முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜியும் கொரோனாவும் - சர்வாதிகாரத் தந்தை / பாசமிகு தந்தை




நடுவண் அரசு கொரோனா தடுப்பூசிகளை தாராளமயப்படுத்தி சந்தைக்கு திறந்து விடுவது, விலையை இஷ்டத்துக்கு நிர்ணயிக்கலாம் என அனுமதி அளிப்பது, (தாம் ஆளும் மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்க) 50% தடுப்பூசிகளை 150 ரூபாய்க்குள் வாங்கும் எனவும், மிச்சத்தை அதிக விலையில் மாநிலங்கள் வாங்கி தம் மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனக் கோருவதும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த அரசின் கடந்த சில ஆண்டுகளின் செயல்பாடுகள் இவ்வாறே இருந்துள்ளன. இந்த அரசு தொடர்ந்து தான் ஆளும் மாநில மக்களை உயர்வாகவும், தனக்கு வாக்களிக்காத மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவுமே நடத்தி வருகிறது. இதை மறைக்க எந்த முயற்சியும் அது எடுப்பதில்லை - சொல்லப்போனால் பாஜக ஆளாத மாநில மக்கள் தாம் ஜியின் அன்பைப் பெறாதவர்கள், அதனாலே கைவிடப்படுகிறோம் எனும் அச்சவுணர்வுக்கு, தவிப்புக்கு ஆளாக வேண்டும் என்றே நடுவண் அரசு விரும்புகிறது. இது ஒரு கோபக்கார தந்தை தன்னை மதித்து பணியாத மகனிடம் பேசவோ அவனுக்கு பணம் அளிக்காமலோ தனிமைப்படுத்துவது, அதற்கும் பணியாத போது பாசத்தை பிற பிள்ளைகளிடம் காட்டி ஒருவித பொறாமையை உண்டு பண்ணப் பார்ப்பது, இது எதுவுமே பலனளிக்காவிட்டால் வீட்டில் இருந்து அடித்து வெளியே தள்ளுவது, சொத்தை தர மாட்டேன் என மிரட்டுவது போன்ற காரியங்களுக்கு சமமானது. இந்த கோபக்கார-பாசக்கார தந்தையின் மனநிலையை கொண்டவர் ஜி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்த கொரோனா சமயத்தில் அது இன்னும் வெளிப்படையாக நிகழ்த்தப்படுகிறது - நடுவண் அரசு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தமிழகத்துக்கு தர மறுக்கிறது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இங்கிருந்து எடுத்து அண்டை மாநிலங்களுக்கு அளிக்கிறது, சாலைகளின் பெரியார், அண்ணா பெயர்களை மாற்றுகிறது, வாக்களிக்காத மக்களிடம் ‘உங்கள் அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவோம்’ என உணர்த்துகிறது, பிரச்சாரத்துக்கு வடமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து அவர்களை இந்தியில் கோஷமிட வைத்து, பைக்குகளில் பெரும் ஊர்வலம் செய்ய வைக்கிறது, எந்த அரசை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அது எங்கள் அரசே என மிரட்டுகிறது, உங்கள் மாநிலத்தில் வட இந்தியர்களை அதிகமாக குடியமர்த்தி, அவர்களுக்கு வீடுகளும் வாக்குரிமையும் அளிப்போம் என்கிறது, மாநிலத்தின் அரசி வேலைகளையும் கணிசமாக வட இந்தியர்களுக்கே அளிக்கிறது, இவை எதுவும் எடுபடவில்லை என்றால் தமிழகத்தின் பெயரை இந்தியில் மாற்றுவோம் என செய்தியை கசிய விடுகிறது. இவை எதுவுமே தற்செயலாக, மறைமுகமாக நடப்பதாக நான் நினைக்கவில்லை; மாறாக இவற்றை தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நினைப்புடனே ஜியின் அரசு செய்கிறது. சொல்லப் போனால் தமிழக பாஜக ஊடக தொடர்பாளர்களே ‘பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு நடுவண் அரசு அனுசரணையாக இருக்கும்’ என வெளிப்படையாகவே பேசுகிறது. இதையே முதல்வர் எடப்பாடியும் சொன்னார். அதாவது எங்களுடன் கூட்டணி அமைத்தால் மத்தியில் பிரதிநுத்துவம் தருவோம், அமைச்சர் பதவி தருவோம் என்றல்ல, ‘உங்களுக்கு சோறு போடுவோம்’ என வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.


நடுவண் அரசுக்கும் தமிழகம் போன்ற ஆட்சி அதிகாரம் பாஜகவுக்கு இல்லாத மாநிலத்துக்குமான உறவு கடத்தியவருக்கும் கடத்தப்பட்டவருக்குமான உறவைப் போல இருப்பதை கவனியுங்கள் - “குணா” படத்தில் கமல் தன் காதலியை கடத்தி வைத்து ஒரு குகையில் வைத்து காதலிப்பார் இல்லையா அப்படித்தான் நடுவண் அரசு நம்மை நடத்துகிறது. ஒன்று காயப் போடும் இல்லாவிட்டால் திருக்குறளை எல்லாம் தப்புத்தப்பாய் சொல்லி “வண்கோம்” என அச்சுறுத்தி காதல் கடிதம் எழுதும். அதை நம்மையே “கண்மணி அன்போடு” என பாடச் சொல்லும். ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கினால் ஒரு கட்டத்தில் நாம் அடங்கி மடிந்து அவர்களுடைய சொற்படி ஆட ஆரம்பிப்போம், நம்மை அடக்கி ஆள்பவரை வழிபடத் துவங்குவோம் என நம்புகிறார்கள். 


