அண்மையில் வெளியான ரவீந்திரன் துரைசாமியின் யுடியூப் பேட்டி ஒன்றை குதூகலமாக பார்த்துக் கொண்டிருந்தேன். திமுக கூட்டணி பலத்த வெற்றி பெறப் போகிறது எனும் தேர்தல் கணிப்புகளால் மனிதர் நொடிந்து போய் பரிதாபமாக இருந்தார். கேள்விகள் வேறு கூர்மையாக வந்தன. அதற்கு அவர் அளித்த வழக்கமான “இந்த சாதிக்கு இவ்வளவு சதவீதம் வாக்குவங்கி, அந்த சாதிக்கு...” ஜோசியக்கார பதில்களுக்கு நடுவே ‘ஏன் மோடியின் பெயரை, படத்தை பாஜக வேட்பாளர்கள் கூட தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்த தயங்குகிறார்கள்?’ எனும் அணுகுண்டு கேள்விக்கான தடுப்பாட்டம் தான் அட்டகாசம்:
‘மோடியின் பெயரை தமிழக பாஜக தலைவர்கள் கெடுத்து விட்டார்கள், அவருடைய நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கவில்லை’ என்று சொல்லி விட்டு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை ஒட்டி அச்சமூக மக்களிடையே பாஜகவுக்கு நல்ல பெயர் ஏற்பட்டது, அதை அறுவடை செய்யும் விதமாக அவர்களை அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தாமல் எடப்பாடி எப்படி தன் சமூக (கவுண்டர்) வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம், இத்தகைய செயல்களையே ‘பாஜக’ தலைமையிலான கூட்டணிக்கு பாதகமாகின்றன என்றார். இந்த social engineering அரசியல் எல்லாம் சரி தான். ஆனால் இதைப் பேசுவதே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அல்ல, அவர்களுடைய வாக்குகளை இந்துத்துவாவுக்கு கொண்டு வரவே ரவீந்திரன் துரைசாமி போன்ற புரோக்கர்கள் துடிக்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எனக்கு புரியாத ஒன்று அவர் எப்படி அதிமுக தலைமை பாஜகவின் சொற்படி தன் கட்சி வேட்பாளர்களை தீர்மானிக்க வேண்டும் எனக் கோருகிறார் என்பதே.
இந்த கூட்டணியில் பாஜகவே மிக மிக சிறிய கட்சி. அதிமுகவாவது நாற்பது, ஐம்பது இடங்களை வெல்லலாம், ஆனால் இரண்டு இடங்களைக் கூட பெறுமா என தொங்கிக் கொண்டிருக்கிறது பாஜக. கூட்டணியில் பாமகவை விட பலவீனமான கட்சியே பாஜக. யாரை வேட்பாளராக அதிமுக தேர்ந்தெடுக்க வேண்டும் என ராமதாஸ் எடப்பாடிக்கு உத்தரவிட முடியுமா? அவரளவுக்கு கூட செல்வாக்கில்லாத பாஜக தலைவர்களால் அது செய்ய முடியும் என மேற்சொன்ன புரோக்கர் நிறுவ விரும்புகிறார். அப்படி அவர்களுடைய கட்டளைக்கு அதிமுக அடிபணியாததே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாம். உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும், நீங்களூம் மனைவியும் ஒரே படுக்கையில் படுக்கலாமா போன்ற விவகாரங்களில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தலையிட்டு முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் எப்படி இவ்வளவு எகத்தாளமாக பேசுகிறார்கள் என்றால் இதுவே பாஜக தலைவர்களின் மனத்தில் உள்ள கருத்தும். அவர்களுடைய முகவரான இவர் அதை வெளிப்படையாக சொல்கிறார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் எப்படி உயிருடன் வாழ்கிறார்கள் என தெரியவில்லை. ஜெயலலிதா சிறை சென்ற போது தீக்குளிக்க முயன்றதெல்லாம் அர்த்தமற்றது, நீங்கள் இப்படியான அத்துமீறல்களை எதிர்த்து ஒரு படத்தையாவது எரியுங்களேன், மானமுள்ளவர்கள் என ஒப்புக் கொள்கிறேன்.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது - அதிமுகவின் மிகப்பெரிய எதிரி திமுக அல்ல, பாஜக தான்.
