![]() |
| ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்த அபத்தம் |
சமீபமாக பண்டின் விக்கெட் கீப்பிங் மிக மட்டமாக இருக்கிறது - அதுவும் இன்று நடந்த மே.இ தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விட்ட மூன்று விக்கெட்டுகள் தாம் இந்த 315 ஸ்கோருக்கு காரணமாகியது. அதுவும் சில பந்துகளின் போது அவர் பந்து செல்லும் திசைக்கு நேர் எதிர் திசை நோக்கி நகர்வது காண வேடிக்கையாக இருந்தது; ஒரு ஆட்டத்தில் பந்தை அவர் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடிக்க நடுவர் அதை நோ பாலாக அறிவித்தார். அதைக் கண்டு உலகமே சிரித்தது. பண்ட் ஒரு இயல்பான கீப்பரும் அல்ல; பந்தை கவனித்து அதன் திசையை கணித்து கால்களை நகர்த்தி முன்னேறுவது அவருக்கு வராது. நின்ற நிலையிலே கைகளைக் கொண்டு பிடிப்பதே அவரது பாணி. தட்டையான ஆடுதளங்களில் சாதாரண பந்து வீச்சுக்கு எதிராக இது எடுபடும் என்றால் சிக்கலான ஆடுதளங்களில் பந்து திரும்பிட ஸ்விங் ஆக அவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் ஆட்கள் பங்களாவில் பொருட்களைப் போட்டு உடைப்பதைப் போல கன்னாபின்னாவென கீப்பிங் பண்ணுகிறார் - கை வடக்கே போனால் கால் தெற்கே பறக்கிறது. எப்போது முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு வேறு. இப்போதைக்கு உலகின் மிக மட்டமான கீப்பர் பண்ட் தான். அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைப்பதே நம் அணியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
பண்டின் குறைகள் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவர் தனது கீப்பிங் பழுதுகளை சரி செய்ய பல மாதங்களோ சில வருடங்களோ கூட ஆகலாம். பண்டுக்குப் பதிலாக தோனியை கீப்பராக்கலாம்; ஆனால் அது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டும் தான். சாம்சனை முயலலாம், ஆனால் அவரும் கூட நல்ல கீப்பரல்ல. கெ.எல் ராகுலும் அப்படியே. இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதால் கீப்பிங் மிகவும் முக்கியமாகிறது. ஆகையால் அடுத்து ஒரு தோனி தோன்றும் வரை ஒரு நல்ல கீப்பர் சுமாரான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை ஆட வைப்பதே தோதானது (கெ.எஸ் பரத்தை முயலலாம்). அடுத்து, கேதார் ஜாதவ் உடனடியாய் ஓய்வுபெறுவதே அவருக்கும் இந்த உலகுக்கும் நல்லது.
அடுத்து பவுலிங். பும்ராவும் பாண்டேவும் திரும்ப வந்த பின் இந்தியாவின் பவுலிங் நேர்த்தி கூடும் என்றாலும் மைய ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறனை நாம் இழந்து விட்டோம். அதை மீட்க சாஹல் மற்றும் குல்தீப்பை இணைந்து ஆட வைக்க வேண்டும். இரண்டு ஆல்ரவுண்டர்கள் (பாண்டே, ஜடேஜா), இரண்டு கால்சுழலர்கள், இரண்டு வேகவீச்சாளர்கள் என்பதே சரியான பந்து வீச்சுக் கூச்சணியாக இருக்கும். கீப்பரையும் சேர்த்து ஐந்து பேட்ஸ்மேன்களையே ஆட முடியும். அந்த பட்சத்தில் பண்டின் இடத்தில் சாம்சனை ஆட வைக்கலாம். அல்லது ஒரு கால்சுழலரின் இடத்தில் ஒரு கீப்பரை கொண்டு வர வேண்டும். வேகவீச்சாளர்களுக்கான ஆடுதளம் என்றால் மூன்று வேகவீச்சாளர்கள் + பாண்டியா + ஜடேஜா என எண் எட்டு வரை பேட்டிங் வரிசையுடன் இறங்கலாம். தட்டையான ஆடுதளம் என்றால் ஒரு பேட்ஸ்மேன் + வேகவீச்சாளரைக் குறைத்து இரு கால்சுழலர்களை கொண்டு வரலாம்; ஆறு பவுலர்களுடன் ஆடலாம். என் 5-8 வரை கீழ்மத்திய வரிசையினர் அதிகமாய் ரன்கள் அடிப்பது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். அப்போது கீப்பர் எனும் புதிரை அவிழ்ப்பதே கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
