தமிழ் ஹிந்துவின் நடுப்பக்க இலக்கிய ‘அரசியல்’ பற்றி காலச்சுவடு கண்ணன் தொடர்ந்து எழுதி வருகிறார். ஒருதலைசார்பாக அதன் ஆசிரியக் குழுவினர் உள்ளார்கள் என்பது அவரது பார்வை.
இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்:
1) குழு அரசியல்: இலக்கியத்தில் குழு அரசியல் நல்லதே என்பது என் பார்வை (ஹிந்து நடுப்பக்கத்தில் சில எழுத்தாளர்கள் புறக்கணிப்படுகிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் தப்பில்லை.) ஏனெனச் சொல்கிறேன். எந்த ஆசிரியக் குழுவுக்கும் தனக்கான அழகியல் பார்வை, அரசியல், தனக்கான இலக்கிய மதிப்பீடு, தேர்வு மதிப்பீடு இருக்க வேண்டும். அப்போதே ஆழமான தீவிரமான விவாதங்கள் சாத்தியமாகும். காழ்ப்புணர்வும், குறுகின மனப்பான்மையும் நிச்சயம் கூடாது. ஆனால் அதே நேரம் ஒரு வலுவான நம்பிக்கையும் பார்வையும் கொண்டுள்ளது, அதை வைத்து என்ன மாதிரியான கட்டுரைகள், யாரைப் பற்றி வர வேண்டும் என முடிவெடுப்பதில் தப்பில்லை.
சிறுபத்திரிகையாளர்கள் தம்முடன் நெருக்கமான நட்பில் இருக்கிற, தாம் அதிகமாய் மதிக்கிற சீனியர்களுக்கு கூடுதலாக இடமளிப்பார்கள். இது ஒரு சிறுபத்திரிகை ‘மரபு’. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஹிந்துவில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் இதுவே நடக்கும். இப்போது புகார் சொல்லும் கண்ணன் நாளை ஹிந்து தமிழ் நடுப்பக்க எடிட்டரானால் என்ன நடக்கும்? அவர் தான் தொடர்பில் இருக்கும், தன் பத்திரிகையான காலச்சுவடில் எழுதுகிறவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பார். இது தெரியாமல் இருக்க ஒன்றிரண்டு வெளியாட்களையும் ‘மேடையேற்றி சால்வை போர்த்துவார்’. அவரால் மனுஷ்யபுத்திரனையும், ஜெயமோகனையும் அப்போது அவரால் அங்கு எழுத வைக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் காலச்சுவடிலும் ஒரு ‘இலக்கியக் குழுவாதம்’ உள்ளது என்பதை இருபது வருடங்களுக்கு மேலாக அதைப் படித்து வருகிறவன் என்கிற முறையில் என்னால் சொல்ல முடியும். அவர்களாக யாருக்கும் தடைச்சுவர் எழுப்புவதில்லை என்றாலும், ஒரு சிலரே திரும்பத் திரும்ப எழுதுவது நடந்து விடுகிறது.
நான் இவ்விசயத்தில் புகார் சொன்னதில்லை. அப்படி ஒரு நியாயமான ‘ஒரு பக்கசார்பு’ உள்ளது ஒரு பத்திரிகைக்கு தனித்துவமான அடையாளத்தை அளிக்கும்,
இதுவே ஆழமான விவாதங்களை முன்னெடுக்கும் என நினைக்கிறேன்.
தமிழ் ஹிந்துவில் சீனியர், ஜூனியர் எழுத்தாளர்கள் பலரும் - என்னையும் உள்ளிட்டு - எழுதியிருக்கிறோம். படைப்புகளை வாங்குவதில் ஹிந்துவுக்கு பாகுபாடுகள் இல்லை. ஆனாலும் தமிழ் ஹிந்துவின் நடுப்பக்கத்தை கவனிக்கும் கவிஞர்களுக்கு விக்கிரமாதித்யனும், வண்ணதாசனும் முக்கியமெனில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தப்பில்லை.
ஆனாலும் ஒரு பிரச்சனை வருகிறது.
