ஒரு காலத்தில் எனக்கு இன, மொழி அடிப்படையிலான தேசியங்கள் மீது ஒவ்வாமை இருந்தது. அதை ஒரு குறுங்குழுவாதம் என நான் எண்ணியது உண்மை தான். ஆனால் அண்மையில் இது சார்ந்து என் சிந்தனை முழுக்க மாறி விட்டது. இந்துத்துவ பாசிசம் இன்று ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றை அடையாளம் என தலைவிரித்தாடுகிறது. அதன் படையெடுப்பைத் தடுக்க ஒரேவழி மொழி அடிப்படையில் இனங்கள் தம்மை ஒருங்கிணைப்பது மட்டுமே. குறிப்பாக, தன் நிலத்தையும் மொழியையும் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரிக்க முடியாத இருப்பு என ஒரு மக்கள் தொகை நம்பத் தலைப்படுவது அவசியம். மொழி, இனம் கடந்த மானுடம் என்பது காலாவதியாகி, மக்களை கொத்தடிமைகளாக்குவதற்கான ஒரு கார்ப்பரேட் சதியாக இந்த மொழி, இன வர்த்தமானங்கள் கடந்த கதையாடல் செயல்படுகிறது என்பதை கவனித்து வருகிறேன். இதைத் தான் பின்நவீன தத்துவம் திரும்பத் திரும்ப பேசி வருகிறது.
ரஜினி ஏன் பெரியாரை தன் தலைவராக ஏற்பதில்லை? இதன் பின்னால் ஒரு வரலாறு உள்ளது:
ரஜினியைப் போன்ற ‘வந்தேறிகள்’ ஏன் வள்ளுவம் துவங்கி எந்த தமிழ் பண்பாட்டு, தத்துவ பிரதிகள் குறித்தும் அவருக்கு கலாச்சார ஓர்மை இல்லை என நாம் கேட்க வேண்டும். ஏனென்றால் மனதளவில் அவர் தமிழர் அல்ல. அவரது ஆழ்மனத்தில் மராத்திய (ஓரளவுக்கு கன்னடிய) நினைவுகளே உள்ளன. அதனாலே அவர் தன்னை இந்திய தேசியவாதி என்கிறார். இந்திய தேசியவாதம் எனறால் என்ன? இந்தி மொழியின் அடிப்படையில், வர்ணாசிர அடிப்படையில் ஒற்றை இந்து சமூகமாக மக்களை அடையாளப்படுத்துவது. இந்தி-இந்து எனும் கட்டமைப்பு ரஜினிக்கு அணுக்கமாக இருப்பதைப் போல தமிழ்-பெரியார்-வள்ளுவம் அவருக்கு இருப்பதில்லை. ஏனென்றால் அவர் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவரோ, நமது பண்பாட்டு வேர்களை பகிந்து கொள்பவரோ, இந்த மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த பிடிப்பு கொண்டவரோ அல்ல. கறுப்பாக இருந்தாலும் அவர் திராவிடர் அல்ல. வடக்கே இருக்கும் எந்த கறுப்பரும் திராவிடர் அல்ல. திராவிடர்களின் மத, மொழி ஓர்மைகள் ஆரியர்களின் மத மொழி ஓர்மைகளில் இருந்து வேறானவை. மண்ணுக்கும் மொழிக்குமான தொடர்பு என்பது உளவியல் ரீதியாக உடைக்க முடியாத ஒன்று. உ.தா., மராத்திய தேசியவாதத்துக்கும் சிவாஜிக்குமான தொடர்பு, இந்துக்களை இஸ்லாமிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக சத்திரிய-பிராமணக் கூட்டணியாக கருதுவது, இந்து மறுமலர்ச்சியை தமது இனப்பாதுகாப்புக்கு அவசியமாக நினைப்பது, இந்து-இஸ்லாமிய இருமை இவையெல்லாம் மராத்தியர்களின் கூட்டுமனத்தில் தவிர்க்க முடியாத சங்கதிகள். நீங்கள் அங்கிருந்து கர்நாடகாவுக்கு குடியேறி நிலைப்பெற்று, பிள்ளை பெற்றாலும் ‘சிவாஜி’ ராவ் என்றே உங்கள் மகனுக்கு பெயரிடுவீர்கள். அம்மகன் தமிழகத்துக்கு வந்து ஒரு நட்சத்திர சினிமா நாயகன் ஆனாலும் மனதளவில் அவர் மராத்தியனாக, இந்து மறுமலர்ச்சிக்காக தவிக்கிற, பிராமண கூட்டணிக்காக ஏங்குகிற சத்திரியனாகவே இருப்பான். அவனால் சுலபத்தில் தமிழ் ஓர்மையுடன் செயல்பட முடியாது. அதற்கு அவன் இங்கு பிறந்து தமிழ் பேசி வளர்ந்து, தன் வேர்களை மறந்து பெரியாரையும் வள்ளுவத்தையும் கற்றுத் தேட வேண்டும். நீங்கள் ஒரு தமிழராக மும்பையில் வளர்ந்தாலும் உங்கள் மனத்தில் தமிழ் மண்ணே இருக்கும். ஆழ்மனத்தில் திராவிட ஓர்மை இருந்தே தீரும். மொழிக்கும் இனவுணர்வுக்குமான தொடர்பு என்பது இப்படி வெகு நுட்பமானது. தமிழ் தேசியம் மட்டுமல்ல எல்லா மொழிவழி தேசியங்களும் நுட்பமான ஒரு கூட்டு உளவியலைப் பேசும் கருத்தியல்களே.
