உங்களுக்கு லக்கான் பிடித்திருக்கிறது என்றால் அடுத்து டெலூஸ் (Deleuze), ஸிஸெக் (Zizek) போன்ற உளவியலாளர்களைப் படிக்கலாம். டெலூஸ் நமது சுயம், அனுபவம் போன்றவை பின்நவீன காலத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவியல், உளவியல், ஜியாமெட்ரி, எந்திரவியல் என பல துறைகளில் இருந்து கருத்தாக்கங்களை எடுத்து விளக்கினார். ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அப்புத்தகம் என்பது எழுதப்பட்டதா அல்லது எழுதப்படும் நிலையில் இருப்பதா? புத்தகம் என்றால் அட்டையிட்ட, குறிப்பிட்ட பக்க எண்ணிக்கை கொண்ட, அச்சிடப்பட்ட ஒரு பொருள். ஆனால் நாம் ஒரு புத்தகத்தை திறந்து புரட்டு போதும், அதை படிக்க ஆரம்பிக்கும் போது அவை இருவேறு புத்தகங்களாக உள்ளன. முதல் நிலையில் அது வெறும் காகிதத் தொகுப்பு, அது என்னவென்றால் புத்தகம் என அடையாளப்படுத்தலாம். ஆனால் இரண்டாம் நிலையில் அதை வாசிக்கும் போது அதனுள் இருக்கும் குறிப்பான்களைக் (ஆப்பிள் என்றால் அதன் ஒலி அல்லது தோற்றம் ஒரு குறிப்பான், ஆப்பிள்தன்மை அதன் உள்ளீடு - ஒரு குறிப்பீடு) கொண்டு புரிந்து கொள்ள முயல்கிறோம். ஒரு காகம் வருகிறது, பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் ... காகம் என்பது ஒரு குறிப்பான் தான். ஆனால் அதற்கு என சாரம் இல்லை. ‘காகத்தன்மை’ இல்லை. இருக்கிறது, ஆனால் அது என்னவென நமக்குத் தெரியாது. நாம் காகத்தைப் பார்க்கிறோம், அதைப் பற்றிப் படிக்கிறோம், ஆனால் அது காகம் என நாம் அறிவது அதைப் பற்றின பல மனப்பதிவுகளுடன் ஒப்பிட்டே. ‘ஒரிஜினல் காகத்தை’ யாருமே பார்த்ததில்லை. அப்படியே ‘வடை சுடும் பாட்டியின்’ ஒரிஜினலை நாம் பார்த்ததில்லை. ஒரு காகம் ஓராயிரம் காகங்களைப் பிறப்பிக்கிறது. இதை டெலூஸ் மீள் நிகழ்தல் (repetition) என்கிறார். இப்படி ஒன்று மீள மீள நிகழும் போது அது ஒன்று போல இருப்பதில்லை. இதை அவர் வேற்றுமை (difference) என்கிறார். ஒரு விசயம் திரும்பத் திரும்ப ஒன்று போல் அல்லாமல் செய்யப்படுவதே அதன் இருப்பு என்கிறார். அதனால் தான் ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அது ஏற்படுத்தும் உணர்வலைகள், கிளர்த்தும் எண்ணங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. அவை புத்தகத்தை தொகுத்து ஒற்றை அடையாளமாக மாற்றத் தடையாக உள்ளன. விமர்சனம் எனும் பெயரில் நாம் அதன் வேறுபாடுகளை மறந்து, அந்த நூல் நிச்சயமற்று நிலையற்று மீள மீள நிகழ்வதை மறந்து, ஒற்றை அர்த்தம் ஒன்றை வடிக்கிறோம். உ.தா., ஹெரால்ட் புளூம் இப்படி மேற்கத்திய இலக்கியத்தில் உள்ள மகத்தான, ஈடு இணையற்ற படைப்புகளை cannon எனும் பெயரில் தொகுத்து எழுதியிருக்கிறார். இது உண்மையை ஒளித்து பொய்யை நிறுவும் ஒரு முயற்சி தான்.
அடுத்து ஸிஸெக் - இவர் லக்கான், மார்க்ஸியம், ஹெகல் என கலந்து கட்டி சமூக அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பவர். சமகால உளவியல்-தத்துவ உலகில் சூப்பர் ஸ்டார்.
இருத்தலியல் உளவியல் என ஒரு துறையும் உண்டு - இதில் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது எனும் புள்ளியில் இருந்தே விவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். மனிதனின் துன்பங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்குக் காரணம் வாழ்க்கை அர்த்தமற்றது, அதனால் நிச்சயமற்றது, அதனாலே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது எனும் தொடர் விளைவுகளே. பௌத்தம் இந்த தொடர் சங்கிலியை உடைத்தால் மனிதன் விடுதலை அடைவான் எனும் போது, உளவியலில் இந்த சங்கிலிகளை ஓரிடத்தில் நிலையாக அறைந்து வைக்க ஒரு ஆணி - ஒரு அர்த்தம் - அவசியம் எனப் பேசினார்கள். குறிப்பாக யூதர்களின் வதைமுகாம்களில் மக்கள் மரணம் கண்முன்னால் தோன்றும் போது எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து முன்னகர்ந்தார்கள் எனும் கேள்வியை வைத்தே இது தோன்றியது. இந்த உளவியல் வகையை தோற்றுவித்தவர் பெயர் விக்டர் பிராங்கிள் [Viktor Frankl] (1905-97). இவர் வதைமுகாம் ஒன்றில் சிறைவைக்கப்பட்டு மீண்டு வந்தவர். உளவியலாளரான இவர் எப்படி அந்த வதைமுகாமினர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர்ந்தார்கள், ஏன் தற்கொலை செய்யவில்லை எனக் கேட்டார். இம்மக்கள் வாழ்க்கை குறித்த பல நம்பிக்கைகளை அன்றாடத்தில் கற்பனையாய் உருவாக்கி அவற்றை நம்பினார்கள் எனக் கண்டுப்பிடித்தார். நவீன காலத்தில் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு அவநம்பிக்கையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து அளித்தாலே சரியாகி விடும் எனக் கூறினார். இந்த முறைமையை logotherapy என்றார்கள். இவரது முக்கிய நூல்
Man’s Search for Meaning.
