இன்றைய ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடக்கிறது. பஞ்சாப் அணியின் தலைவர் ராகுல். தில்லிக்கோ ஷ்ரேயாஸ் ஐயர். இருவருமே அனுபவம் குறைவான அணித்தலைவர்கள். இருவரின் அணிகளும் கிட்டத்தட்ட சமமான திறன்களும் அனுபவமும் படைத்தவை. ஐ.பி.எல் வரலாற்றில் தில்லியை விட பஞ்சாப் அணி மேலான வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
60-40 என்கிற விகிதத்தில் தில்லி வெல்லவே வாய்ப்பதிகம் என்பது என் கணிப்பு - சென்னை தான் ஜெயிக்கும் என்கிற எனது நேற்றைய கணிப்பு பலித்தது. இன்று என்ன நடக்கும்? ஏன் தில்லி ஜெயிக்கும் என்கிறேன்?
முதலில் மட்டையாட்டம்:
அபுதாபியின் ஆடுதளம் சற்று மெத்தனமானது, குறைவான பவுன்ஸ் கொண்டது. அங்கு வேகமான பவுன்ஸான ஆடுதளங்களில் நன்றாக ஆடும் (கர்நாடகாவில் அத்தகைய ஆடுதளங்கள் அதிகம் என்பதால்) கர்நாடகாவைச் சேர்ந்த, தற்போது பஞ்சாபுக்காக ஆடும் ராகுல், கருண் நாயர், மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், பூரன் போன்றோர் எப்படி சமாளிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. இந்த ஆடுதளச் சூழலுக்கு சமாளிக்க வாய்ப்பதிகம் உள்ள பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் சர்பராஸ் கானும், கிறிஸ் கெய்லுமே. ஒருவேளை ராகுல் தனது அனுபவத்தை பயன்படுத்தி தன் ஆட்டபாணியை மாற்றி ரன் அடிக்கலாம்.
தில்லிக்காக ஆடும் ஷ்ரேயாஸ், தவன், ஹெட்மையர் ஆகியோருக்கு இந்த ஆடுதளம் ஏற்றதாக இருக்கும். அவர்கள் சுழல்பந்தை நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதும் முக்கியம். பிருத்வி ஷாவால் எந்தளவுக்கு இங்கு ஆட முடியும் என்பது சந்தேகம். பண்ட் பொறுமையுடன் ஆடுவாரா? ஆனால் ரஹானேவால் இங்கு சரிவர ஆடுவதும் கிட்டத்தட்ட அசாத்தியம். அவரை ஆட வைத்தால் அது தவறான முடிவாகும்.
அடுத்து பந்து வீச்சு:
பஞ்சாப் அணியில் சுழலர்கள் முருகன் அஷ்வின் மற்றும் முஜீப் ரஹ்மான். ஆல்ரவுண்டர் சுழலர்கள் கவுதம், ஹூடா, மேக்ஸ்வெல் ஆகியோர். இவர்களில் விக்கெட் எடுக்கக் கூடியவர் முஜீப். ஆனால் அவர் தன் பந்தின் நீளம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். முருகன் அஷ்வின் எனக்குப் பிடித்த சுழலர் என்றாலும் அவரது வேகமான் கால்சுழல் சற்று குறைநீளத்தில் விழக் கூடியது. அது இந்த ஆடுதளத்தில் எடுபட வாய்ப்பு குறைவு. ஆல்ரவுண்டர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மேக்ஸ்வெல்லும் கவுதமும் சற்று நேர்த்தியாக வீசி ரன்களை குறைக்கலாம், ஆனால அதற்கு முதலில் பிரதான சுழல் / வேக வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நீஷம் ஆடக் கூடாது, ஆடினால் பந்து வீசக் கூடாது, நிச்சயமாய் அடிவாங்குவார். போரல, கோட்டரல் போன்றோரின் வேகப்பந்து வீச்சும் எடுபடுமா எனத் தெரியவில்லை.
ஆனால் தில்லி அணியிலோ அஷ்வின், மிஷ்ரா ஆகியோர் அபாரமான, அனுபவமிக்க சுழலர்கள். லேமிச்சேன், அக்ஸர் பட்டேல் வேறு இருக்கிறார்கள். வேகவீச்சாளர்களில் கீமோ பால், மோஹித் ஷர்மாவின் பந்து வீச்சு இங்கு எடுபடும். இஷாந்த் தன் அனுபவத்தை பயன்படுத்தி சரியான நீளத்தில் வீசினால் எடுபடும். ஆனால் ரபாடாவை இங்கு ஆட வைப்பது ஆபத்து. இந்த ஆடுதளச் சூழலுக்கு ஏற்ற பந்து வீச்சு தில்லியிடமே உள்ளது.
இதனால் தான் இது தில்லிக்கான ஆட்டம் என்கிறேன்.
பார்க்கலாம்!


கருத்துகள்