முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாக் டவுனும் எடைக்குறைப்பும்




இந்த லாக்டவுனில் சிலர் பிரபலங்கள் மூச்சைப் பிடித்து டயட் இருந்து எடை குறைத்து அந்தஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனேபடங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றில் பரபரப்பை ஏற்படுத்த இன்னும் பல பிரபலமல்லாதவர்களும் கூட தங்கள் உணவுப்பழக்கம், எடை குறைப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறை எடுத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஏன் இந்த திடீர் லட்சியம், திடீர் தன்முனைப்பு, வெறி எனக் கேட்டால் அவர்கள் பொதுவாக சொல்வதுலாக்டவுனில் வெளியே செல்லத் தேவையில்லை, வீட்டு உணவை உண்ணலாம், கட்டுப்பாடாய் இருக்கலாம், அது எளிதாக இருக்கிறதுஎன்பது. இதை ரிவர்ஸில் பார்த்தால் வெளியே அதிகம் செல்வது, அதனாலே வெளி உணவை கட்டுப்பாடின்றி புசிப்பது எடை அதிகமாகக் காரணமாகிறது.

 இந்த தரப்பு எல்லாருக்கும் பொருந்தி வராது - என்னை எடுத்துக் கொள்ளுங்கள்; லாக்டவுனில் என் எடை அதிகரித்து விட்டது. இத்தனைக்கும் நாம் மிகக் கட்டுப்பாடாக சாப்பிட்டேன். ஏனென்றால் லாக்டவுனுடன் நான் அசைவது அப்படியே நின்று விட்டது. (அதன் பிறகு நான் கிரித்திகாதரனின் பரிந்துரைப்படி நனிசைவ  டயட் இருந்து எடையை குறைத்தது வேறு கதை.) இன்னும் சிலருக்கு வேறு பல சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாக வெளியே போவது நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது எனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் அது சில சுவாரஸ்யமான முடிவுகளைத் தருகிறது:


1) பஜ்ஜி, சொஜ்ஜி, பர்கர் என டீ வேளையில் தின்றவர்கள், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் பிரியாணியை முழுங்கியவர்கள், ஓட்டலில் அதிக எண்ணெய், மைதாமாவால் செய்யப்பட்ட பண்டங்களை அதிகமாய் உண்டவர்கள் இப்போது அதெல்லாம் கிடைக்காமல் வாழ்க்கையில் முதன்முதலாக எளிய வீட்டு உணவுடன் திருப்திப்படுகிறார்கள். (சிலர் வெளியே வாங்கி வந்து கொறிப்பது வேறு விசயம்.) எனில் வெளி உலகம் நம்மை அதிக எடை போடச் செய்து பல மெட்டோபோலிக் வியாதிகளுக்கு வழிவகுக்கிறதா?


2) இந்த eating out கலாச்சாரமே இந்தியாவில் கடந்த இருபது வருடங்களில் வந்தது. அமெரிக்கர்களுக்கு இது வெகுமுன்பே அறிமுகமாகி விட்டது. Fast Food Nation என்ற தனது நூலில் எரிக் ஸ்குலோசர் எப்படி அமெரிக்காவில் (முன்பிருந்த ரயில் பாதைகளை ஒழித்து) பரவலாக சாலைகள் அமைக்கப்பட்டது, எப்படி அது கார்களை எல்லாருமே வாங்குவதற்கு முன்கூறாக அமைந்தது, இதனால் மக்கள் அதிகமாய் காரில் பயணிக்க துரித உணவு கலாச்சாரம் அமெரிக்க அன்றாட வாழ்க்கையில் நுழைந்தது என விளக்குகிறார். இந்த துரித உணவுப் பழக்கம் அமெரிக்கர்களில் கணிசமானோரை விரைவில் அதிக எடை கொண்டவர்களாக, மெட்டோபோலிக் நோய்களால் அவதிப்படுகிறவர்களாக மாற்றியது. பின்னர் இவர்களுக்கு சிகிச்சை அளித்த, மருந்துகள் கண்டுபிடிக்க பல புதிய ஆய்வாளர்கள், கார்ப்பரேட் மருத்துவர்கள் தோன்றினார்கள். அதாவது நோயைத் தோற்றுவித்ததும் அதற்கு மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சைகளை வழங்கி கோடானுகோடி மதிக்கத்தக்க வணிகமாக மருத்துவத்தை மாற்றினது வரை ஒவ்வொன்றுக்கும் பேராசை மிக்க கார்ப்பரேட்டுகளே காரணம். ஆம், போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் வளர்ச்சிக்கு அவசியமே - ஆனால் மக்கள் கார்களை அதிகம் வாங்கும்படி நெருக்கடி அளிக்க பொதுப்போக்குவரத்தை ஒழித்து, அடுத்து வெளியே அதிகம் இருக்க நேரும் மக்களை தூண்டிலிட்டு சரியாக துரித உணவுகளுக்கு அடிமையாக்குவது எந்த வகையான வளர்ச்சி? கட்டற்ற சந்தை வணிகத்தின் மிகப்பெரிய சிக்கல் இது. இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளில் இதே வரலாறு தான் கார்ப்பரேட்டுகளால் நிகழ்த்தப்படுகிறது


