Skip to main content

குத்துச்சண்டையும் காயமும்



ஸ்பாரிங் என்றால் பயிற்சி குத்துச்சண்டை. கடந்த வாரம் முழுக்க எங்களுடைய ஜிம்மில் ஸ்பாரிங் நடந்து கொண்டிருந்தது. சில நேரம் மதியம் ஆரம்பித்து சிறு இடைவெளிகளுக்குப் பின்னர் இரவு பன்னிரெண்டு மணி வரை நடந்தது. தன் மாணவர்களுடன் எங்கள் மாஸ்டர் ஆன்டனி ஓயாமல் ஸ்பார் செய்து கொண்டிருந்தார். கடந்த வெள்ளைக்கிழமை எனக்கும் ஸ்பாரிங் உண்டு என அதற்கு முந்தின நாள் சொல்லியிருந்தார். ஒரு பக்கம் கிளர்ச்சி இன்னொரு பக்கம் பயம். அவர் நான் பயிற்சி செய்யும் போது தலையைப் பாதுகாக்காமல், guarding செய்ய மறந்தால், focus padஆல் நொங்கென காதில் அடிப்பார். அதுவே ஒரு கணம் தலைசுற்றும். ஸ்பாரிங்கின் போது இவரிடம் குத்து வாங்கினால் என்னாவது என பயந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்குபயங்கரமாகஇல்லை


மாஸ்டர் என்னை முதலில் நண்பர்களின் ஸ்பாரிங்கை கவனிக்க சொன்னார். அதன் பிறகு என்னிடம் மூன்று முறை ஸ்பாரிங் இடைவெளிகள் விட்டு செய்தார்.

 என்னால் நின்று குத்த முடியாது என்பதால் - அப்படி செய்தால் என் சமநிலையை இழந்து விடுவேன், ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்த இயலாது - அவர் எனக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டர். நான் ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். எங்களிடையே ஒரு கையை நீட்டி குத்துவிடும் அளவுக்கு தூரம். எங்களுடைய ஸ்பாரிங் சக்கர நாற்காலி குத்துச்சண்டை பாணியில் ஆரம்பித்தது (யுடியூபில் கிடைக்கும், பாருங்கள்.) - அதாவது காலாட்டம் இல்லாத, முழுக்க தலை ஆட்டம், guarding, குத்துக்களைக் கொண்ட பயிற்சிப் போட்டி. மொத்தமாக மூன்று நிமிடங்கள்


அவர் தயாரானதும் தன் கையுறைக் கைகளால் என் கையுறைக் கைகளைத் தொட்டு ஆரம்பிக்கலாம் என சைகை காட்ட வேண்டும். எனக்கு அது தெரியாது. ஏன் காத்திருக்கிறார், சரியான அவகாசம் இது என எண்ணி டொங்கென ஒரு குத்தை அவரது நெற்றியில் விட்டேன். அதன் பிறகு தான் அடடா என சங்கடமாகி விட்டது. திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டேன். அவர் ஒருபோதும் குத்துச்சண்டையில் மன்னிப்பு கேட்கலாகாது என எச்சரித்தார். அடிப்பதும், அடிவாங்குவதுமே போட்டி. ஆரம்பித்தோம். அவர் முதலில் கார்டுக்குப் போனார். நான் தொடர்ந்து அவரது தலையைப் பாதுகாக்கும் கையுறைகள் மேலே குத்திக் கொண்டிருந்தேன். என்னால் ஊடுருவ முடியவில்லை. ஒரு நிமிடத்தில் களைத்துப் போனேன். இப்போது அவர் திரும்பக் குத்தினார். அவரது வேகம் அபாரமானது. முகத்தில் குத்திவிட்டு, ஜாபுடன் சேர்ந்து ஒரு ஹூக் பண்ணி பின்னந்தலையை தாக்குவார். தோளில் குத்துவார், கவனம் அங்கே போனதும் தலையில் குத்துவார். இதெல்லாம் நொடிகளில் நடக்கின்றன. எனக்கு மூச்சு வாங்கியதால் அவரைத் தடுக்கவே முடியவில்லை. அதனால் ஆட்டத்தை நிறுத்தி விட்டேன். “முதலிலே எல்லா பஞ்ச்களையும் இறக்கினால் இப்படித்தான் மூச்சு வாங்கும்.” என்று சொல்லி விட்டு அடுத்த ஸ்பாரிங்காக ரிங்குக்குள் போய் விட்டார்


என்னுடைய இரண்டாவது ஸ்பாரிங்கின் போது நான் ஒரு திட்டத்துடன் தயாராக இருந்தேன். உடனடியாக, ஒரே இடத்தில் மட்டும் குத்தாமல் முதலில் சில வினாடிகள் கார்ட் எடுத்தேன். கழுத்தில் ஒரு ஜேப், காதுக்கு மேல் கடைநுதலெலும்பு இருப்பதாக சொல்லப்படும் பகுதி இருக்கிறதல்லவா அங்கொரு ஹூக் விட்டு அவர் எதிர்பாராத போது முகத்தில் குத்தினேன். இப்படி மூன்று முறை அவரது பாதுகாப்பு அரணை முறியடித்து முகத்தில் அடித்தேன். இப்போது அவர் திரும்பக் குத்த ஆரம்பித்தார். அவரது குத்துக்களின் வேகத்தை சமாளித்து கார்ட் பண்ணுவது மிக மிக கடினம். இதை நான் என்னுடைய அனுபவத்திலும் பிற நண்பர்களுடன் அவர் ஸ்பாரிங் செய்ததை வைத்தும் கணித்திருந்தேன். தடுத்தாடினால் நான் காலி. அதனால் ஐந்து வினாடிகளுக்கு மேல் நான் தடுத்தாடவில்லை. முன்னே போய் தொடர்ந்து ஐந்து-ஐந்து என ஜேப்களை வேகமாக அவரது முகத்தில் விட்டேன். பெரிய நேர்த்தி எல்லாம் இல்லை, முரட்டு எகிறல் தான், ஆனால் பத்து வினாடிகளில் அவர் பின்வாங்கி சாய்ந்தார், சிரித்தார், பிறகு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஸ்பாரிங் தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்கள் முடிந்ததும் நான் களைக்கவில்லை