ஜியின் இந்த சர்வாதிகாரத் தந்தை அணுகுமுறை மேலும் பல வருடங்கள் தொடருமெனில், 2024இல் இதே அரசு ஆட்சியில் அமரும் எனில், நாம் நம்மை “அபிராமி” என ஒப்புக்கொண்டு வேடமணிவதைத் தவிர வேறு வழியிருக்காது என நினைக்கிறேன். இப்போதே பாருங்கள் - தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் 150 ரூபாய்க்கு கொடுப்பது லாபமே எனச் சொன்னவர்கள் அரசின் அறிவிப்பு வந்தவுடன் ‘எங்களுக்கு 150 ரூ கட்டுப்படியாகாது’ என கைவிரித்து விட்டனர். பல கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு ஒரேயடியாக உச்சம் பெற்று விட்டன. இது 750-1000 ரூபாய்க்கு தலா ஒரு தடுப்பூசியை இவர்கள் விற்கப் போகிறார்கள் எனக் காட்டுகிறது. மாநில அரசிடம் பணமில்லை. நோய்த்தொற்று அதிகரிக்க அதிகரிக்க போதுமான தடுப்பூசிகளை மாநிலமும் வாங்க முடியாமல், தனிப்பட்ட முறையில் தனியார் மருத்துவமனைகளிடம் பணம் செலுத்த மக்களுக்கும் தவிப்பார்கள். மாநில அரசு செயலிழந்து விட்டது என எதிர்க்கட்சிகளும் பாஜக ஆதரவாளர்களும் விமர்சிப்பார்கள், நம் முதுகுக்குப் பின்னால் கைகொட்டி சிரிப்பார்கள். இன்னொரு பக்கம் மருந்து கம்பனிகள் பல லட்சம் கோடிகளை அள்ளுவார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இலவசமாக தடுப்பூசிகள் சுலபமாக கிடைக்கும், அல்லது அவ்வாறு தாம் அளித்துள்ளதாக நடுவண் அரசு கோரிக் கொள்ளும். அடுத்தடுத்த தேர்தல்களில் நம்முடைய பணத்தை வரியாகவும், இது போல பாரபட்சமான முடிவுகளாலும் பிடுங்கி அதை தமக்கு அனுசரணையாக வட இந்திய மாநிலங்களுக்கு கொட்டிக் கொடுத்து அல்லது அவ்வாறு காட்டிக் கொண்டு நம் நடுவண் அரசு தொடர்ந்து பல நாடாளுமன்ற தேர்தல்களை வெல்லும். நமக்கு சர்வாதிகாரத் தந்தையாகவும் வேறு சில தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அன்பான தந்தையாகவும் ஜி இருப்பார். இப்போது நாம் மெல்ல மெல்ல அடிபணிய ஆரம்பிப்போம் என சர்வாதிகாரத் தந்தை நம்புகிறார். இதைத் தான் Stockholm syndrome என்கிறார்கள். 


இன்னொரு பக்கம் இந்த கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நமது ஜியின் தமது தேர்தல் செலவுகளுக்கான பெரும் தொகையை கட்டிங்காக வாங்கியும் விடுவார் என நினைக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் - சர்வாதிகாரத் தந்தையை பொறுத்தமட்டில் - அவருக்கே லாபம்! பிரதமர் தவறிழைத்து விட்டார், கொரோனா நேரத்தில் இந்த அரசு மிகப்பெரிய சொதப்பல்களை செய்து விட்டது, நாட்டை கைகழுவி விட்டது என்பது போன்ற விவாதங்கள் ஒரு பக்கம் ஊடகங்களில் நடப்பதை நான் ஏற்கவில்லை; ஏனென்றால் இந்த நடுவண் அரசு இதையெல்லாம் தெரிந்தே திட்டமிட்டே செய்கிறது. ஒரு கையில் - உலகில் வேறெங்குமே நடைபெறாத அளவில் - கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை இஷ்டத்துக்கு விலை ஏற்றி விற்க அனுமதி அளித்து, தன் கட்சியின் கஜானாவை ஜி கொழிக்க வைக்கிறார்; ஒரு கையில் பல லட்சம் கோடி பணம் என்றால் இன்னொரு கையில் இந்த சூழலை பயன்படுத்தி தன்னை ஆதரிக்காத மக்களை தண்டிக்கும் சாட்டையையும் வைத்திருக்கிறார். கொரோனா அவருக்கு பணமாகவும் சாட்டையாகவும் ஒரே சமயம் இருக்கிறது. மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல், மருந்து இல்லாமல், போதுவ சிகிச்சை வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள், சாகிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் அவரைத் தொடாது; அவை முழுக்க எதிர்க்கட்சிகளின் தவறு, ஆளும் மாநில அரசுகளின் குற்றம் என அவரை ஆதரிக்கும் டிவி சேனல்கள் இப்போதே கூவத் தொடங்கி விட்டார்கள்!


நமது ஜி இப்போது கொரோனா கிருமியிடம் சொல்வதெல்லாம்: “கண்மணி அன்போடு காதலன் நான் ... நான் எழுதும் கடிதம் இல்ல ச்சே கடுதாசி, இல்ல கடிதமே இருக்கட்டும்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...