அடுத்து இதே உளவியலை இருத்தலிய, சமூகவியல், மார்க்ஸிய பொருளாதாரத்தின் பாதையில் வைத்து அலசியவர் எரிக் புரோம் (Erich Fromm) [1990-80]. இவர் வரலாற்றின் போக்கை நிலப்பிரபுத்துவம், முதலீட்டியம் எனப் பிரிக்கிறார். நிலப்பிரபுத்துவ காலத்தில் மக்கள் அடிமைகளாய், அறியாமையில் இருந்தாலும் அவர்கள் தாம் யார் எனும் நிச்சயத்துடன் இருந்தார்கள் (அதாவது லோகோதெரப்பியில் வரும் இருத்தலின் அர்த்தம்). ஆனால் முதலீட்டிய சமூகத்திலோ சமூதாயங்கள் உடைந்து, கிராமத்தில் இருந்து மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தனிமனிதர்கள் தோன்றுகிறார்கள். இந்த தனிமனிதர்கள் நிலையான ஒரு குறிப்பிட்ட ஊரை சேர்ந்தவன், சமுதாயத்தை சேர்ந்தவன், தொழில் அடையாளத்தைக் கொண்டவன் என தம்மைக் குறிக்க முடியாது. அவர்கள் ஒரு எந்திரத்துடான தம் உறவால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள், அவர்கள் பணத்தின் மதிப்பால் மதிப்பிடப்படுவார்கள். ஆனால் மார்க்ஸ் “மூலதனம்” நூலில் பணத்தின் மதிப்பு என்பது அரூபமாய் இருப்பதாலே அது ஏற்றத்தாழ்வுகளுக்கு, அநீதிக்கு வழிவகுப்பதாய் சொல்கிறார். அதே போல தொழிலில் இருந்து தொழிலாளி அந்நியப்படுவதைப் பற்றியும் (உழைப்பின் மதிப்புக்கான நியாயமான பங்கு மறுக்கப்படுவதால்) அவர் பேசியிருக்கிறார். இது மனித மனத்தில் ஏற்படுத்தும் நிச்சயமின்மைகளை, அதனாலான அவநம்பிக்கையை, அழுத்தத்தை, நெருக்கடியைப் பற்றி விரிவாக அலசியவர் புரோம். ஆனால் மார்க்ஸில் இருந்து சற்று விலகி அவர் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வை ஒரு சுதந்திர வாழ்வாகக் கண்டார்; இங்குதான் இவரது உளவியல் இருத்தலியல் தத்துவத்தின் பாதையை எடுக்கிறது. இவரது ரொம்ப பிரசித்தமான நூல் Fear of Freedom (இது Escape of Freedom என்றும் அறியப்படுகிறது). இதன் தலைப்பே வித்தியாசமானது, இவரது கோட்பாட்டின் அடிப்படையைக் காட்டுவது. மனிதன் சுதந்திரத்தை விரும்பினாலும் அது அவனுக்கு ஊறானது, அவன் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறான், இந்த அச்சமே அவனை மனச்சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது என்றார்.
கிறித்துவத்தில் உள்ள மன ஊக்கம் / மனத்திட்பம் (will) எனும் கருத்தாக்கத்தையே அவர் உளவியலில், இருத்தலியலில் வைத்து வித்தியாசமாக அர்த்தப்படுத்துகிறார். நான் எப்படி வாழ வேண்டும், என்ன தேர்வுகளை எடுக்க வேண்டும் எனும் கேள்விகள் கடும் பதற்றத்தை ஏற்படுத்துபவை. ஒரு எழுத்தாளனுக்கு தன் கதையின், நாவலின் ஒரு அத்தியாயத்தை எழுதும் முன் எப்படி எழுதப்போகிறோம் எனும் தேர்வு கடும் நெருக்கடியை அளிக்கும். நுகர்வோனாக நாம் அனுதினமும் நுட்பமாக ஒரு பதற்றத்தில் இருக்கிறோம். அந்த பதற்றத்தை பின்னர் ஒரு இன்பமாக மாற்றிக் கொள்கிறோம். திருமணம் பெண்கள் பலருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம். அதற்குப் பதிலாக யார் வசமாவது முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து விடலாம் என புரோம் சொல்வதில்லை; மாறாக 1) வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணி அதன் முன் நம் தேர்வுகளை ரத்து பண்ணிடலாம் என்கிறார்; 2) நெருக்கடியின் காரணம் இதுவே எனப் புரிந்ததும் மனம் லகுவாகி விடும் என்கிறார்.
எரிக் புரோமின் எழுத்துக்கள், குறிப்பாக “விடுதலை நோக்கிய அச்சம்” எனக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்த புத்தகம். நான் கடுமையான சோர்வில் இருக்கும் போதெல்லாம் புரோமின் சிந்தனைகளை அசைபோடுவேன், மனம் லேசாகி விடும்.
ஆனால் தத்துவத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் புரோம் எழுத்திலுள்ள குறைகள், போதாமைகள் தென்பட்டன, அவர் சற்று அலுக்கத் தொடங்கினார் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும், இன்றும் எனக்கு ஒரு மன இறுக்கம் ஏற்பட்டால் நான் நாடுவது அவரது நூலையே.


Comments