இடம்: காவல் நிலையம்
வேலை: முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பது
“யோவ் ரிப்போர்ட் ரெடியா?”
“ஆமாங்கய்யா. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிரலாம். நீங்க சொன்ன மாதிரி தற்கொலைன்னே போட்டுட்டோம்.”
“அந்த பொண்ணோட அம்மா என்னவோ தனக்கு எல்லாம் தெரியுங்கிற மாதிரி என் பொண்ணை அடிச்சு கொன்னுட்டாங்கன்னு கேமரா முன்னாடி ஒப்பாரி வைச்சுது. அப்போ நாம என்னா .... ? அசிங்கமா போச்சுய்யா. முதல்ல, தற்கொலைக்கு தூண்டினவங்கன்னு அந்த அம்மா மேலேயே கேஸைப் போடுறோம்.”
“ஐயா சொந்த அம்மாவா?”
“ஆமா, அப்போ தான் அது படிஞ்சு வரும். இனி மீடியாவுக்கு போக மாட்டேன்னு சமரசம் பண்ணிக்கும். அப்புறமா கழற்றி விட்டுரலாம்.”
“என்ன காரணமுய்யா?”
“அவள் கட்டிக்க இருந்தாளே ஹேம்நாத் அவனை விட்டு பிரிஞ்சு வந்திருன்னு இந்தம்மா தினமும் மெண்டல் டார்ச்சர் கொடுத்திருக்கு. ஓக்கேவா?”
“சரிய்யா.”
“அடுத்தது, தற்கொலைக்கு தூண்டின பிரதான குற்றவாளி நம்பர் 2 அந்த ஹேம்ராஜ்.”
“அதுக்கு என்ன காரணமுய்யா?”
“இதே தான் - என்னை கண்டிப்பா நீ கட்டிக்கணமுன்னு இந்தாளு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறான். எப்படி?”
“சூப்பர் ஐயா. ஆனா நம்பும்படியா இல்லியே?”
“அந்தம்மாவை மட்டும் குற்றவாளி ஆக்கினா நாம் இந்தாளு கிட்ட பணத்தை வாங்கிட்டு தப்பா ரிப்போர்ட் கொடுக்குறோமுன்னு வந்திரும். அதான் அந்தாளையும் குற்றவாளி ஆக்குறோம். குற்றம் சாட்டுறவனும், சாட்டப்பட்டவனும் இப்போ உள்ள வந்தாச்சு. எப்படி?”
“கோர்ட்டில....?”
“அதான் தற்கொலைன்னு ஆயிருச்சில்ல, அப்புறம் இவங்களை கோர்ட் விடுதலை பண்ணுனா என்னய்யா?”
“சூப்பருங்கய்யா.. ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.”
“கேளு.”
“தற்கொலைன்னா என்னய்யா?”
“தானே தன்னை கொலை பண்ணிக்கிறது.”
“ஐயா நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சிருங்க.”
“சொல்லுய்யா கேட்போம்.”
“தன்னையே கொல்லுறதும் கொலைதான்.”
“ஆமா, தற்கொலை.”
“ஆமாங்கய்யா. அப்படி கொல்லுறவங்க தானே கொலையாளி? இப்போ முதல் குற்றவாளி அந்த கொலையாளி தானே. அதனால இந்த ரிப்போர்ட் படி பிரதான குற்றவாளி எண் 1 சித்ரா தான். எப்படிங்கய்யா?”
“அடடா, நான் கூட இப்படி யோசிக்கலையே? மூணு பேரு சம்மந்தப்பட்டிருக்காங்க. அந்த அம்மாவும், ஹேம்நாத்தும் தப்பிச்சா கூட இந்த பொண்ணை விடக் கூடாது.”
“விட மாட்டேனுய்யா. சித்ரா கொலைக் குற்றவாளி துப்புத்துலக்கு. விரைவில் கைதுன்னு நியூஸ் கொடுத்திருவோம்யா.”
“முதல்ல போய் டீயும் வடையும் வாங்கிட்டு வா.”

Comments