முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (2)

                                                   விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1)


சரி, நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் - மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் (இழப்புணர்வு, மிகுபுனைவு, கவித்துவம், மனசஞ்சாரம், இல்லாத மனிதர்கள் இருப்பது, நடக்காத சம்பவங்கள் நடப்பது) இந்நாவலிலும் உண்டு - ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன். முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற, யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத, அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன்; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன். நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி, மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான். அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள். அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள். அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கையை கற்பனை பண்ணினதே இல்லை. ஆகையால் மிகவும் தவித்துப் போகிறான். அவர்கள் அவனை விட்டு விலகுவதற்கு குறிப்பாக காரணமேதும் சொல்வதில்லை. அவனுக்கு ஒரு காரணம் தோன்றுகிறது - தனக்கு நிறம் இல்லை என்பதே அது.

 அவனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பப்பெயராக ஒரு நிறம் வருகிறது - ஷிரோ மற்றும் குரோ எனும் தோழிகளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை; ஆவோ மற்றும் அகாவுக்கு நீலம் மற்றும் சிவப்பு. நிறமற்றவனாக இருப்பதே தன்னை நண்பர்களுக்கு பிடிக்காமல் போகக் காரணம் என அவன் நினைக்கிறான். பல வருடங்களுக்குப் பின்னர் அவனுக்கு சாரா எனும் ஒரு காதலி அமைகிறாள். அவளது தூண்டுதலின் பெயரில் அவன் தன் நண்பர்களை ஒவ்வொருவராக சந்தித்து தன்னை அவர்கள் முன்பு நட்பிலிருந்து விலக்கியதன் காரணத்தைக் கேட்டறிகிறான். அப்போது அவர்கள் சொல்லும் காரணத்தில் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது - குரோவை அவன் பலாத்காரம் பண்ணினதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்களால் அதை ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை; ஆனால் குரோ அப்படி வற்புறுத்தி சொல்கிறாள்; மற்றொரு தோழியான ஷிரோவும் வற்புறுத்துகிறாள். மற்ற இருவரும் வேறு வழியின்றி குரோவின் மனநலனைக் கருத்திற் கொண்டு ஸ்குருவை தம் குழுவிலிருந்து வெளியேற்றுகிறார்கள். இதைக் குறித்து ஸ்குரு குரோவிடம் விசாரிக்கலாம் என எண்ணினால் அவள் சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாய் தெரிய வருகிறது. இறுதியாக அவன் ஷிரோவை சந்திக்க முடிவெடுக்கிறான். அவளிடத்து மட்டுமே குரோ தன் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்க முடியும். தான் குரோவை பலாத்காரம் செய்யவில்லை எனில் யார் அதை செய்தது? அவளைக் கொன்றது யார்? ஏன்? ஷிரோ திருமணத்துக்குப் பிறகு பின்லாந்தில் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாழ்கிறான். ஷிரோவை அவன் சந்திக்கிற காட்சிகளே நாவலின் இறுதிப் பகுதி.

பின்லாந்தில் ஷிரோ அவனிடம் மனம் விட்டுப் பேசுகிறாள் - தான் அவனை ஒரு காலத்தில் மனதுக்குள் காதலித்ததைப் பற்றி; ஒருவேளை குரோவுக்கும் அவனிடத்து ஈர்ப்பு இருந்திருக்கலாம், அந்த பொறாமை காரணமாய் அவள் இந்த பலாத்கார குற்றச்சாட்டை வைத்திருக்கலாம் என்பதை அவள் சொல்கிறாள். ஆனால் அவளுக்கு நடந்த அந்த தாக்குதல் உண்மை, அவள் கர்ப்பமுற்றிருந்தது உண்மை, அதன் பின்னர் கருக்கலைந்து அவள் தனிமையில் வாழ நேர்ந்ததும், உடல் நலிவுற்ற நிலையில் அவள் யாராலோ கொல்லப்பட்டதும் உண்மை என்கிறாள். அதன் பிறகு ஸ்குருவும் ஷிரோவும் தழுவிக் கொள்கிறார்கள். நீண்ட நேரம் அந்த நிலையில் நின்று இசை கேட்கிறார்கள்; தம்மால் அடைய முடியாது போன காதலை எண்ணி மனம் கசிகிறார்கள். பிரிகிறார்கள்

ஒரு மிகுபுனைவு த்ரில்லரைப் போலப் போகும் இந்த நாவலின் முடிவு தான் என்ன? குரோ ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதற்கு ஒரு விளக்கம் நமக்குத் தரப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்ல, அவளது துன்பங்களுக்கும் ஸ்குருவும் காரணமே என்பதை முராகாமி நுட்பமாக நமக்கு உணர்த்துகிறார். அது என்ன?

