கேரளாவில் லிட் பெஸ்டிவலில் ராமசந்திர குஹா ராகுல் காந்தி பற்றி சொல்லி உள்ள கருத்துக்கள் பித்துக்குளித்தனமானவை - நடுநிலையாகப் பேச வேண்டும் என முடிவு பண்ணிக் கொண்டு அவர் அறத்தில் இருந்து பிறழ்ந்து பேசி இருக்கிறார்; ராகுலை தேர்தலில் ஜெயிக்க வைத்து நீங்கள் பெரிய தப்பு பண்ணி விட்டீர்கள் என அவர் கேரளத்து மக்களிடம் சொல்லி இருக்கிறார். ராகுல் அறிவுத்திறன் குறைந்தவர், சோம்பேறி, சதா வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறவர் என சாடி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் கண்டனத்துக்கு உரியது என குஹா நினைக்கலாம்; ஆனால் அதை விட பாசிசத்தின் பேயாட்டம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே பெரிய பிரச்சனை. குஹா இப்போது பின்னதற்கு முன்னதை பொறுப்பாக்குகிறார்; குடும்ப அரசியல் எனும் அவலமே நம்மை மோடி எனும் பாசிசஸ்டை நோக்கி இட்டுச் சென்றது என்கிறார்.
உண்மை அது அல்ல - பாசிச கூறுகள் நமது அரசியல் கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே இருந்து வந்துள்ளன. இன்று நாம் காணும் இந்துத்துவ பாசிசத்துக்கும் நவதாராளவாத பொருளாதாரத்தின் பெரும் எழுச்சிக்கும் ஒரு கன்ணுக்குப் புலனாகாத தொடர்பு உள்ளது. மக்கள் பெரும் திரளாக நகரங்களை நோக்கி படையெடுக்கும் ஒரு பொருளாதார சூழல் ரெண்டாயிரத்துக்குப் பின்பு ஏற்பட நகரங்களை மையமிட்டு ஒற்றை அடையாள அரசியலை முன்னெடுக்கும் இந்துத்துவம் எழுச்சி பெறுவது ஒரு ஆச்சரியம் அல்ல (ஆஷிஸ் நந்தி இதைப் பற்றி கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்). கிராமங்களில் யாருக்காவது கடும் மனச்சோர்வு ஏற்பட்டு விபரீதமாக நடந்து கொண்டால் அவரை பேயடித்து விட்டது என முன்பு சொல்லுவார்கள். அப்படியான ஒரு கற்பனைப் பேயைத் தான் குஹா இப்போது ராகுல் காந்தியின் வடிவில் உருவாக்குகிறார்.
இது அவர் நேற்று ஏதோ புதிதாக சொன்ன விசயம் அல்ல; அண்மைக் காலமாக அவர் பத்திரிகைகளிலும் இந்த கோணத்திலே காங்கிரஸை தாக்கி வருகிறார்; குஹா இந்த விமர்சனத்தை சமப்படுத்த காந்திய காங்கிரஸ் யுகத்தின் ஒரு லட்சிய நிலையைப் பற்றி பேச விரும்புவார். நேருவுக்கு இன்று அதிகம் பழி வருவதற்குக் காரணமே அவரது குடும்பத்தினர் வம்சாவளியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருப்பது தான் என அவர் சொல்லுவது இதற்கு ஒரு சான்று. இந்த வாதமே அபத்தமானது. ஏனென்றால் நேரு பழிக்கப்படுவது பொதுமக்களால் அல்ல, வலதுசாரி சங்கிகளால். அவர்கள் நேருவின் உயிருடன் இருந்த போது கூட அவரை வசைபாடித் தான் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தியும் கொல்லப்பட வேண்டியவர் என்றும் தான் கூறினார்கள். அதை நீங்கள் எந்த குடும்ப அரசியலை வைத்து நியாயப்படுத்துவீர்கள் குஹா என கேட்கத் தோன்றுகிறது. காந்தியும் நேருவும் இந்துத்துவ அரசியலின் எதிரிகள் என்பதே அவர்கள் தொடர்ந்து கரித்துக் கொட்டப்படுவதன் காரணமே அன்றி சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ அல்ல என்பது ஏன் குஹாவுக்குப் புரியவில்லை?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் நேரடியாக களத்தில் நின்று வழிநடத்தாதது நல்லதே என இப்போது படுகிறது; அது மக்களின் தன்னிச்சையான எழுச்சியாக அமைந்ததனால் தானே பாஜகவால் அதை எதிர்க்கட்சிகளின் சதி என சுலபத்தில் கடந்து போக முடியாமல் போனது. ஜெ.என்.யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் ராகுலோ சோனியாவோ நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவில்லை - இது தவறு என அந்த சந்தர்பத்தில் எனக்குத் தோன்றியது என்றாலும் காங்கிரஸ் அப்படி செய்திருந்தால் அதை பாஜக எதிர்க்கட்சியின் தேசவிரோதப் போக்கு என திசை திருப்பி இருப்பார்கள் என்பது எதார்த்தம். (மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பரவலாக பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.)
பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது குஹா அதில் கலந்து கொண்டு பெற்ற நன்மதிப்பை இப்போது இழந்து விட்டார்!

Comments