2) தமிழ் ஹிந்து ஒரு சிறுபத்திரிகை அல்ல. அது ஒரு பொதுவான, வெகுமக்கள் படிக்கிற நாளிதழ். அங்கு கராறான இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் கூடாது. ஆனால் இந்த சிறுபத்திரிகை ஆட்களை நீக்கி விட்டு அங்கு நீங்கள் இலக்கிய வாசிப்போ நிலைப்பாடோ இல்லாத பொதுவான எடிட்டர்களைக் கொண்டு வந்து எல்லாரும் புழங்குகிற கடற்கரையாக ஒரு நடுப்பக்கத்தை மாற்றினால் என்னவாகும்? அது அந்தப் பகுதியை கலவை சாதமாக ஆக்கி விடும். அதற்கென ஒரு தனித்துவம் இல்லாமல் பண்ணி விடும்.
இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமரசம், ஒரு நடுநிலை சாத்தியமா? அவசியமா? இல்லை. ஆனால் ஒரு நிதானம், சமநிலை இருக்கலாம். அது போதும். எந்த சார்பும் இருக்கக் கூடாது என நினைத்து ஒரு பத்திரிகை முகமழிந்து போய்விடக் கூடாது.
காலச்சுவடு கண்ணனின் தொடர்தாக்குதல்கள் நியாயமற்றவை. காலச்சுவடு எழுத்தாளர்களைப் பாராட்ட, முன்னெடுக்க ஏன் தமிழ் ஹிந்து நடுப்பக்க பயன்படுத்தப்படவில்லை என அவர் கேட்கிறார் (அவர் தரும் விடுபட்ட எழுத்தாளர்களின் பட்டியல் இப்படித்தான் இருக்கிறது.) வண்ணதாசனைக் கொண்டாடுகிறீர்கள் ஏன் அம்பையை கைவிட்டீர் எனக் கேட்கிறார். இது ஒரு ஆணாதிக்க மனப்பான்மை என வைரமுத்துவுக்கு தமிழ் ஹிந்துவினர் அண்மையில் வெளியிட்ட சிறப்பு நடுப்பக்கக் கட்டுரைகளை வைத்து குற்றம் சாட்டுகிறார்.
இப்படி இலக்கியத்தில் நாம் அரசியலைத் தேடுவதானது எங்கள் ஊரில் சொல்வதைப் போல மலத்தில் அரிசியைத் தேடுகிற வேலையாகி விடும். வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டு வந்தால் அவரை இருட்டுக்கொட்டடியில் அடைத்து விட வேண்டுமா? முச்சந்தியில் நிறுத்தி கல்லெற வேண்டுமா? ஆம் என்பது பதில் எனில், ஒரு எழுத்தாளனின் சமூக ஒழுக்கம் அல்லது அதன் மீதான நம்பிக்கையும் பிம்பமுமே இலக்கிய வரையறை ஆகிடும். இதுவும் சரிதான் எனில், ஒருவர் சமூகத்தில் ஒழுக்க நீளத் எனப் பெயரெடுத்த ஒருவர் மட்டுமே - அவர் எதையும் எழுதாவிடினும் - மிகச்சிறந்த எழுத்தாளர் என அர்த்தமாகி விடும். எனில் யாரும் எழுதவே வேண்டாமே?
நுண்ணுணர்வு இல்லாதவர்களே சின்மயி போன்றோரின் சுயநல நோக்கிலான அரசியலை வைத்து இலக்கியவாதிகளை சிலுவையில் அறைவார்கள்.
வைரமுத்துவைக் கொண்டாடினால் தப்பு? ஏனென்றால் சின்மயி போன்ற சில மாமிகளுக்கு அவரைப் பிடிக்கவில்லை. வண்ணதாசனைக் கொண்டாடினால் அது குழுவாதம். இனி ஒருவரைப் பாராட்டுமுன்னர் பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான பிற படைப்பாளிகளைப் புகழ்ந்தும் ஒரு நாலு வார்த்தை எழுதி விட வேண்டுமா?
அரசியல் சரிதன்மையா இலக்கிய நம்பிக்கைகளா? நான் இலக்கியத்தின் பக்கமே நிற்பேன்.
ஏனென்றால், தனிப்பட்ட முறையிலும் எனக்கு கலவை சாதம் பிடிக்காது!

கருத்துகள்