1. வைரமுத்து விவகாரத்தில் நான் எழுதியுள்ள பதிவுகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் நான் எந்த இடத்திலும் அவரை நியாயப்படுத்தவோ, அவர் குற்றமற்றவர் என நிறுவவோ முயலவில்லை என்பது. ஆனால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டுபவர்களின் தரப்பிலுள்ள போதாமைகளை, முரண்களை அடையாளம் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. எனக்கு வைரமுத்து மீது எந்த அனுதாபமும் இல்லை, அவரை ஆதரிப்பதால் அனுகூலமும் இல்லை, நான் திமுககாரனும் அல்லன், சின்மயி மீது எந்த தனிப்பட்ட காழ்ப்பும் இல்லை. என்னளவில் என் நம்பிக்கைகளுக்கு நான் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் அதே நேரம் ஒரு விவாதத்தின் தர்க்கத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவத்தை அதன் அரசியலுக்கு அளிக்கவில்லை. குற்றம் சாட்டுகிறவரின் தரப்பை பலவீனப்படுத்தி முயற்சியாக என் வாதங்கள் மாறி விட்டன. வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள், அவை எழுப்புகிற ஒரு ஒழுக்கவாத ஆரவாரம், அதன் பின்னுள்ள பாசாங்கு ஆகியவை மீது நான் செலுத்திய கவனத்தை, நான் இந்த அரசியல் மீது செலுத்தவில்லை. தமிழக தேர்தலில் மூன்றாவது அணி போல நான் இவ்விவகாரத்தில் செயல்பட்டதற்கு வருந்துகிறேன். ஆகையால், மீ டூ சர்ச்சை சார்ந்து எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மீ டூ ஆதரவாளர்களின் தாக்கம் அல்ல, எனக்கு இவ்விசயத்தில் ஏற்பட்ட தன்னுணர்வே இம்முடிவுக்கு காரணம். ஏனென்றால அந்த இயக்கம் மீதான என் கேள்விகள், அது நம்மை ஒரு puritan சமூகமாக மாற்றுகிறது எனும் கவலைகள் தொடர்கின்றன. ஆனால் இப்பிரச்சனையின் பின் பாதிக்கப்பட்டவர்களின் வலியுடன் ஒப்பிடுகையில் இந்த தொலைநோக்கு கவலைகள் முக்கியமல்ல.
2. சின்மயி 2018க்குப் பிறகு பாடினாரா, டப் செய்தாரா என்பது குறித்து நான் எழுதிய பதிவில் ஒரு முக்கிய பிழை உள்ளது. அந்த தரவுகளை நான் இணையத்தில் இருந்து எடுத்திருந்தாலும், அவை சில வருடங்களுக்கு முன்பு தான் பாடிய பாடல்கள், டப் செய்த படங்களின் backlogs என சின்மயி அளித்த விளக்கம் சரியானது. இத்தரவுகளை எடுக்கும் போது 2021இல் வெளியான பாடல்கள் அனைத்தும் 2018க்கு முன்பு அவர் பாடியவை என நான் யோசிக்கவில்லை. ஏனென்றால் எல்லா பாடகர்களுக்கும் இத்தகைய தரவுகளே உள்ளன. எனில் 2018க்குப் பிறகு எந்த பாடகருக்கும் பாடல் பதிவே நடக்கவில்லையா, இங்கு அனைத்து பாடல்களும் மூன்று வருடங்களுக்கு பின்னால் பதிவானவை தாமா எனும் ஐயங்கள் எனக்கு இருந்தன. ஆனால் சின்மயியே சொன்ன பிறகு தார்மீக ரீதியாக அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பதிவையும் நீக்குகிறேன். (வைரமுத்துவின் பாடல்களை அவர் மிகக்குறைவாகவே பாடியிருக்கிறார் எனும் பதிவில் எந்த தகவல் பிழையும் இல்லாததால் அதை நீக்கவில்லை.)
பதிவை நீக்கும்படி சின்மயி கோரவில்லை என்றாலும் தவறான தகவல்களை அது கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகிறது; நான் அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

Comments