Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு - சில குறிப்புகள் (1)


Plop: Notes on Heidegger நூல் வெளியீடு இன்று கிரைஸ்ட் பல்கலைக்கழக அரங்கு ஒன்றில் நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர், துறைமுதல்வர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நூலாசிரியர் மூவரான நாங்களும் கலந்து கொண்டோம். நூலை பதிவாளர் திரு. அனில் பிண்டோ வெளியிட துறை முதல்வர் திரு. ஜான் ஜோசப் கென்னடி வாங்கிக் கொண்டார். துறை முதல்வர் சுருக்கமாக வாழ்த்தி பேசி அமர்ந்தார். அடுத்து, தத்துவ அறிஞரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விட்ஜென்ஸ்டைன் பற்றி முனைவர் பட்டம் முடித்தவரும் அதே தலைப்பில் முக்கிய தத்துவ நூல் ஒன்றை எழுதியவருமான ஜோஸ் நந்திக்கரா சிறப்புரை வழங்கினார். நூலின் முக்கியத்துவம், அதன் நிறை, குறைகள் அனைத்தையும் விரிவாக சுவாரஸ்யமாக அவர் விவாதித்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இறுதியாக நூலின் ஆசிரியர்களான நேஹா அகர்வால் மற்றும் ஆயுஷ் தமது எழுத்தனுபவம், நூல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன்.


எங்கள் மூவருக்கும் இது உணர்ச்சிகரமான, ஆழமாக நிறைவளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. நான் ஏற்கனவே 22 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆனால் ஆயுஷுக்கும் நேஹாவுக்கும் இது முதல் புத்தகம். அது போக, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் தொடர்ந்து சந்தித்து தத்துவ நூல்களை விவாதித்து வந்துள்ளதன் ஒரு உச்சமாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. உரையாடல், அரட்டை, பரஸ்பர கரிசனம் என வளர்ந்த எங்களது உறவின் சின்னமாகவும் Plop நூல் உள்ளது. கடந்த வருடத்தின் துவக்கத்தில் நான் ஆயுஷிடம்நாம் ஜெர்மனிய தத்துவ அறிஞர் ஹைடெக்கர் குறித்து ஒரு நூல் எழுதுவோம். அதற்காக அவரது நூல்களை மட்டுமே இனி உன்னிப்பாக வாசித்து விவாதிப்போம்என சொன்ன போது என் நோக்கம் எங்களது அறிவார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ஒரு நினைவுச்சின்னமாக ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அது ஆயுஷுக்கு இறுதி வருடம். பல நல்ல நட்புகள் காற்றில் கரைந்து போயுள்ளதை நான் கண்டிருக்கிறேன். நம் நினைவில் ஒரு இனிய அத்தியாயமாக மட்டுமே உறவாடல் இருந்தால் போதாது, அதையும் தாண்டி மக்களுக்கு பயன்படும் ஒன்றாக எங்கள் உறவு அமைய வேண்டும், அதற்கு ஒரு புத்தகம் வெளியிடுவதே சிறந்த வழி என நான் நம்பினேன்.

ஆயுஷை எப்படி முதலில் சந்தித்தேன், எப்படி ஒரு தத்துவ வாசிப்பு குழுவை நாங்கள் தோற்றுவித்தோம், எப்படி நேஹா எங்கள் குழுவில் இணைந்தார், அதில் இருந்து எப்படி இந்த நூல் விளைந்தது என்பதை நான் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்