தமிழகம் என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டுமேயானது என நான் கூறவில்லை. மாறாக இது ஒரு திராவிட நிலம். இதற்கு ஒரு தனி (ஆரிய-மறுப்பு) வரலாறு, தத்துவம், பண்பாட்டு ஓர்மை உள்ளது. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளை வீட்டில் பேசும் மக்களும் இந்த இனத்தொகுப்பை சேர்ந்தவர்களே. தமிழ் ஒரு திராவிட மொழி. எந்த திராவிட மொழியாளரும் இங்கு வாழலாம், ஆளலாம், ஆனால் ஆரிய மொழியாளர்களை இங்கு ஆளவிட்டால் இந்த மண்ணை அவர்கள் சூறையாடி, ஆரியவாத அத்வைத சிந்தனையை தழைக்க செய்து நம்மை அடிமையாக்குவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ரஜினி ஏன் நம்மை ஆளக் கூடாது என்றால் மனதளவில் அவர் திராவிடர் அல்ல. அவரது உபமனம் கர்நாடகாவிலும் ஆழ்மனத்தின் கலாச்சார நினைவுகள் மகாராஷ்டிராவிலும் உள்ளது. அவரை துல்லியமாக ஒரு கன்னடியர் என்று கூட சொல்ல முடியாது. ஆனால் அம்மக்கள் மீது அவருக்கு (தமிழர்களை விட) கூடுதல் பாசம் உள்ளது. அதே நேரம், ரஜினிக்கு கர்நாடகாவில் உள்ள திராவிட இனக்குழுக்கள் மீது பாசம் இருக்காது. ரஜினி கர்நாடக பாஜகவில் ஒரு தலைவராக இருந்திருந்தால், எடியூரப்பாவைப் போல லிங்காயத்துக்களுக்காக பேசும் ஒரு தலைவராக இருக்க மாட்டார்; பாஜகவுக்கு சாதி-வழி அரசியல் செய்து எடியூரப்பா கொடுக்கும் குடைச்சலை ஒரு போதும் ரஜினி கொடுக்க மாட்டார். ஏனென்றால் என்ன தான் கன்னட மண்ணை நேசித்தாலும் ஆழ்மனத்தில் அவர் கன்னடர் கூட அல்ல. சாதி எதிர்ப்பு அரசியல் அவருக்கு விளங்காது. இந்த மக்களை ஆரியத்துக்கு எதிராக திரளும் சிறு சிறு இனங்களாகத் தோன்றும் சாதிகளாக அல்ல, முகலாயர்களை எதிர்ப்பதற்காக இந்துமதக் குடையின் கீழ் திரட்ட வேண்டிய சத்திரிய இனங்களாகவே அவரது மனம் யோசிக்கும். ஏனென்றால் மராத்தியர்களும் 300-400 ஆண்டுகளின் முகலாய எதிர்ப்பு வரலாற்று நினைவுகள் உண்டு. அதனாலே அவர் இந்து தேசியவாதியாக இருக்கிறார். (இந்தியா மீதான பற்றினால் அல்ல.) எடியூரப்பா ஒரு சங்கியாக இருந்தாலும் அவருக்கு அந்த வரலாற்று நினைவு இல்லை. (ஏனென்றால் வீரசைவ லிங்காயத்துகளுக்கு முகலாய எதிர்ப்பு வரலாற்று நினைவு ரஜினியைப் போல இல்லை.)
மீண்டும் சொல்கிறேன்: ரஜினி போன்றவர்கள் இந்த மண்ணுக்கானவர்கள் அல்ல.

கருத்துகள்