Skip to main content

"அச்சே தின்" - ஒரு அறிமுகம்

 


இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன். ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது. அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது

நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது, அது பின்னர் விசாரணை, சிறைவாசம், படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது, இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள். இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக, ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள்; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன். முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள். அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்பதாக உள்ளுக்குள் பதறுகிறார்கள். அரசின் கண்காணிப்பை அவர்கள் தமக்குள் உணர ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மையே கண்காணிக்கிறார்கள். அவர்கள் தெரியாமலே சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் உடனே தம்மைச் சுற்றி ஒரு கவலையுடன் பார்க்கிறார்கள். பாதியிலேயே பேச்சை முறிக்கிறார்கள். நானும் மெல்ல மெல்ல இந்த மௌனத்தில் ஆழ்ந்துவிட்டேன்

இது ஒரு தனிமனித மௌனம் அல்ல, இது ஒரு கூட்டு மௌனம். இந்த சமூகம் மெல்ல மெல்ல பாஜக முகமூடிகளுக்கு ஏற்ப தன் முகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. அது மெல்ல மெல்ல பாஜகவின் குரலை மிமிக்றி செய்வதே தனக்குப் பாதுகாப்பு எனும் நினைக்கத் தொடங்கியுள்ளது. மோடியை எதிர்ப்பதை நம்முடன் இருப்பவர்களே இன்று தந்தையை அடிப்பதைப் போல, தாயைப் புணர்வதைப் போல ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குக் காரணம் மோடியை விமர்சிப்பவர்கள் தனது பிளவுபட்ட மனத்தின் அடக்கி வைக்கப்பட்ட குரலே என இந்த சமூகம் புரிந்து கொள்வதில்லை என்பதே. வரலாற்றில் நாம் இவ்வளவு நோயுற்று முன்பு இருந்ததில்லை. இந்த சமூகத்திடம் போய் மோடியை விமர்சித்து உரையாடுவது அதை அம்பலப்படுத்துவதற்கு சமானமானது. அது இந்த சமூகத்தை கடுமையாக சீண்டும். அப்போது இச்சமூகம் வன்மத்துடன் எதிர்வினையாற்றும். சட்டத்தின், போலீசின் கரங்களில் இருந்து தப்பிக்கிறவர்களை இச்சமூகம் இனி மென்னியை நெரிக்கும் எனத் தோன்றுகிறது. இங்கிருந்து கொண்டு இந்நூலை வெளியிடுவது ஆபத்தானது எனத் தெரிந்தே தான் நான் செய்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...