முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாசம் ஏன் போலியானது? ஏன் தியாகத்தை கண்டு அஞ்ச வேண்டும்?

“ஆறு பெருகி வரின் அணை போடலாகும்

அன்பின் பாதையில் அணை இடலாமோ?”


“கண்ணும் கண்ணும் கலந்து” பாடல், “வஞ்சிக்கோட்டை வாலிபன்”


“மதத்தின் குரூரத்திற்கென ஒரு நெடிய ஏணி உள்ளது; அதன் பல படிகளில் மூன்று முக்கியமானவை. மனிதர் தமது கடவுளர்க்கு என நரபலி கொடுத்ததுண்டு, தாம் மிகவும் நேசிப்பவரைக் கூட பலிகொடுத்ததுண்டு … அதன் பிறகு மானுட அறத்தின் காலகட்டம் தோன்றிய போது அவர்கள் தமது வலுவான உள்ளுணர்வுகளை, தமது ‘இயல்பை’, தமது கடவுளுக்கு தியாகம் செய்தனர் … இறுதியாக: தியாகம் செய்ய என்ன மிச்சமிருந்தது? … மனிதர் தமது கடவுளரையே தியாகம் செய்தனர், கற்களை, முட்டாள்தனத்தை, புவியீர்ப்பை, விதியை, தம் மீதான உச்சபட்ச குரூரத்தின் வெளிப்பாடாக இன்மையை எல்லாம் வழிபட நேரவில்லையா?”


- நீட்சே, “Beyond Good and Evil”, அத்தியாயம் III, 1886


“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உள்ளது. இது உண்மையல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் தான் அதை முழுங்குவதை தவிர்க்க முடியாத தூண்டில் இரை ஒன்று உள்ளது. ஒவ்வொருவரையும் தம் வசப்படுத்த அந்த இரைக்கு மானுடத்தின், பெருந்தன்மையின், மென்மையின், தியாகத்தின் பளபளப்பை மட்டும் கொடுத்தால் போதும்; பிறகு அவர்கள் எதையும் முழுங்குவார்கள். அவர்களுடைய ஆன்மாக்களுக்கு இவையே ஐஸிங், உணவுத்துண்டு; வேறு ஆன்மாக்களுக்கு வேறு விசயங்கள் இப்படி உண்டு.”


- நீட்சே, “Human, All Too Human: A Book for Free Spirits”

உலகில் மிக ஆபத்தான விசயம் பாசம், அதுவும் ரத்த பாசம் - இது தான் அண்மையில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம். அது ஒரு கூர்மையான இருமுனைக் கத்தி, நம்மைப் பாதுகாப்பதாக தோற்றம் அளித்தபடியே இருக்கும் அது ஒருநாள் நம்மை அறுக்கவும் கூடும். கூர்மையான கத்திகளுக்கு என்று ஒரு மனம், பிரக்ஞை உண்டு. அது நம்மை செலுத்தியபடியே இருக்கும் என சொல்லுவார்கள். அது பாசத்துக்கும் பொருந்தும். 


பாசத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதர்களை அவர்கள் இருக்கிற சந்தர்ப்பம், அவர்களுடைய அப்போதைய நோக்கம், நாட்டத்தின் அடிப்படையிலே மதிப்பிட வேண்டும். எனக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்று தேவைப்படுகிறது, அந்த சூழலானது சினிமாவில், நாடகத்தில் வருகிற ஒரு காட்சியை ஒத்தது. நோக்கம் ஒரு பாத்திரத்தின் தேவையை ஒத்தது. இந்த இரண்டும் எப்படி ஒரு பாத்திரத்தை குறிப்பிட்ட வசனங்களை பேச வைக்கிறதோ, எப்படி குறிப்பிட்ட விதமாக நடந்து கொள்ள வைக்கிறதோ அப்படியே மனிதர்களையும் அவர்களுடைய சூழலும் நோக்கமும் வழிநடத்துகிறது. இந்த இரண்டையும் கடந்து மனிதனுக்குள் எதுவுமே இல்லை. 