3) இங்கு ஏழைகளும் மத்திய வர்க்கமும் அதிகம், மக்கள் தொகை அமெரிக்காவை விட பல மடங்கு பெரிது என்பதால் நம்மை அவ்வளவு துரிதமாக அடிமையாக்க முடியவில்லை. இங்கு மத்திய வர்க்கத்துக்கு ஏற்றபடியே வெளி உணவுக் கலாச்சாரம் தோன்றியது; அது நிச்சயம் அமெரிக்க உணவுப்பண்பாட்டுக்கு இணையாக நம் உடல் நலத்தை சீரழிக்கிறது எனலாம். இன்று பல மாணவர்கள் காலை உணவாக சமோசா சாப்பிடுவதை நான் வியப்பாகப் பார்க்கிறேன். முன்பு என் ஊரில் சில வீடுகளில் தான் சர்க்கரை இருக்கும், பலர் கருப்பட்டி பயன்படுத்துவார்கள். இன்றோ நாம் முன்பை விட நூறு மடங்கு அதிக சர்க்கரையை உணவுகள் வழி சிறு சிறுக ஒரே நாளில் எடுத்துக் கொள்கிறோம். எண்ணெய்யை விட சர்க்கரையே மிகப்பெரிய உயிர்க்கொல்லி என இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவே நமது இன்றைய சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு என இதயத்துக்கு உலை வைக்கும் பல வியாதிகளுக்குக் காரணம் என்றால் இதற்கு யார் பொறுப்பாக வேண்டும் - சமூகமா தனிமனிதனா?

4) நாம் ஆரோக்கியம் பற்றி அதிகமும் பரிந்துரைகளுக்கு நாடுவது மருத்துவர்களை. அவர்களோ அமெரிக்க கார்ப்பரேட் கலாச்சாரத்துக்கு அடிமைகள். சமூக கட்டமைப்புகள் தனிமனிதனின் பழக்கங்களை வடிவமைப்பதைப் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்கள்குறைவாக அளவாக சாப்பிடுங்கள்எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஆனால் ஊரே தவறாக சாப்பிடும் போது நீங்கள் மட்டும் எப்படி சரியாக உணவருந்த முடியும்? மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா? “பிரியாணி சாப்டுவோமா?” என நண்பனோ காதலியோ கேட்கும் போது ஒரு தனிமனிதன்இல்லை நான் காய்கனிகள் மட்டும் சாப்டுறேன்என சொல்ல முடியுமா? உணவு மனிதனை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான குறியீடு. ஒன்றாக சாப்பிட்டே வளர்ந்தவர்கள் நாம்

5) ஒருவர் பசிக்கிறது என வெளியே கிளம்பினால் ஆரோக்கியமான உணவுக்கடைகள் என எதுவுமே அவர் கண்ணில் படாது. கிடைப்பதைத் தானே அவர் சாப்பிட முடியும். அரசு ஒரு பக்கம் உடல் நலத்துக்கு ஊறான உணவுகளை ஊக்கப்படுத்தி விட்டு, அதை நம்பி பல தொழில்கள் செயல்படும் நிலையை ஏற்படுத்தி விட்டுஎதை சாப்பிடுவது என்பது உங்கள் பொறுப்புஎன்பது பொதுவிடத்தில் சாராயத்தை விற்றுவிட்டு குடிக்காதீர்கள், குடி உடலுக்கு, சமூகத்துக்குக் கேடு என விளம்பரம் செய்வதைப் போல. ஒரு உதாரணம் சொல்கிறேன் - சென்னையில் டாஸ்மாக் உள்ளதால், தனியார் பார்கள் குறைவு என்பதால், டாஸ்மாக் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே இயங்கும் என்பதால் அங்கு மக்கள் குடிப்பதில் ஒரு சிறிய கட்டுப்பாடு உள்ளது (இந்த நெருக்கடியை ஒற்றை வரியாக வைத்து தானேஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” எடுக்கப்பட்டது.) ஆனால் பெங்களூரில் தனியார் தான் மதுவை விற்கிறது, கடைகள் இரவு பன்னிரெண்டு வரை, சில நேரம் அதற்கு மேல் கூடத் திறந்திருக்கும். ஒரே தெருவில் மூன்று, நான்கு மதுக்கடைகள் இருப்பது சாதாரணம். இதோடு பப்கள், அவை கொண்டாடப்படும் ஒரு போலிக் கலாச்சாரம் வேறு. இங்கு சென்னையை விட மக்கள் ஐம்பது மடங்கு அதிகம் குடிக்கிறார்கள் என என் அனுபவத்தில் சொல்வேன். ஏனென்றால் இங்கே மதுவை வாங்குவது ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதைப் போல. இந்த லாக் டவுனின் போது கூட உடற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்களைத் திறக்காத அரசு எவ்வளவு அவசரமாக மதுக்கடைகளைத் திறந்தது பார்த்தீர்களா?


