தல்ஸ்தாயின் வாழ்க்கையை தலைகீழாக்கினால் தஸ்தாவஸ்கியின் வாழ்க்கை வருகிறது. என்ன ஒரே வித்தியாசம் இளமையின் செல்வந்த வாழ்க்கை என்றுமே தஸ்தாவஸ்கிக்கு கிடைக்கவில்லை. ஆனால் தல்ஸ்தாய் தன் ஐம்பதுகளுக்குப் பின்னால் நகரத் தொடங்கிய தூய அன்பு நிலை, வறுமையின் எளிமை, எளிய மக்களுடனான ஒன்றிணைந்த வாழ்க்கை, சக மனிதனை எந்த தடையுமின்றி நேசிப்பது, உச்சபட்ச தீமை சூழ்ந்த நிலையிலும் அன்பின், பரிவின் வழியாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வது தஸ்தாவஸ்கிக்கு தன் இருபது, முப்பதுகளிலே வாய்த்தது. அதற்காக அவர் தல்ஸ்தாயை போல முயற்சிக்கவில்லை, வாழ்க்கை அவரை கடும் இருட்டில், துன்பத்தில், பேரிழப்புகளின் பள்ளத்தாக்கில் தள்ளியது. தஸ்தாவஸ்கி அளவுக்கு துரதிஷ்டங்களாய் ஆட்பட்ட மற்றொரு எழுத்தாளன் ஐரோப்பிய வரலாற்றில் இருக்க முடியாது. அந்த நரக வாழ்க்கையின் ஊடாக அவர் உலகமே இன்றளவும் போற்றும் பெரும் நாவல்களை எழுதினார். மானுட அறம், தீமை, தனிமனித இருப்பு, சமகால வரலாறு, ஆண்-பெண் உறவு, தீவிர போராட்ட அரசியலின் மற்றொரு பக்கம், குற்றவியல், மெய்யியல், உளவியல் என தஸ்தாவஸ்கி தன் காலத்தின் ஆன்மாவைத் தொட்ட பல பிரச்சனைகளைப் பற்றி தனித்துவமாக ஆழமாய் எழுதினார்.
தல்ஸ்தாய் புறவுலகின் எழுத்தாளர் என்றார், தஸ்தாவஸ்கி அக உலகின் எழுத்தாளர். தல்ஸ்தாய் உளவியல் எதார்த்தவாத புனைவெழுத்தாளர் என்றால் தஸ்தாவஸ்கி மீ-எதார்த்த எழுத்தாளர்.
தல்ஸ்தாய் எதையும் நிதானமாக, சமநிலையுடன் அணுகுபவர் என்றார் தஸ்தாவஸ்கி எதையும் உச்சநிலையில், பித்தின் மறுஎல்லையில் வைத்துப் பார்ப்பவர்.
தல்ஸ்தாயின் உலகின் அன்றாடங்களின் தடங்கள் பதிந்த பொருண்மையான உலகம் என்றால் தஸ்தாவஸ்கியினுடையது அன்றாடத்தில் இருந்து விலகிய அதே நேரம் சமூக சீரழிகளைப் பேச மறக்காத ஒரு கனவுலகம்.
தல்ஸ்தாய் ஒழுக்கம், நம்பிக்கைகள், மனநிலை, விழுமியங்கள், தத்துவம் என எதிலும் ஒரு இருமையை கட்டமைப்பவர், அதன் பின் அந்த ஒருமையில் உள்ள உண்மைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து சமநிலையாக்குபவர். ஆனால் தஸ்தாவஸ்கி இந்த இருமையை தொடர்ந்து உடைப்பவர்; இருமைகளற்ற ஒரு மகத்தான மெய்யியல், அறத்தால் கட்டப்பட்ட உலகைக் காட்டுபவர். உ.தா., அவர் ஒரு விலைமகளை கர்த்தருக்கு நிகரான ஒரு பெண்ணாகக் காட்டும் போது நமக்கு அது மிகையென்றோ கலகம் என்றோ படாது. எந்த சரி தவறும் இல்லாத ஒரு கவித்துவ நிலையை, உணர்ச்சியின் கொதி நிலையில் தொடர்ந்து இருக்கும் மனிதர்களின் வாழ்வை அவர் காட்டினார். ஆகையால் தல்ஸ்தாயைப் போல தஸ்தாவஸ்கி ஒரு போதகராக நமக்குத் தோன்ற மாட்டார்.
பத்தொன்பதாம்-இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய புகழின் வெளிச்சத்தைப் பெற்ற தல்ஸ்தாயின் படைப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் மெல்ல வாசகர்களின் கவனத்தில் இருந்து நழுவிச் செல்ல, அந்த இடத்தை இன்று தஸ்தாவஸ்கி அடைந்திருக்கிறார். தல்ஸ்தாய் மற்றும் தஸ்தாவஸ்கி வாசகர்களுக்கு இடையில் யார் மேல் எனும் வாதம் ஒரு போதும் முடிவடையாதது.
தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும் தாம் வாழ்ந்த காலத்தில் பரஸ்பரம் அறிந்து கொண்டிருந்தனர், பரஸ்பரம் மதிப்பு கொண்டிருந்தனர். தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” தஸ்தாவஸ்கிக்கு மிகவும் பிடித்த படைப்பாக இருந்தது. தல்ஸ்தாய் ரயில் நிலையத்தில் தன் இறுதி இரு நாட்களில் இருக்கும் போது அவர் கூட எடுத்து வந்திருந்த நாவல் தஸ்தாவஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள்”. அவர் மரணிக்கும் போது கையில் இந்த நாவல் இருந்தது.