இயல்பியல், கணிதம் படிக்கும் முதல் வருட மாணவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்பித்து வந்தேன். அந்த மாணவர்களில் ஒருவனே ஆயுஷ். ஆனால் நான் அவனை வகுப்பில் சரியாக கவனித்ததில்லை; மிக அமைதியாக, கிட்டத்தட்டமறைந்தே”, இருப்பான் அவன். அந்த வகுப்பில் ஒருமுறை எதேச்சையாக நான் சாக்ரடீஸின் Dialogues நூலைப் பற்றி பேசினேன். அன்று வகுப்பு முடிந்த மதிய இடைவேளையின் போது ஆயுஷ் என்னைப் பார்க்க வந்து தனக்கு எழுதுவதில் விருப்பம் என்றான். பின்னர் அடிக்கடி என்னை வந்து பார்க்கும் அவன் எழுதுவதை எனக்கு காண்பிப்பான்
ஆரம்பத்தில் பொதுவான ஏதாவது ஒரு கருத்தை ஒட்டி அவன் எழுதிய குறிப்புகளாக அவை அமைந்திருந்தன. நான் என் பொதுவான கருத்துக்களை தெரிவிப்பேன். என் தரப்பில் இருந்து ஏதாவது ஒரு கேள்வியை எழுப்பி விவாதிப்பேன். .தா., அயன் ராண்ட் ஆயுஷுக்கு அப்போது பிடித்தமான சிந்தனையாளர். என்னால் ராண்டுடன் ஒப்ப முடியாத இடங்களை நான் பின்னர் தீராநதியில் ஒரு கட்டுரையாக வெளியிட காரணம் ஆயுஷுடன் அந்த காலகட்டத்தில் நடந்த தொடர் விவாதங்கள் தாம். அவனுடன் உரையாடும் போதெல்லாம் ஏதாவது ஒரு சவாலை எழுப்புவான். அதற்கு பதில் அளிக்க நான் சிந்திப்பேன், சிந்தித்ததை வைத்து எழுதுவேன். அதன் பிறகு நாங்கள் எங்கள் சந்திப்புகளை ஏதாவது ஒரு தத்துவ நூலை வாசிப்பதற்கு என வைத்துக் கொண்டோம். பெரும்பாலும் ஜெர்மானிய தத்துவ அறிஞர்களையே வாசித்தோம். நீட்சேயில் தொடங்கி ஹைடெக்கரில் வந்து சேர்ந்தோம். இந்திய அறிஞர்களில் ஜெ. கிருஷ்ணமூர்த்தியை படிக்க தொடங்கி அங்கிருந்து பகவத் கீதை, நாகார்ஜுனரின் மூலமத்தியாமிக காரிகை வரை வந்தோம்.
 நாங்கள் எப்போதும் தத்துவ அறிஞர்கள் அல்ல, வெளிநபர்களே என அடிக்கடி எங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அது இந்த வாசிப்ப்பையும் விவாதங்களையும் உற்சாகமாக, நெருக்கடியற்று வைத்திருக்க உதவியது. எங்கள் வாசிப்பும் விவாதமும் இருவரது பொதுவான எழுத்தை வளமாக்கினாலும், தத்துவத்தில் வேரூன்றி நாங்கள் எழுத துவங்கியது ஹைடெக்கர் நூலை திட்டமிட்ட போது தான்
இந்த பருவத்தில் ஆயுஷ் மனதளவில் மிகவும் முதிர்ந்திருந்தான். குறிப்பாக ஒரு ஜெயின் ஆலயத்தில் நடந்த இரு வார பேசாநோன்பு பயிற்சிக்குப் பின் திரும்பிய பின் அவன் மிகவும் மாறிப் போயிருந்தான். அவனது எழுத்திலும் பேச்சிலும் அப்படி ஒரு தீர்க்கம், ஆழம். அவன் இப்போது என்னை விட வேகமாய், தொடர்ச்சியாக ஹைடெக்கர் பற்றி எழுதிட அவனுடன் போட்டியிடும் மும்முரத்தில் நானும் ஆங்கிலத்தில் அதிகமாக எழுத தொடங்கினேன். இந்த எட்டு மாத காலம் தமிழில் என் எழுத்து சற்றே பின்தங்கியது, நான் தமிழில் பிரசுரிப்பதும் குறைந்து போனது; ஆனாலும் நாம் இந்த கட்டத்தை மிகவும் ரசித்தேன்.


இதன் பிறகு பல்கலைக்கழக விவாத நிகழ்வு ஒன்றில் நான் தத்துவம் பற்றி பேசினேன். குறிப்பாக சக்கர நாற்காலியில் பயணிக்கும் என் சுயமும் பைக்கை ஓட்டும் போது தோன்றும் சுயமும் எப்படி இருவேறாக இருக்கிறது, என் இருப்பு அப்போது எவ்வாறு உருமாறுகிறது, சிலநேரம் எப்படி ஒன்றை மற்றொன்றாக கருத நேர்கிறது என ஒரு உளவியல் பார்வையை ஹைடெக்கரின் தத்துவத்தின் அடிப்படையில் முன்வைத்தேன் (இது பின்னர் Plop நூலில் ஒரு அத்தியாயம் ஆனது). இதன் பிறகே தத்துவத் துறையை சேர்ந்த நேஹா என்னை சந்தித்து உரையாடினார். அதன் பிறகு ஒரு நாள் மதிய உணவுக்கு போய்க் கொண்டிருக்கும் போது பல்கலை வளாகத்தில் நேஹாவை எதேச்சையாய் சந்தித்தேன். “நாங்கள் ஹைடெக்கர் வாசிப்பு குழு என ஒன்றை நடத்துகிறோம். நீங்கள் ஏன் அதில் கலந்து கொள்ளக் கூடாது?” எனக் கேட்டேன். அப்படி ஒரு குழுவே நிஜத்தில் இல்லை. நானும் ஆயுஷும் சந்தித்து வாசிப்பதையே நான் போகிற போக்கில் அப்படி பெயரிட்டு அவரிடம் குறிப்பிட்டேன். நேஹா மிகுந்த ஆர்வத்துடன் எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டார். தோன்றும் போதெல்லாம் சந்தித்தும் வாசித்தும் வந்த நாங்கள் இப்போது மூவரான பிறகு ஒரு ஒழுங்குக்குள் வந்தோம். மதியம் ஒன்றில் இருந்து இரண்டு வரை தினமும் வாசிப்பது என முடிவெடுத்தோம். நேஹாவின் பங்களிப்பு, கருத்துக்கள், அபரித ஆற்றல் சட்டென ஒரு வெளிச்சத்தை எங்களதுஹைடெக்கர் வாசிப்பு குழுவுக்குகொண்டு வந்தது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...