோனியை நாம் அதிகம் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வார் அவர். அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...