6) ஒரு பொறுப்பான அரசு மது, துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் எனச் சொல்ல மாட்டேன். ஆனால் இவற்றின் மீது பல மடங்கு அதிக வரியைப் போட்டால் ஆரோக்கியமற்ற பல உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதை மக்கள் குறைப்பார்கள். மைதா விலையை கிலோ முப்பதில் இருந்து 200க்கு உயர்த்தலாம். இதையே ரீபைண்ட் ஆயிலுக்கும் சொல்லலாம். அதே போல துரித உணவுக் கடைகளை பெரிய மால்களில் மட்டுமே வைக்க வேண்டும் என சட்டமிடலாம். பொரித்த தின்பண்டங்களை பொதுவிடங்களில் விற்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரலாம். பதிலாக வேக வைத்த, பாரம்பரிய உணவுகளைக் கொண்டு வரச் சொல்லலாம். அதே நேரம் ஆரோக்கியமான உணவுகளுக்குத் தேவையான பொருட்களை பெருமளவில் விலைகுறைக்கலாம். இதை செயல்படுத்தினால் பத்தே ஆண்டுகளில் கணிசமான மத்திய, மேல் மத்திய வர்க்கத்தினரின் உடல் நிலை சீராகி விடும், நாம் மருந்துகளை உண்பது, அறுவை சிகிச்சை செய்வது, டயட் இருப்பது எல்லாம் தேவையிருக்காது

7) இந்த விஷச் சூழலால் அதிகம் பாதிக்கப்படுவது மத்திய வர்க்கத்தினர் தான். அண்மையில் துர்க்கா ஸ்டாலினின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் - அதில் அவர் கலைஞர் தான் வாழ்ந்திருந்த போது வெளி உணவுகளையோ உட்கொள்ள மாட்டார், அவர் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உணவருந்துவதை பழக்கமாகவே வைத்துள்ளார்கள் என்றார். பல பணக்காரர்கள் இப்படி புத்திசாலித்தனமாக கவனமாக இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் மூன்று மணிநேரங்கள் பயணித்து, பத்து மணி நேரம் வேலை பார்க்க நேரும் மத்திய வர்க்க நிலையில் இருப்பவர்களுக்கு இது சுலபம் அல்ல

8) அதாவது இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரம் நம்மை அதிகமாய் பயணிக்க, அதிக நேரம் வேலை செய்து, அதிகமான பதற்றத்தில் இருக்கச் செய்து அதில் இருந்து விடுதலையாக துரித உணவுகளைப் புசிக்கவும் மது அருந்தவும் செய்கிறது. இது நம்மை மெதுவாகக் கொல்லும் விடம்


இந்த லாக் டவுன் காலம் இந்த உண்மையை நம் பொட்டில் அறைந்து புரிய வைத்திருக்கிறதுஇந்த பெருந்தொற்று முடிந்ததும் நாம் மீண்டும் அந்த விஷச்சூழலுக்குள், மோசமாய் உண்ணும் சமூக அழுத்தத்துக்குள் தள்ளப்படுவோம். டாக் டவுன் விலக்கப்பட்டதும், எந்தெந்த உணவுகளை எப்படி விற்கலாம், துரித உணவுகளை பொதுச்சமூகத்துக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உடனே கிடைக்காமல் செய்வது, போக்குவரத்து இடர்களைக் குறைத்து, மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே வேலை பார்க்கும்படி செய்வது, பாரம்பரியமில்லாத உணவுகளின் விலைகளை அதிகப்படுத்தி அவற்றை மக்களிடம் இருந்து விலக்குவது போன்றவற்றை அரசு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்கள், பொதுமக்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...