சரி, இந்த புரோக்கர்கள் இப்படி கோருவதற்கு ஏதாவது ஒரு சிறிய நியாயமாவது உள்ளதா? ஆம், வடக்கிலும், வடகிழக்கிலும் அவர்கள் இந்த ‘ஆள்கடத்தல்’, ரிமோட் கண்டுரோல் அரசியலை கூட்டணிக்குள் செய்திருக்கிறார்கள். எந்த வாக்குவங்கியும் இல்லாத போதும் சிறிய எதிர்க்கட்சிகளை திரட்டி, நிறைய பணத்தை அள்ளி இறைத்து, ஆளுகிற மாநில கட்சிகளின் தலைவரக்ளை விலைக்கு வாங்கி, பெரிய மாநில கட்சிகளில் முழுமையாக பிரதிநுத்துவம் கிடைக்காத சாதிகளை மனத்தை கலைத்து அவர்களை தம் வசம் இழுத்து தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்த வியூகங்களை வகுத்து செயல்படுத்தும் போது மாநிலத்தில் எந்த செல்வாக்கும் இல்லாத போதே பாஜக வெளியில் இருந்து கூட்டணிக் கட்சிகளை கராறாக தம் சொற்படி நடக்க வைத்துள்ளது. மக்களையும் இதை வைத்து சுலபத்தில் ஏமாற்றி இருக்கிறது. ஆனால் தமிழத்தில் வலுவான மாநில எதிர்க்கட்சி இருக்கிறது. வாக்காளர்களும் வடக்கத்திய, வடமாநில தத்திகளை போல் அல்லாமல் அரசியல் உணர்வும், இன உணர்வும் கொண்டவர்களாக, ஆரியர்கள் மீது ஐயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனாலே என்னதான் முயன்றாலும் அதட்டினாலே காலில் விழுகிற எடப்பாடியார் கூட சில நேரங்களில் பாஜகவை எதிர்த்து நின்று தன் விருப்பத்துக்கு முடிவுகள் எடுத்திருக்கிறார். ரவீந்திரன் துரைசாமிகளின் கவலையே தம்மால் முழுமையாக இன்னும் அதிமுகவை “ஆடுரா ராமா” என ஆட வைக்க முடியவில்லை என்பதே. என்னதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற நடிகர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்றாலும் அதிமுகவினர் இங்கிருந்து போனவர்கள் தானே? ஒரு அளவுக்கு மேல் அவர்களுடைய முதுகும் வளையாது, மேலும் அவர்களுக்கு இங்கு ஒரு கட்டமைப்பு, தொண்டர் பலம் உள்ளது. இதையெல்லாம் பாஜகவால் நிர்மூலமாக்க முடியவில்லை.
கொஞ்சமாவது மானமுள்ள அதிமுகவினர் முதலில் இந்த புரோக்கர்களை எதிர்க்க வேண்டும்! ஏனென்றால் உங்களை கேவலப்படுத்தியது அ.ராசா அல்ல, இவர்களைப் போன்ற இந்துத்துவ புரோக்கர்கள் தாம். அவர்கள் உங்களை ஆடு, மாடு போல கால்நடையாக பாவிக்கிறார்கள். இந்த ஆட்சி முடிந்த பிறகு இந்த புரோக்கர்களுக்கு ஊடகங்களில் தடைவிதிக்க வேண்டும். (ஏனென்றால் தொடர்ந்து சாதியை நியாயப்படுத்தி பேசி சனாதனத்தை வளர்க்க முயன்று கொண்டு வரும் இவர் இதற்கு சமூகநீதி என்று வேறு பெயரிட்டு நம்மை அசிங்கப்படுத்துகிறார்.) ரோட்டில் எங்கு பார்த்தாலும் அதிமுக தொண்டர்கள் இவர்களை கட்டி வைத்து அடிக்க வேண்டும்!
பி.கு: இதில் உச்சபட்ச நகைச்சுவை ரவீந்திரன் துரைசாமி பிற பாஜக தலைவர்களை புரோக்கர்கள் என சாடுவது தான். தொழில் போட்டி போல இருக்கிறது!

Comments