ஸ்குரு என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்றைக் கட்டமைப்பவன் எனப் பொருள். அவனது தொழிலும் கூட ரயில் நிலையங்களை அமைப்பது தானே. ஒன்றை கட்டமைக்கிறவன் ஒரு ஊடகமாக இருக்கிறான்; அண்ணாவின்செவ்வாழைகதையில் உற்பத்தி செய்கிறவனுக்கு அப்பண்டத்தைப் புசிக்க முடியவில்லை என்பதைப் போல. ரயில் நிலையம் இங்கு மற்றொரு உருவகம் - ரயில்கள் வந்து இளைப்பாறி, பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன, எல்லாரும் அந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் யாரும் அதை தம் சொந்த இடமாகக் கருதி அதனுடன் உறவைப் பேண முடிவதில்லை. ஸ்குருவின் ஆளுமையும் இந்த ரயில் நிலையத்தைப் போன்றதே. அதனாலே அவன் தன்னை நிறமற்றவன் என்கிறான். அவனுடன் இருப்பவர்களின் நிறமே அவனது நிறமாகிறது.

முராகாமியின் மற்றொரு நாவலான Norwegian Wood இந்த நாவலைப் புரிந்து கொள்ள அவசியம் என நினைக்கிறேன் - குறிப்பாக அந்நாவலின் நாயகன் வத்தநாபேவின் பாத்திரம். வத்தநாபே தனக்கென நிலைப்பாடு / நம்பிக்கை / இச்சைகள் இல்லாதவன். அவன் ஒரு கண்ணாடிக்கோப்பையைப் போல. அவனுக்குள் ஊற்றப்படும் திரவமே அவனாகி விடுவான். ஆரம்பத்தில் வத்தநாபேயின் நெருங்கிய நண்பனான கிஸுக்கி தன் காதலியான நவோக்காவுடன் இருக்கையில் வத்தநாபே அவர்களுடன் இருப்பான். இருவருடைய காதலுக்கும் அவன் ஒரு மனத்திரையாக அமைவான். அதன் பிறகு கிஸுக்கி தற்கொலை பண்ணிக்கொள்ள, நவோக்காவுக்கு வத்தநாபேவின் துணை (ஒரு மாற்றுக்காதலனாக) அவசியமாகிறது. அதுவரை அவர்களின் காதலின் கண்ணாடியாக இருந்தவன் இப்போது காதலனாகிறான், கிட்டத்தட்ட ஒரு நாடகத்தில் பாத்திரம் ஒன்றை ஏற்பதைப் போல. ஒரு மனிதன் இவ்வாறு தானாக அல்லாமல் மற்றொருவனாக இருக்க நேரும் உளவியல் தேவையை ஜப்பானிய மரபில் இருந்து முராகாமி வரித்துக் கொள்கிறார் என நினைக்கிறேன். இப்படி ஆகும் போது ஒருவன் எதிர்கொள்ளும் மனநெருக்கடி தான் அவரது பல நாவல்களின் மையச்சிக்கல்.
 நவோக்காவும் இந்த நெருக்கடியினால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஒரு சானிடோரியம் செல்கிறாள். வத்தநாபே இதனால் உடைந்து போகிறான். அவன் வாழ்வில் அடுத்து மற்றொரு பெண் வருகிறாள் - மிதோரி. இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் கிஸுக்கியிடம் ஒரு மாற்றுக்காதலனாக இருக்க முடியாமல், மிதோரியின் அசல் காதலனாக இருக்க இயலாமல் அவன் தவிக்கிறான். கிஸுக்கி பின்னர் தற்கொலை பண்ணிக்கொள்ள வத்தநாபே ஒரு பித்தனைப் போல ஜப்பான் முழுக்க அலைகிறான். இப்போது கிஸுக்கியுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த ரெயிக்கோ எனும் மத்திய வயதுப்பெண்ணின் உதவியால் அவன் மிதோரியைப் புரிந்து கொள்கிறான் - அவளிடமும் உடலுறவு கொள்கிறான்; அதுவே அவனைக் காப்பாற்றுகிறது. இறுதியில் அவன் மிதோரியிடம் வந்து சேர்கிறான். அவள் கேட்கிறாள், “நீ இப்போது எங்கிருக்கிறாய்?” (இடம் இங்கு மனத்தின் ஒரு உருவகம்). வத்தநாபே இதைக் குறித்து சிந்திப்பதுடன் நாவல் முடிகிறது. ஒருவர் மற்றொருவரிடன் இடத்தை வாழ்வில் எடுத்துக் கொள்வதை ஒரு தவிர்க்க இயலாத நெருக்கடியாக முராகாமி காண்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்ள?

லக்கான் எனும் உளவியலாளர் ஒரு குழந்தை தன் அப்பாவை முதலில் காண்கிறது, ஆனால் சற்று வளர்ந்த பின் அது உலகில் தன் அப்பாவை நிகர்த்த வேறு பலரையும் காண்கிறது, அப்போது அப்பா குறித்த அதன் மனச்சித்திரம் விரிவடைகிறது, தான் காணும் ஒவ்வொரு அதிகார மையத்தையும், வசீகரமான, ஆதிக்கமான, ஆர்வமூட்டும் மனிதர்களையும் அப்பாவைக் காணும் ஒரு கண்ணாடியாக அக்குழந்தை பயன்படுத்துகிறது, உலகம் முழுக்க தன் இறுதி மூச்சு வரை அது தன் அப்பாவையே காண்கிறது என்கிறார். இதனாலே நாம் ஒரே சமயம் அதிகாரத்தை வெறுத்தபடியே அதனிடத்து ஒரு ஈர்ப்பையும் கொண்டிருக்கிறோம். (இப்படி லக்கான் பிராயிடின் ஈடிபல் காம்பிளக்ஸை மறுவரையறை பண்ணினார்) உறவுகளில் மொழி இப்படி ஒரு கண்ணாடியாக ஒருவரை மற்றொருவராக பிரதிபலிக்கிறது; மொழியில் புழங்கும் போது நம் வழி ஒருவர் மூன்றாவதொருவரைக் காண்கிறார். யாரும் யாரிடத்தும் இல்லாமல், எல்லாரும் எல்லாரிடத்தும் இருக்க முடிவது இப்படித்தான்.
 வத்தநாபேவும் ஸ்குருவும் இத்தகைய கண்ணாடிகள்; அவர்களின் துயரமே தம்மை அடுத்தவர் பயன்படுத்துவதைப் போல தம்மால் அடுத்தவர்களைக் கொண்டு உலகை பிரதிபலித்து அறிய முடியாது என்பது. அவர்கள் தாம் நிறமற்றவர் என உணர்வதை, அப்படி இருப்பது குற்றமில்லை என தெளிவை, உறவாடலில் பிறரை ஒரு கண்ணாடியாகக் கொண்டு உலகைக் காண தாமும் கற்பதை முராகாமி இந்த நாவல்களில் சித்தரிக்கிறார். (ஒருவர் மற்றொருவரை கண்ணாடியாக பயன்படுத்துவதை முராகாமி தன் நாவல்களில் உடலுறவு சித்தரிப்புகள் வழி காட்டுகிறார்.)

Colorless Tsukuru நாவலின் பலவீனம் அதன் இறுதிப் பகுதி தான் - ஸ்குருவால் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு கண்டடையும் ஒரு தீர்வை முராகாமி (“நார்வேஜியன் வுட்நாவலில் போல) கிளைமேக்ஸில் தீவிரமாக காத்திரமாக உருவாக்கித் தருவதில்லை

மற்றபடி, ஒரு தீவிரமான கவித்துமான வாசிப்பு சஞ்சாரத்துக்கு இந்த நாவல் ஒரு கச்சிதமான பயணச்சீட்டு.   


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆனால் கிஸுக்கியிடம் ஒரு மாற்றுக்காதலனாக இருக்க முடியாமல், மிதோரியின் அசல் காதலனாக இருக்க இயலாமல் அவன் தவிக்கிறான். கிஸுக்கி பின்னர் தற்கொலை பண்ணிக்கொள்ள வத்தநாபே ஒரு பித்தனைப் போல ஜப்பான் முழுக்க அலைகிறான். இப்போது கிஸுக்கியுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த//
கிஸுக்கி - நவோக்கா என்று இருக்கவேண்டும் அல்லவா ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...