“கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் எனக்குப் பிடிக்கவில்லை - “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் இருந்து மாறுபட்டு எதுவும் இதிலில்லை. ஒளிப்பதிவு, இசை என ரொம்ப சாதாரணமாக, அமெச்சூராக இருக்கிறது. ஆனால் ஜெஸ்ஸியின் பாத்திரம் வழக்கமான சிக்கல்களும் தன்னை மறைத்து வேறொன்றாய் முன்வைக்கிற தளுக்கும் கொண்டதாக இருக்கிறது; தனக்காக துன்பப்படும் கார்த்திக் மீதான அவளது பிரியமும் பயமும் இப்போதும் இருக்கிறது என இப்படம் சொல்கிறது.
ஜெஸ்ஸியின் காதல் ஒருவித சுயவதை என நினைப்பேன், இந்த குறும்படம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கார்த்திக் ஆண்மையுடன் திமிறும்போது அவனை மேலும் சீண்டிப்பார்க்கிற, அவன் பிடிவாதம் கொள்ளும் போது, துணிச்சலுடன் நடக்கும் போது (alpha male) அவனுக்கு உடன்படுகிற ஜெஸ்ஸி அவன் சற்றே பின்வாங்கும் போது, தயங்கி யோசிக்கும் போது (beta male) அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள், பின்னர் அவனுக்காக ஏங்கவும் தன்னையே வதைக்கவும் செய்கிறாள் என்பதே “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் நான் அவதானித்த உளவியல். (அப்படம் பற்றி நான் எழுதிய போதெல்லாம் இதையே தான் சொல்லியிருக்கிறேன்.) இப்படத்தில் கார்த்திக் முழுக்க முழுக்க beta maleஆக இருக்கிறான். தன்னிரகத்துடன், தயக்கத்துடன் வாழ்க்கை குறித்த நிறைய குழப்பங்களுடன். நியாயமாக ஜெஸ்ஸி அவனை இப்போது ஒரு குழந்தையையைப் போன்றே நடத்துகிறாள். அவன் “ஐ லவ் யூ சொல்லு” எனும் போது அது ஒரு குழந்தை முத்தம் கேட்பது போல அவளுக்குத் தோன்றுகிறது. “ஐ லவ் யூ சொன்னா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுருவாங்களா?” என அவனை கலாய்க்கிறாள். அவன் வேறொரு மனநிலையில் கெத்தாகப் பேசியிருந்தால் அவள் அவனை நடத்தும் விதமே வேறு.
கார்த்திக்கின் இந்த அவதாரம் 96 படத்தின் ராமை நினைவுபடுத்துகிறது என்பது ஒரு ‘துயரம்’ (ராமை எனக்குப் பிடிக்காது. அவன் ரொம்ப மட்டமான beta male.). கௌதம் மேனன் கார்த்திக் பாத்திரத்தை இன்னும் சற்று சிக்கலானதாக, எதிர்பாராமை கொண்டதாக, உரையாடலினூடே சிறு திருப்பங்கள் (அவன் ஆல்பாவில் இருந்து பீட்டாவுக்கும், இதிலிருந்து அதற்குமாக உருமாறுகிற தன்மையில்) அமைத்து உருவாக்கி இருக்கலாம். இப்படம் சூடு பிடித்திருக்கும். ஆனால் இப்போதைக்கு கார்த்திக்கை பார்த்து ஜெஸ்ஸி மட்டுமல்ல நாமும் தான் “போய் உன் வேலையைப் பாரு” என சொல்லும்படி இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன் “கார்த்திக் டயல் செய்த எண்” படத்தை பகடி செய்த எழுதிய கவிதை இதை விட நன்றாக, சமகாலத்தன்மையுடன் உள்ளது - அதில் வரும் கார்த்திக் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த, காதல் வெறும் விளையாட்டு எனும் சமயோஜித புத்தி கொண்ட பின்நவீன காதலனாக இருக்கிறான். அவனுக்கு காதலி இருக்கிறாள். கார்த்திக்கிடம் முன்பு ஜெஸ்ஸி நடந்து கொண்டதைப் போன்றே அவள் இப்போது கார்த்திக்கை நடத்துகிறாள். அவளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் அவளே எதார்த்தம் என்பதால் தன்னை போனில் அழைத்து ஆறுதலுக்காக, பழைய காதல் நினைவில் குளிர்காய அழைக்கிற ஜெஸ்ஸியை அவன் புரிந்து கொண்டு இறுதியில் அவளை பிளாக் செய்தும் விடுகிறான்.
அந்த கார்த்திக்கும் இந்த கார்த்திக்கும் வேறுவேறுதான் - அவன் இவனாக முடியாது. அவன் அவன் 90களின் குழந்தை. எனக்கு இவனைப் பிடிக்கவில்லை.
Comments