மூன்றாவது ஸ்பாரிங்கை நாங்கள் பாயிண்ட்ஸ் அடிப்படையில் வைத்துக் கொண்டோம். முகத்தில் குத்தினால் இவ்வளவு பாயிண்ட்ஸ், உடம்பில் என்றால் இவ்வளவு என்று. இந்த முறை துவக்கம் முக்கியம் என முடிவெடுத்து முதலிலேயே குத்த ஆரம்பித்தேன். உடம்பில் குத்தி விட்டு ஹூக் செய்யப் பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போல அவருடைய குத்துக்கள் என்னுடைய தலையில் விழுந்தன. ஆனால் அந்த ரிஸ்க் எடுக்காமல் அவரை நானும் அடிக்க முடியாது. கடந்த முறை பண்ணின தொடர் வேக குத்துக்களையும் விட்டேன். அவருடைய துல்லியமான குத்துக்கள் படுவேகமாக என்னை முறியடித்தன என்றாலும் என்னுடைய வேகமாக குத்துக்களும் அவருடைய முகத்தை வலுவாகத் தொட்டன.


 நான்சார் தான் வென்றார்என்று கூறினேன், அவர் ரொம்ப பணிவாகநீங்க தான் ஜெயிச்சீங்கஎன்றார். அவருடைய திறனுக்கும் அனுபவத்துக்கும் வலிமைக்கும் என்னை ஒரே நொடியில் நாக் அவுட் செய்திருக்க முடியும். ஆனால் நான் எவ்வளவு தூரம் போகிறேன் எனப் பார்ப்பதற்காக தன் திறனில் 5% தான் ஆடியிருக்கிறார் என அறிவேன். எனக்கு நெகிழ்வாகவும் சற்று குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். சுற்றி நின்ற நண்பர்களும் மாஸ்டரும் என்னுடைய வேகத்தை, game awareness, தொடர்குத்துகளை, ஒவ்வொரு குத்துக்குப் பிறகும் என் கைகள் வேகமாக தலைக்கு வந்து கார்ட் எடுப்பதை சிறிது பாராட்டினார்கள். இதெல்லாம் எனக்கே தெரியவில்லையே என ஆச்சரியப்பட்டேன். சிறிது நேரம் மற்றவர்களின் ஸ்பாரிங்கைப் பார்த்து விட்டு கிளம்பினேன்.


வழியெல்லாம் பைக்கில் ஸ்பாரிங்கில் எந்த இடத்தில் என்ன நடந்தது என மனதில் திரட்ட முயன்றேன். ஆச்சரியமாக என்னால் துல்லியமாக நினைவு கொள்ள் முடியவில்லை. சண்டைப் பயிற்சியின் போது நமது இன்னொரு மனமே விழித்துக் கொள்கிறது. என்ன நடக்கிறது, எப்படி சண்டை செய்கிறோம் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து நாம் செய்வதில்லை. மனதில் மழை முடிந்த பின் தலையில் விட்டுவிட்டு விழும் சாரல் போல சில நினைவுத்துளிகளே மீதம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு என்ன நடந்திருக்கும் என ஒருவாறு தொகுத்துக் கொண்டு அடுத்த ஸ்பாரிங்கில் எந்த இடத்தில் எப்படி அடிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டு வண்டியோட்டினேன். சாலையில் எந்த வண்டி போகிறது, வாகன ஒலிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. என் மனம் முழுக்க ஸ்பாரிங் தான் நடந்து கொண்டிருந்தது. எனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தேன்.


இரவில் மிகச்சன்னமான ஒரு தோள் வலி. அடுத்த நாள் அது பரவி தோளுக்கு மேலுள்ள பகுதியில் ஒரு மெல்லிய அழற்சியாகியது. உட்கார்வது, எழுதுவது உடல் அலுப்பைத் தந்தது. எலும்பு மூட்டு மருத்துவரைப் பார்த்தேன். எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுழற்றிக் கச்சை (rotator cuff) காயம் ஏற்பட்ட போது சிறப்பாக சிகிச்சை அளித்தவர். அவர் என்னை பல கோணங்களில் கையைத் திருப்பக் கேட்டு விட்டு ஒரு சிறிய காயம் மட்டுமேசுழற்றிக் கச்சையை ஒட்டிய தசைகள் ஸ்பாரிங்கின் போது சற்று அதிகமாக இழுபட்டிருக்கும், சண்டைப் பயிற்சியின் போது அட்ரெலினின் சுரப்பினால் எனக்கு வலி தெரிந்திருக்காது, இரவானதும் வலி வெளிவந்திருக்கும் என்றார். மருந்துகள் தந்து விட்டு, இது ஸ்பாரிங்கின் போது இயல்பு தான், தோள் தசைகள் வலுவடையும் வரை ஸ்பாரிங் மட்டும் வேண்டாம் என்றார்

அதனால் இனி அடுத்த இரு மாதங்கள் வெறும் குத்துப்பையிலும், focus padஇலும் மட்டுமே பயிற்சி. ஸ்பாரிங் பண்ண முடியாது. நான் அதை மிகவும் மிஸ் பண்ணப் போகிறேன்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...