தல்ஸ்தாயை சந்திக்க தஸ்தாவஸ்கி அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் முயன்றார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஒவ்வொரு முறையில் இந்த வாய்ப்புகள் தட்டிப் போனது. இறுதியாக அவர் தல்ஸ்தாயை அவரது பண்ணைக்கு சென்று சந்திக்க நினைத்த போது அவர் தனித்து சமூகத்திடம் இருந்து விலகி வாழ்வதாக சொல்லப்பட தஸ்தாவஸ்கி தன் முடிவை மாட்டிக்கொண்டார். பின்னர் தஸ்தாவஸ்கி 1881யில் இறந்து போன போது தல்ஸ்தாய் “நான் அவரை சந்திக்காவிடிலும் அவரது ஆன்மாவை நான் அறிந்திருந்தேன். அந்த விதத்தில் அவர் என் நண்பரே” எனச் சொன்னார்.
சரி, நாம் ஆரம்பித்த இடத்துக்கே வருவோம் - இப்படி வானத்துக்கு கீழ் அனைத்து விசயங்களையும் எழுதக் கூடிய மேதைகளை, போதகர்களாக, ஆய்வாளர்களாக, கருத்தாளர்களாக, சமூக விமர்சகர்களாக, (தல்ஸ்தாயைப் போல) ஒரு பெரும் சமூகத்தையே, காந்தியடிகளைப் போன்று பெரும் தலைவர்கள் உருவாகக் காரணமாக நாவலாசிரியர்கள் இருந்த காலம் முடிந்து போனது. இதைப் பற்றி தனது Writer on Holiday எனும் கட்டுரையில் ரொலண்ட் பார்த் பேசும் போது எழுத்தாளன் எனும் பிம்பம் அல்லது இருப்பு பதிப்பாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்கிறார். இதைக் கொண்டு புத்தகங்களுக்கு, புனைவுக்கு என தனி மதிப்பொன்று உருவாக்கப்பட்டது, ஒரு நாவலைப் போன்று நாவலாசிரியனும் ஒரு புனைவாக, தொன்மமாக கட்டமைக்கப்பட்டான் என்கிறார். இதற்கு உதாரணமாக அவர் எழுத்தாளன் விடுமுறையின் போது வெளிநாட்டுக்கு செல்லும் புகைப்படங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் எழுத்தாளன் எழுதியபடி இருக்கிறான். ஆனால் சாதாரண மக்களோ பயணங்களின் போது உல்லாசமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள். இந்த மக்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் போது எழுத்தாளன் தன் வீட்டுக்கு சென்று விடுமுறையில் இருப்பான், ஆனால் அவன் அப்போதும் தன் நாவலில் வேலை செய்து கொண்டிருப்பான். இதை தொடர்ந்து பத்திரிகைகளில் சித்தரிப்பதன் வழி நாவலாசிரியன் குறித்த ஒரு வசீகரமான பிம்பம் உருவாக்கப்பட்டது என்கிறார் பார்த்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவல் என்பது வணிக நாவல், இலக்கிய நாவல் என தெளிவாக வரையறுக்கப்பட்டது. முன்பே இந்த வரையறை இருந்தாலும் இந்த நூற்றாண்டில் தான் இலக்கிய நாவல் ஒரு சிறுபான்மையினர் படிக்கும் கலை வடிவமாகவும், வணிக நாவல் பல கோடி பேர் துய்க்கிற ஒரு தற்காலிக பொழுதுபோக்காகவும் இருந்த வித்தியாசங்கள் அழிக்கப்பட்ட்டு கலையும் வணிகமும் வேறுவேறுதான், ஆனால் ஒன்றும் தான் எனும் இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம். இதன் விளைவு இரண்டிலும் ஒரு சிறப்புத்தேர்ச்சி (specialization) வந்து விட்டது. வாசிப்பு வாழ்க்கையை மாற்றியமைக்கும், சமூகத்தில் புரட்சியை, பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும், தீமையை ஒழிக்கும் எனும் நம்பிக்கைகள் தளர்ந்து விட்டன. இன்று இலக்கிய நாவல் ஒரு பர்கர், ஐஸ் கிரீம் போல ஒரு பண்டமாகி விட்டது (ஆனால் வாசிப்பனுபவம் மாறவில்லை.) இலக்கிய நாவலாசிரியனின் இடமும் வெகுவாக சுருங்கி விட்டது. ஆகையால் தான் இன்று நாவல்கள் ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்களில் எழுதப்படுவதில்லை. ஒரு நாவலுக்குள் கதையோட்டத்துக்கு நேரடியாக தொடர்பில்லாத எதையும் இன்று கொண்டு வர முடியாது. பலகுரல் தன்மையுடன், சிக்கலான களத்துடன் அமைக்கப்படும் பின்நவீன நாவல்களில் கூட இன்று ஒரு வேகம் வந்து விட்டது. தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” போன்ற நாவல்களை நாம் இன்று படிப்பதோ எழுதுவதோ இல்லை. சமகால நாவல்களில் இருந்து தல்ஸ்தாயின் செவ்வியல் நவீன நாவல்களுக்கு பின்னோக்கி செல்லும் வாசகர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள்