கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தை கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” - இது “நிகழ்காலம்” எனும் போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா? கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது.
காலத்தை கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தை கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தை பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களை பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் - மிகை உணர்ச்சியை கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்து கேலி பண்ணும் மற்றொன்றும் - இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும் போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மை காலத்துடன் கட்சிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது.
மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல - அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்கு பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தை கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s kids ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s kids ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். Millennium kids ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளை புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லி தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தை கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குகுவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்று கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம்.
நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும்? கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளை பின்பற்றாதவர், மாட்டுக்கறிவை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தை பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில் தான் போய் முடியும்.
மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சனை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக்குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள்.
மதத்தை அதன் சாரத்தில் வெறுத்து கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண்.
நன்றி: உயிர்மை, ஆகஸ்ட், 2019
கருத்துகள்