சுயநலத்தின் உச்சபட்சமான வடிவமே குடும்ப அமைப்பு. ஆனால் அந்த உண்மை புலப்படாமல் இருக்கும் பொருட்டே பாசம் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தியாகம் எனும் மற்றொரு போலித்தனமும் அடுத்து முகமூடி அணிந்து கைகால்களை உதறியபடி வருகிறது. படத்தின் பின்னுள்ள தன்னலத்தை நாம் கண்டுபிடிக்கும் போது நமது கவனத்தை சிதறடிக்க தியாகம் குறுக்கே வருகிறது. தியாகம் ஒரு அப்பாலைத் தன்மை கொண்ட கட்டமைப்பு (a metaphysical construct). நீங்கள் ஒன்றாக இருந்தபடியே மற்றொன்றாக மாறுவதாக உங்களை ஏமாற்றுகிற தந்திரம். நீங்கள் உங்கள் காதலியின் மகிழ்ச்சிக்காக நெடுந்தூரம் பயணித்து செல்கிறீர்கள். அப்போது தியாக உணர்வு தோன்றி நீங்கள் உங்களைக் கடந்து மற்றொருவருக்காக வாழ்வதாக, நீங்கள் நீங்கள் அல்லாமல் ஆவதாக ஒரு உணர்வை அளிக்கிறது. ஜிவ்வென்ற உணர்வு அது. தினமும் அலுப்பாக வேலைக்கு சென்று வரும் ஒருவருக்கு தீடீரென என் குழந்தையின் படிப்புக்காக உழைக்கணும் எனும் முனைப்பு வந்தால் பிறகு வேலை செய்வதே ஒரு உன்னதமான கடமை ஆகி விடும். நாளை அந்த குழந்தை வளர்ந்ததும் அதற்காக கடனை வாங்கி அதைத் தீர்க்க போராடும் போதும் இந்த தியாகி உணர்வே உங்களை மகிழ்ச்சியாக்கும். அந்த குழந்தை நீங்கள் இனி தன் வாழ்வில் வேண்டாம் என சொல்லும் போது தான் முதன்முதலாக ஜெர்க் ஆகி நிற்பீர்கள். ஏனென்றால் அங்கே தியாகத்துக்கு இடமில்லாமல் போய் விடும். கணவன்-மனைவி, அம்மா-மகன் ஆகிய உறவுகளிலும் இதுவே நடக்கிறது. ஆளாளுக்கு நான் தியாகம் செய்கிறேன், நீ செய்யாதே எனத் தவிக்கிறோம். ஏனென்றால் இல்லாவிட்டால் உண்மை பல்லிளிக்கும். ஏனென்றால் நாம் நாமாக இருந்தாக வேண்டும். அதில் நமக்கு ஒரு பயம் உள்ளது.


இதற்குப் பதிலாக மனிதர்களை தியாகமும், பாசமும் அற்றவர்களாக அந்தந்த சமயத்தில் சந்தர்பத்தில் தேவைப்படுகிற காரியங்களுக்காக ஓடுகிறவர்களாகக் கண்டால் வாழ்க்கை தெளிவாக இருக்கும். பாசத்தை, தியாகத்தை எதிர்பாராதவர்களிடத்தே மனிதர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். என்னதான் நாம் பண்பாட்டளவில் பாசக்காரர்கள் என்றாலும் உள்ளுக்குள் அது ஒரு பாசாங்கு என்று நமக்குத் தெரியும். நமக்கு அந்த மூச்சுமுட்டுதல் இல்லாத நிஜமான உறவுகள் தேவைப்படுகின்றன.


பாசத்தை, அன்பைக் காட்டும் போது, ஒரு வேலையை செய்து கொடுக்கும் போது “இது இப்போதைக்கு தேவையிருக்கிறது, அதனால் செய்கிறேன்” என உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மிக உஷாராக இருந்தால் ஒழிய நாம் நொடியில் இந்த பாசச்சேற்றில் புதைந்து விடுவோம்.


 யாராவது ‘நான் உனக்காக வாழ்கிறேன்’ என்று சொன்னால் அவர்களிடம் இருந்து ஓடி வந்து விடுங்கள். ஆபத்தானவர்கள் அவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...